

ஆஷாதி ஏகாதசி தினத்தில் மகாராஷ்டிராவின் பண்டரிபூரில் பாண்டுரங்க விட்டலர், ருக்மணி தேவியை தரிசிக்க வர்காரிகள் 21 நாள் பாதயாத்திரை மேற்கொள்வது நூற்றாண்டுகள் பழமையான மரபு. துக்காராம், ஞானேஷ்வர் பாதுகைகள் பல்லக்கில் வரும் இந்த யாத்திரையில், ஜாதி மத பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க, 352 ஆம்புலன்ஸ், வான்வழி ஆம்புலன்ஸ் உட்பட பிரம்மாண்ட மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருடம் ஒருமுறை வரும் ஆஷாதி ஏகாதசி விரதம் (தேவ சயனி ஏகாதசி) தினமன்று வர்காரிகள் என அழைக்கப்படும் பக்தர்கள், துளசிமாலை அணிந்து மகாராஷ்டிராவிலுள்ள ஷோலாப்பூர் மாவட்டத்திலிருக்கும் பண்டரிபூரில் வீற்றிருக்கும் பாண்டுரங்க விட்டலனையும், ருக்மணி தேவியையும் தரிசிக்க பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.
பாண்டுரங்கனை கௌரவிப்பதற்காக வர்காரிகளால் மேற் கொள்ளப்படும் இந்த புனிதயாத்திரை பல நூறு ஆண்டுகள் பழமையானதாகும்.
சந்திரபாகா நதியில் நீராடி விட்டலனை தரிசனம் செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.
வர்காரிகள் செல்லும் 21 நாட்கள் பாதயாத்திரை, ஆடிமாதம் வளர்பிறை 11 ஆம் நாளன்று பண்டரிபுரத்தை அடையும்.
பால்கி (பல்லக்கு)ஊர்வலம்:
வர்காரிகளின் பாதயாத்திரை சமயம், வைணவ சாதுக்களாகிய துக்காராம் மற்றும் ஞானேஷ்வர் ஆகியவர்களின் பாதுகைகள் பல்லக்குகளில் வைத்து பண்டரிபுரம் நோக்கி எடுத்துச் செல்வது வழக்கம்.
புனே நகரத்தின் அருகேயுள்ள ஆலந்தி மற்றும் தேஹு பகுதிகளில் துக்காராம் மற்றும் ஞானேஷ்வர் ஆகியோர்களின் சமாதி உள்ளன. வர்காரிகள், ஆலந்தி மற்றும் தேஹுவில் இருந்து பாதுகைகளை எடுத்து தனித் தனி பல்லக்கில் வைத்து அவைகளை தனித்தனி மாட்டு வண்டிகளில் ஏற்றி வர்க்காரி மரபுப்படி யாத்திரை (வாரி) மூலம் பண்டரிபூரை நோக்கி புறப்படுவார்கள்.
வர்காரிகள் தங்களது யாத்திரை சமயம், தம்புரா, ஜால்ரா கட்டைகள் போன்றவைகளை இசைத்துக் கொண்டு ஞானோபா, துக்காராம் ஆகியோர்களின் பாடல்களை, ஆடிப்பாடிக்கொண்டே செல்வார்கள்.
இந்த புனித யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கப்படும்.
இவ்வருடம் யாத்திரைக்காக, ஒரு பிரம்மாண்டமான மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜாதிமத இன பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த புனித யாத்திரையில் பங்கேற்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
உபரி தகவல்கள்:
ஆஷாதி ஏகாதசி நாளன்று பெருமாள் யோக நிலையில் ஆழ்ந்து இருப்பார்.
ஏகாதச எனும் வட மொழிச்சொல் 11 என பொருள்படும். 15 நாட்கள் கொண்ட தொகுதியில், பதினோராவது நாளாக வருவது ஏகாதசி எனப் படுகிறது.
வளர்பிறையில் வருவது சுக்லபட்ச ஏகாதசியென்றும், தேய்பிறையில் வருவது கிருஷ்ணபட்ச ஏகாதசி என்றும் கூறப்படுகிறது.
இவ்வருடம் வர்க்காரி யாத்திரைக்காக, ஒரு பிரம்மாண்டமான மருத்துவக் கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. மேலும், 352 ஆம்புலன்ஸ்கள், 43 தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகள், 156 முதன்மை சிகிச்சை மையங்கள் மற்றும் 215 சுகாதார தன்னாவலர்கள், 300 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட மருத்துவ. அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர்கள் வர்க்காரி பாதயாத்திரையாளர்களுக்கு உதவும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வர்க்காரி யாத்திரை செல்பவர்களுக்கு உதவும் பொருட்டு, முதன் முறையாக வான்வழி ஆம்புலன்ஸ் சேவை அமல் படுத்தப்படப் போவதாக, மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஏகாதசி பிறந்த கதை:
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை அவர்கள் துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத்தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.
அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, முரன் பகவானை கொல்லத் துணிந்தபோது, மகாவிஷ்ணுவின் திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.
விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார்.
எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.
ஜெய் ஜெய் விட்டல! பாண்டுரங்க விட்டல! பண்டரிநாத விட்டல!
ஏகாதசி விரதத்தின் பின்னணியில் உள்ள தெய்வீக ஆற்றலையும், அந்த நாளில் கண்விழித்து விரதம் இருப்பதன் மூலமாக தீய சக்திகள் விலகி வாழ்வில் நிலைத்து நிற்கும் செல்வத்தையும் புகழையும் பெறும் வழியை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.