நமது அன்றாட வாழ்க்கை நலமாய் அமைய மனிதர்கள் மட்டும் அல்லாது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுமே நமது நலனுக்காகப் பாடுபடுகின்றன. எனவே, நாம் சிற்றுயிர்கள் அனைத்தையுமே வழிபட வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை பூரணத்துவம் பெறும். சிற்றுயிர்களை வழிபடுவதால் ஏற்படும் உங்களுக்குத் தெரிந்த, தெரியாத பலன்களை இங்கே அளித்துள்ளோம்.
திருக்கோயிலில் உள்ள எறும்புகளுக்கு உணவிடுவதால் கடன் தொல்லைகள் தீரும். திருச்சி திருநெடுங்களம் திருக்கோயிலில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு ஒருவருக்கு வர வேண்டிய நியாயமான சொத்தைத் திரும்ப பெற்றுத் தரும்.
நாய்களுக்கு ரொட்டி, பிஸ்கட், கடலை மிட்டாய் போன்றவற்றை உணவாக வழங்குவதால் கால தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும். நன்றி மறவா நன்னிலையை அடைவோம்.
கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவாக வழங்கி வந்தால் நியாயமான வழியில் செல்வம் பெருகும். கடுமையான தோல் வியாதிகளின் வேகம் குறையும்.
பல்லிகளுக்கு தலைமை குருவாக இருப்பவர் சுத்தோதக மகரிஷி. இவர் உறையும் வந்தவாசி திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தால் வீடுகளில் உலவும் நற்சக்திகளை செய்வினை, ஏவல்கள் மூலம் கட்டி வைத்திருந்தால் அத்தகைய குறைபாடுகள் நீங்கும். வாசிக் கலையில் தேர்ச்சி கிட்டும்.
முதலைகளுக்கு உணவிட்டு வந்தால் நல்ல மழைப் பொழிவு ஏற்படும்.
பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு, அரிசி கழுநீர், கீரை வகைகளை அளித்து வந்தால் சந்ததிகள் பெருகும்.
எருமை மாடுகளுக்கு மக நட்சத்திரத்தன்று கீரை அளித்து வந்தால் எம பயம் அகலும்.
குரங்குகளுக்கு வேர்க்கடலையை உணவாக அளித்து வந்தால் குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை வளரும்.
மயில்களுக்குத் தான்ய உணவுகளை வழங்கி வந்தால் காமக் குற்றங்களிலிருந்து விடுபடலாம்.
மைனாக்களுக்கு நெல் மணிகளை அளித்து வந்தால் குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேற்றுமை அகலும்.
அணில்களுக்கு துவாதசி அன்று வாதாங் கொட்டை, முந்திரிப் பருப்பு அளித்து வந்தால் முறையான காதல் வெற்றி பெறும்.
பச்சைக் கிளிகளுக்கு கொவ்வைப் பழங்களை அளித்து வந்தால் தேவதைகள், தெய்வங்களின் தரிசனம் கிட்டும்.
கருடன், பருந்துகளுக்கு உணவிட்டு வந்தால் இறுதிக் காலத்தில் பாயில் கிடந்து நோயில் வாடும் நிலை ஏற்படாது.
பாம்புப் புற்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி பால் வார்த்து வந்தால் திருமண தோஷங்களுக்கு பரிகார முறைகள் கிட்டும்.
யானைகளுக்கு கேழ்வரகு களி, கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுகளை குறைந்தது இரண்டு டன் அளித்து வழிபடுதலால் சிறப்பான புத்திக் கூர்மை ஏற்படும்.
புறாக்களுக்கு கோதுமை, கம்பு போன்ற தானியங்களை அளித்து வந்தால் அயல் நாடுகளில் வசிக்கும் நமது உறவினர் நலம் பெறுவர்.
வெண்ணிற குதிரைகளுக்கு அவித்த கொள் அளித்து வந்தால் குழந்தைகள் படிப்பில் முன்னேறுவர். மந்த புத்தி அகலும்.