இச்சிவாலயம் நவ கைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.
சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் இக்கோவில் நவ கயிலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. இங்குள்ள இறைவன், அம்மைநாதர் சுவாமி என்ற கயிலாயநாத சுவாமியாகவும், இறைவி ஆவுடையம்மனாகவும் அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த ஆலயத்திற்கு தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. கிழக்கு முக வாசலோடு அழகிய சிறிய ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவிலின் வடக்குப் பகுதியில் அம்மைநாதர் சுவாமியும், தெற்கு பகுதியில் ஆவுடையம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாவார். தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர், சிவகாமி அம்மையுடனும், காரைக்கால் அம்மையுடனும் உள்ளார். சூரியன், சந்திரன் ஆகியோர் மேற்கு நோக்கி உள்ளனர்.
கோவிலின் மேற்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்மனும், வடமேற்கில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையும், கஜலட்சுமியும், சனீஸ்வரரும், சண்டிகேஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். தலவிருட்சம் ஆலமரம்.
இத்தலத்து இறைவனை வழிபடுதல், தஞ்சை அருகே உள்ள திங்களூர் சிவபெருமானை வழிபடுதலுக்கு சமமானதாகும்.
இந்தக் கோவிலில் சிவபெருமான், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். அரிசி வியாபாரிகள், தங்களது வியாபாரம் செழிக்க இந்தக் கோவிலுக்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்து வருகின்றனர்.
அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள்தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.
திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மகாதேவி. இங்கு தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது அம்மநாதர் சுவாமி திருக்கோவில்.