‘நமசிவாய’ மந்திரத்தை இப்படி உச்சரிக்க மிகப்பெரிய பலன் கிடைக்கும்!

‘நமசிவாய’ மந்திரத்தை இப்படி உச்சரிக்க மிகப்பெரிய பலன் கிடைக்கும்!

‘ஓம் நமசிவாய’ அல்லது ‘சிவாயநம’ மந்திரத்தை இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என ஒரு முறை உள்ளது. ‘ஓம் நமசிவாய’ என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானமும் செய்வார்கள். யோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை, ‘ஸ்தூல பஞ்சாட்சரம்’ என்றும், ‘சூக்கும பஞ்சாட்சரம்’ என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தூல பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது. யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்திச் சொல்வதற்குத் தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம் நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக, அது சூக்குமமாகி விடுகிறது.

பிராணாயாமம் செய்கிறபோது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிறபோது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட, மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.

மந்திரம் சூக்குமம் ஆகும்போது மாத்திரை குறைந்து விடுகிறது. உச்சரிப்பதற்கு எளிதாகி விடுகிறது. பிராணாயாமம் பயிலும்போது குரு சாதகனுக்கு ஏற்றவாறு இந்த மந்திரங்களை மாற்றித் தருவார். எந்தெந்த சாதகனுக்கு எத்தகைய பிராணாயாமம், அதற்கேற்ற மந்திரங்கள் எது என்பதை குருவே தீர்மானிக்க வேண்டும். மற்றபடி பக்தியில் திளைத்திருப்பவர்கள் ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை வேண்டியவாறு உச்சரிக்கலாம்.

‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாய’ என்ற வரிகளுக்கிணங்க பஞ்சாட்சரத்தை எவ்வாறு வேண்டுமானாலும் உச்சரிக்கலாம். பக்தி என்ற விஷயத்தைப் பொறுத்தவரை இல்லறத்தான் என்றோ, துறவரத்தான் என்றோ பாகுபாடு ஏதும் இல்லை.

குருவிடமிருந்து உபதேசம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராதபோது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது. எல்லா மந்திரமும், ‘ஓம்’ என்று தொடங்கக் காரணம் என்னவென்று கீழே தெரிந்து கொள்ளலாம்.

ஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது, ‘ஓம்' என்ற சொல். அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்' என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. ‘அ' பிரம்மனையும், ‘உ' விஷ்ணுவையும், ‘ம' ருத்ரனையும், ‘ம்' சக்தியையும், அதன் நாதம் சிவ பரம்பொருளையும் குறிக்கும்.

இந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது ‘ஓம்.' கலை ஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றுக்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

எனவேதான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்' என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது' என்று பொருள். ஆம்... கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை ‘ஓம்' என்று கூறி பிரார்த்திப்பர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com