கிடைத்தற்கு அரிய இந்த மனிதப் பிறப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. எத்தனையோ புண்ணியங்களை முற்பிறவிகளில் செய்தால்தான் மனிதப் பிறப்பு கிடைக்கும்.
இந்தப் பிறப்பு கிடைத்தபின் என்ன செய்ய வேண்டும்?
நல்ல நண்பர்களைப் பெற்று, நல்ல காரியங்களைச் செய்து. குடும்பத்தை நல்லபடியாகக் காப்பாற்றி பகவானின் பாதார விந்தங்களை அடைவதே இந்தப் பிறப்பின் சாதனை என்று சொல்லப்படுகிறது.
ஒருவருக்குக் கிடைக்க வேண்டியதை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஒருவருக்குக் கிடைக்க முடியாததை எவராலும் பெற்றுத் தரவும் முடியாது.
கிடைத்ததைக்கொண்டு சந்தோஷப்பட வேண்டும்.
கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புறம்பயம் பள்ளிக்கூடத்தில் எட்டாம் கிளாஸ் வரை படித்தேன். அதன் பின் கும்பகோணம் வந்து படிப்பைத் தொடர்ந்தேன்.
திருப்புறம்பயத்தில் நான் வசித்த அக்ரஹாரத்தின் கோடியில் ஆரம்பப் பள்ளி இருந்தது.
வீட்டில் இருந்து கூப்பிடும் தூரத்தில் பள்ளி. தின்பதற்கு கமர்கட், கடலை மிட்டாய், ஜம்ஜம் பிஸ்கட் தாராளமாகக் கிடைக்கும். காரணம் வீட்டு வாசலிலேயே சின்ன அளவில் ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தார் புரோகிதரான என் தந்தை பிச்சை ஐயர்.
1970களில் திருப்புறம்பயத்தில் எங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் வாழை மரம், மாமரம் தாண்டி நடந்தால் அடுத்த தெருவில் உள்ள வீட்டின் கொல்லைப்புறம் வந்து விடும்.
எங்கள் வீட்டுக்கு நேர் பின்புறக் கொல்லைப் பக்கம் நாகஸ்வரக்காரர் நடேசன் வீடு. மிகுந்த பண்பாளர்.
எங்கள் ஊர் அருள்மிகு சாட்சிநாதர் ஆலயத்தில் பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களின்போது ஆலயத்தின் பெரிய பிராகாரத்தை ஸ்வாமி உத்ஸவர் விக்கிரகம் வலம் வரும் வழக்கம் உண்டு.
பெரிய பிராகாரம் மிகவும் உயர்ந்து காணப்படும். அண்ணாந்து பார்க்கின்ற அளவுக்கு மதில்சுவர்.
பெரிய பிராகாரத்தில் ஸ்வாமி வலம் வந்து கொண்டிருக்கும்போது நடேசனும் அவரது பையன் ஞானசுந்தரமும் நாகஸ்வரம் வாசிப்பார்கள். தவிலுக்கு சம்பந்தமும் சேகரும். பெரும்பாலும் இவர்கள் காம்பினேஷனைக் காண முடியும்.
சும்மா சொல்லக்கூடாது. அப்போதெல்லாம் வாசிப்புக்குக் காசு கிடைத்ததோ இல்லையோ... நிறைய கைதட்டல் கிடைத்தது. அதுவே வித்வான்களுக்கு மன நிறைவைத் தந்துவிடும்.
இசையின் அரிச்சுவடி எதுவுமே புரியாத வயதில் நானும் என் வயதை ஒத்த சக மாணவர்களும் அரை டிராயரோடு ஸ்வாமிக்கு முன்னால் போய்க்கொண்டிருப்போம்.
நடேசனும் ஞானசுந்தரமும் லயித்து வாசிக்கிற மல்லாரி'யை கண்களை இமைக்க மறந்து கேட்டு ரசிப்போம்.
'எதையாவது சாதிக்க வேண்டும்' என்கிற தாபமும், ஆசையும் இருப்பவரை முகத்தைப் பார்த்தாலே கண்டுபிடித்து விட முடியும். அது ஞானசுந்தரத்தின் முகத்தில் அப்போதே பிரகாசமாகத் தெரிந்தது.
ஒரு சுப தினத்தில் திருப்புறம்பயத்துக்கு டாட்டா சொல்லிவிட்டு, சேலத்துக்குப் போய் செட்டில் ஆகி விட்டார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகவில்லை என்று நினைவு.
இது நடந்து சுமார் 20 வருடங்களுக்குப் பின் ஒரு கல்யாணத்துக்காக நான் சேலம் போயிருந்தேன். ஆட்டோவில் இறங்கி பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிக்கொண்டிருக்கும்போதே மண்டபத்துக்குள்ளிருந்து நாகஸ்வர ஓசை இனிமையாகத் தவழ்ந்து வந்துகொண்டிருந்தது.
உள்ளே நுழைந்ததும் நாகஸ்வர கோஷ்டியைப் பார்த்தால் எனக்கு ஆனந்த அதிர்ச்சி.
ஆம்! மிக அருமையாக தன் குழுவினருடன் நாகஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தவர் எங்க ஊர்க்காரர் ஞானசுந்தரமேதான்! அவரிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. அப்போது பார்த்த அதே ஒல்லியான உடல்வாகு.
