திருஷ்டி எத்தனை திருஷ்டி!

திருஷ்டி எத்தனை திருஷ்டி!

திருஷ்டி சுற்றிப்போடுவது என்பது இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு வழக்கமாக உள்ளது. சில வெளிநாடுகளிலும் கூட இந்தப் பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக, திருஷ்டி சுற்றிப் போடும்போது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லியோ உட்காரச் சொல்லியோ திருஷ்டி சுற்றி போடுவது வழக்கம். இப்படிச் சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதைக் கூறிச் சுற்றுவர். பெரியவர்கள், ‘ஊர் கண்ணு, உறவுக் கண்ணு, நாய் கண்ணு, நரிக்கண்ணு…’ என்று பலரது கண் பட்ட திருஷ்டியும் இதனால் கழிய வேண்டும் என்று கூறி திருஷ்டி கழிப்பதைக் பார்த்திருக்கலாம். திருஷ்டி மந்திரத்தை மனதுக்குள்தான் கூற வேண்டும் என்றும் கூறுவர். திருஷ்டி மந்திரத்தின் சக்தி அதிகரிக்க, கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்று ஜபிக்க வேண்டும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இனி, திருஷ்டி சுற்றிப்போடுவதில் உள்ள சில வகைகளைக் காண்போம்.

கற்பூரம் சுற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று சுற்றும் இடது புறமாக மூன்று சுற்றும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரையக் கரைய நம் மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பது நம்பிக்கை.

சிவப்பு மிளகாய் சுற்றிப் போடுதல்: சிவப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட, திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும். ஆனால், கமறாது. திருஷ்டி இல்லையெனில் நெடி ஏற்பட்டு கமறும்.

உப்பு சுற்றி போடுதல்: கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று சுற்றும் இடது புறமாக மூன்று சுற்றும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டுக் கரைக்க, அந்த உப்பு நீரில் கரைவது போல், நம் மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் நம்பிக்கை.

படிகாரம் சுற்றுதல்: மிளகாய் சுற்றிப் போடுவது போலவே, படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறி விடுமாம்.

கருப்பு வளையல்: பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிப்போடும் வழக்கம் இன்றும் பல வீடுகளில் வழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம்.

மண்: சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு, அதில் எச்சிலை மூன்று முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பது இன்றும் நம்பப்படுகிறது.

எலுமிச்சை, குங்குமம்: சில வியாபாரத் தலங்களுக்கும், வண்டி வாகனம், வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின் மேல் குங்குமத்தை தடவி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் திருஷ்டி கழிப்பதாக இன்றும் பலரும் பின்பற்றுகிறார்கள்.

பூசணிக்காய் உடைத்தல்: பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன் மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.

தேங்காய் உடைத்தல்: ஒரு தேங்காயின் மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால், தேங்காய் சிதறுவது போல் திருஷ்டியும் சிதறிவிடும் என்னும் நம்பிக்கை பரவலாக இருந்து வருகிறது.

ஆரத்தி: கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒருவிதமான திருஷ்டி கழித்தலே ஆகும்.

பட்சி திருஷ்டி: குழந்தை பிறந்த வீட்டின் முன்போ, மாடியிலோ குழந்தையின் துணிகளை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால், சூரிய அஸ்தமன சமயத்தில் பறவைகள் தமது கூட்டுக்குத் திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப் பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது என்பதால், குழந்தைகளின் துணிகளை சூரியன் மறைவதற்கு முன் எடுத்து விடுகின்றனர்.

பொதுவாக, ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகக் கருதப்படுகிறது. அதேபோல், சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு ஏற்ற தருணம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றிப் போட்டால் அதற்குப் பலன் அதிகம் என்றும் கூறுவர். வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக குறிப்பிட்ட ஒரு மரத்தை, ‘டச் வுட்’ என்று கூறிக்கொண்டு தொடுவார்களாம்.

சிலர், ‘இந்தப் பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது?’ என்றும் கேட்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com