
முறப்பநாடு கைலாசநாதர் கோவில் நவகைலாயங்களில் ஐந்தாவது கைலாயமாக விளங்குகிறது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி, குதிரை முகத்துடன் இருக்கிறது. மேலும் பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். இக்கோவில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு என்ற ஊரில் அமைந்துள்ளது.
சோழ மன்னனுக்கு கர்மப்பலனாக குதிரை முகம் கொண்ட மகள் பிறந்தாள். இதனால் வேதனை அடைந்த மன்னன் பல சிவாலயங்களில் வழிப்பட்டார். மன்னனின் பக்தியைக் கண்ட சிவப்பெருமான் அவரின் கனவில் தோன்றி ‘முறப்பநாட்டில் உள்ள தாமிரபரணியில் நீராடி அங்கே லிங்க வடிவில் இருக்கும் என்னை வணங்கு!’ என்றுக் கூறி மறைந்தார்.
எனவே, மன்னனும் முறப்பநாடு சென்று ஆற்றில் நீராடி சிவனை வணங்க குழந்தையின் முகம் இயல்பானது. இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னர் அங்கே சிவபெருமானுக்கு கோவில் கட்டினார். இத்தலத்தில் தான் உரோமச முனிவர் தாமிரபரணி கரையில் லிங்கம் நிறுவ அகத்திய முனிவரிடம் இடம் கேட்டார். அகத்தியரும், ‘தாமரைகளை நதியில் விடு. அவை சேரும் இடத்தில் லிங்கம் நிறுவு’ என்று கூறினார். அதுப்போலவே உரோமச முனிவரும் மலர்களை விட அவை ஒன்பது இடங்களில் சேர்ந்தன.
அங்கே அவர் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். இவை நவகைலாயங்கள் என்று பெயர் பெற்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவகிரகத்திற்கு உரியதாகும். ஐந்தாவதான முறப்பநாடு குருவிற்கு உரியதாகும். இங்கு தாமிரபரணி வடக்கில் இருந்து தெற்கு பாய்வதால், இங்கு நீராடுவது கங்கைக்கு இணையாக சொல்லப்படுகிறது.
இத்தலத்தில் சிவனுக்கு நேர்எதிரே சக்தி வாய்ந்த குதிரைமுக நந்தி உள்ளது. இதை வணங்கினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமான் ‘கைலாசநாதர்’ என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சுவாமிக்கு கொண்டைக்கடலை நைவேத்தியமாகவும், மஞ்சள் வஸ்திரமும் அணிவிக்கப்படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இக்கோவிலில் வந்து வழிப்படலாம்.
இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். ஒருவர் நாய் வாகனத்துடன் காட்சித் தருகிறார். இன்னொருவரிடம் நாய் வாகனம் இல்லை. நாய் வாகனத்துடன் காட்சித் தருபவரை ‘காலபைரவர்’ என்றும் வாகனம் இல்லாதவரை ‘வீரபைரவர்’ என்றும் கூறுகின்றனர். கையிலே காசு தங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொள்வது நன்மையைத் தரும்.