வருடங்கள் ஓடி இருந்தாலும், என்னைப் பார்த்ததும் சட்டென்று அடையாளம் கண்டுகொண்டு விட்டார். சீவாளியை வாயில் இருந்து எடுக்காமல் வாசித்தபடியே ஒரு புன்னகையுடன் என்னைப் பார்த்துத் தலை அசைத்து ஆனந்தப்பட்டது அவர் கொண்டிருக்கிற தொழில் தர்மம்.
'வாசித்து முடியட்டும் ஓய்வு வேளையில் பேசுவோம்' என்று அவரைப் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றேன். கெட்டிமேளம் முழங்க... கல்யாணம் இனிதே முடிந்தது.
ஞானசுந்தரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார்.
அவரை நெருங்கி, கை கொடுத்தேன். எங்கள் இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர். சொந்த ஊர்ப் பாசம்.
"எப்படி இருக்கீங்க? தொழில்ல முன்னேறணும்னு கிராமத்தை விட்டு வந்தீங்க... இப்ப நகரத்து வாழ்க்கை எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றேன். அவரிடம் இருந்து வந்த பதில் என்னை ரொம்பவும் பிரமிக்க வைத்து விட்டது.
"ரொம்ப நல்லா இருக்கேன் . கல்யாணம் ஆயிடுச்சு. நல்ல மனைவி. சின்ன அளவில் வாடகை வீடு. ஒரு மொபெட் வாங்கிட்டேன். இதைவிட என்ன வேணும்? ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்."
'சந்தோஷமா இருக்கேன்' என்று எவர் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதைச் சொல்கின்றபோது பெரும்பாலானவர் முகத்தில் நிஜமான சந்தோஷம் இருக்காது.
ஆனால், ஞானசுந்தரம் முகத்தில் நிஜமான சந்தோஷம் தென்பட்டது.
வாழ்க்கையின் சந்தோஷத்துக்குப் பணம் மட்டும் முக்கியமல்ல... மன நிம்மதிதான் என்பதை அப்போது ஞானசுந்தரம் உணர்வுபூர்வமாக உணர்த்தினார்.
'வெள்ளந்தி' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
'அவன் வெள்ளந்தி சார்' என்பார்கள். அப்படி என்றால் என்ன அர்த்தம்?
தூய்மையானவன். கள்ளம் கபடம் அற்றவன். சூது வாது தெரியாதவன். ஆங்கிலத்தில் 'இன்னொசென்ட்' என்பார்கள்.
இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது அரிது.
இன்னொரு விதமான விளக்கமும் 'வெள்ளந்தி'க்கு சொல்லப்படுகிறது.
அதாவது வெள்ளம், தீ. இந்த இரண்டு வார்த்தைகளையும் கொண்டுதான் வெள்ளந்தி என்பது புழக்கத்துக்கு வந்திருக்கும் என்று.
ஆராய்ந்து பார்த்தால், அது உண்மையாகவும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பாய்ந்து வருகிற வெள்ளத்துக்கும், பரவி தகிக்கிற தீக்கும் நல்லவர்கள், கெட்டவர்கள் யார் என்று தெரியாது.
வெள்ளம் பாய்ந்து வருகிறபோது அதற்கு நல்லது கெட்டது தெரியாது. எங்கெங்கு பள்ளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் பாய்ந்து சேதத்தை ஏற்படுத்திவிடும்.
தீயும் இப்படித்தான். பற்றி எரிகிற தீக்கு எவற்றை எரிக்கிறோம் என்பது தெரியாது. காற்று வீசுகிற பக்கமெல்லாம் சாய்ந்து கபளீகரம் செய்து விடும்.
ஆக, நல்லது கெட்டது எதுவும் தெரியாதவர்களை 'வெள்ளந்தி' என்போம்.
இத்தகையவர்களுக்கு சுய நலம் தெரியாது.
'சுய நலம் விரும்பாதவர்கள் இன்றும் இருக்கிறார்களா?
இருக்கிறார்கள். மனிதர்களில் சிறப்புப் பிரிவினர்.
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள்தான் உண்மையான மனிதர்கள். இவர்களுக்குக் கள்ளம் கபடம் தெரியாது. சூது வாது புரியாது.
இதனால்தான் இத்தகைய குணம் கொண்டவர்களை 'மகான்கள்' என்று நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவா சொல்லி இருக்கிறார்.
மன நலம் பாதிக்கப்பட்ட தங்கள் குழந்தைகளை மகா பெரியவாளிடம் கூட்டிக்கொண்டு வந்து, வருந்துவார்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள்.
'இத்தகைய குழந்தைகள் அமைவதெல்லாம் ஒரு வரம். இதை சாபம்னு நினைக்காதீங்கோ. இவாளுக்கு ஆசையே கிடையாது. இவர்களைப் போன்ற குழந்தைகளை வளர்ப்பதற்குக் கடவுள் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவாளுக்கு எந்தக் குறையும் இல்லாம வளருங்கோ' என்று அட்வைஸ் செய்கிற மகா பெரியவா பின்னர் சொல்வாராம்:
'ஒரு சமயத்துல யோசிச்சா இவாளை மாதிரி நாமளும் பொறக்க மாட்டோமானு தோணும்.’
நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் மகா பெரியவாளே எதற்கு ஆசைப்படுகிறார் பார்த்தீர்களா?
மகா பெரியவாளே போற்றும் இத்தகைய 'மகான்களை' நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் பார்த்திருக்கலாம்.
அடுத்த இதழில் நாமும் பார்ப்போம்.
(தொடரும்)