தினமும் பல வீடுகளில் அதிகாலையில், ''சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர்வேலோன்'’ என்ற கந்த சஷ்டி கவசம் ஒலிக்கும். அந்த அற்புதமான பாடல் பாடப் பெற்ற திருத்தலம் சென்னிமலை என்ற ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில்தான்.
முருக பக்தர்கள் மனம் உருகிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தைப் பாலன் தேவராய சுவாமிகள் என்பவர் இயற்றினார். இவரிடம் கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை தான் சரியான இடம் என முருகன் உணர்த்த, அவர் அங்கே வந்து அரங்கேற்றினார் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த தலம் கந்தசஷ்டி பிறந்த தலமாகப் போற்றப்படுகிறது.
திருக்கோவில் அமைவிடம்;
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது சென்னிமலை முருகன் திருக்கோவில். கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்படிகள் கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது. மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. இங்குள்ள மூலவர் சுப்பிரமணிய சுவாமி (தண்டாயுதபாணி) என்று அழைக்கப்படுகிறார் தாயார் அமிர்தவல்லி மற்றும் சுந்தரவல்லி.
கோவில் சிறப்புகள்;
இந்த திருக்கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்கிற அதிசயமும் நிகழ்கிறது. அனைத்து கோயில்களிலும் விநாயகருக்கு முதல் பூஜை செய்வதுதான் வழக்கம். ஆனால் இந்த கோயிலில் முதலில் மூலவர் முருகனுக்கு நைவேத்திய பூஜை முடிந்த பின்பு சன்னதியில் வீற்றிருக்கும் விநாயகருக்குப் பூஜை செய்யப்படும். ஞானப்பழத்தால் கோபித்துக் கொண்டு மலை மேல் முருகன் இருப்பதால் அவரை சாந்தப்படுத்தும் வகையில் தொன்று தொட்டு முதல் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
மலைக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி, தெய்வானை சன்னதி தனியாகவும், இதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்பது ஐதீகமாகும். மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது
கோவில் வரலாறு;
இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில். பிரம்மஹத்தி தோஷத்தால் அவதியுற்ற சிவாலய சோழன் இந்த மலைக்கு வந்து வழிபாடு செய்த போது முருகன் அர்ச்சகராக வந்து தன்னையே பூஜித்து சோழனின் தோஷத்தை நீக்கி அருள் புரிந்தார் என்று வரலாறு சொல்கிறது. அருணகிரிநாதர் தன் திருப்புகழ் சென்னிமலை முருகனைப் புகழ்ந்து ஐந்து பாடல்கள் பாடி முருகனிடம் படிக்காசு பெற்றுள்ளார்.
அந்தக் காலத்தில் தினசரி மூலவரின் அபிஷேகத்திற்காக படி வழியே எருதுகள் திருமஞ்சன நீர் கொண்டு சென்ற பழக்கம் இருந்துள்ளது. இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் புளியமரம் ஆகும். இந்த மரத்தில் சந்தான காரணி என்னும் மூலிகை உள்ளதாக நம்பப்படுகிறது.
பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமிகள் போலவே இங்குள்ள மூலவருக்கும் சுப்ரமணிய சுவாமி என்றே பெயர். அழகு திருக்கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அழகு முருகனை தரிசனம் செய்தால் காரிய தடை நீங்கி நல்ல தொழில் அமைதல், படிப்பில் மந்தமாக உள்ள குழந்தைகள் படிப்பில் வல்லவராக திகழ்வர்.
திருமணத்தடை நீங்கி திருமண வரம், மற்றும் குழந்தைப் பேறுக்கு காத்திருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை வரம் அருளும் அற்புத திருத்தலமாக விளங்குகிறது இந்த சென்னிமலை முருகன் திருக்கோயில்.