Rare facts about Thiruparam kundram
Rare facts about Thiruparam kundramImage Credits: Maalaimalar

‘திருப்பரங்குன்றம்’ பற்றிய அரிய தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் வாங்க!

Published on

திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு. நக்கீரர், பாம்பன்சுவாமிகள், சுந்தரர், மணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். அழகிய தேசிகர் இயற்றிய ‘திருப்பரங்கிரி’ புராணத்தில் திருப்பரங்குன்றத்தை பற்றி நிறைய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

சிவபெருமான் பார்வதிக்கு மந்திர உபதேசம் செய்த போது அன்னையின் மடியில் அமர்ந்திருந்த முருகன். அதில் கவனம் கொண்டு மந்திரத்தை உள்வாங்கி கொண்டார். ஆனால் குரு இல்லாமல் மந்திரம் கற்பது தவறு என்று குரு ஸ்தானத்தில் சிவனே தனக்கு காட்சி தந்து தன்னுடைய தவறை மன்னிக்கும் வரை தவம் இருக்க போவதாக உறுதி எடுத்தார். தன்னுடைய தவத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் மதுரைக்கு தென்மேற்கிலே இருக்கும் ‘சத்தியகிரி’ என்ற திருத்தலம். அதுவே இன்றைய திருப்பரங்குன்றம்.

பரம்பொருளான சிவபெருமான் ஒரு குன்று வடிவில் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் திருத்தலம். சிவபெருமானின் முக்கிய ஸ்தலமாக இருந்த சத்தியகிரி முருகனின் வாழ்வில் பெரும் பங்காற்றியதால், சிவனின் சத்தியகிரியை விட முருகனின் திருப்பரங்குன்றம் என்ற பெயரே நிலைத்தது.

மகிஷாசுரனை வதம் செய்ததால் துர்கைக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இதிலிருந்து தன்னை விடுவிக்கும்படி அன்னை சிவனிடம் வேண்ட, அதற்கு சிவனோ தன்னை சத்தியகிரி மலையில் பூஜிக்க வேண்டும் என்று சொல்ல அதன் படி அன்னை சத்தியகிரி மலையிலே லிங்கத்தை பிரதிக்ஷ்டை செய்து பூஜித்து வந்தார். அதன் பலனாக ஒரு நாள் சோமஸ்கந்த ரூபத்தில் காட்சிக்கொடுத்தார் சிவபெருமான். சோமஸ்கந்த ரூபம் என்பது சிவன் பார்வதிக்கு நடுவே முருகன் நிற்கும் ஒரு தனித்துவமான வடிவம். சிவப்பெருமானை இந்த ரூபத்தில் தரிசனம் பெற்ற அன்னையும் தன் தோஷம் நீங்கப்பெற்றார். அவர் வழிப்பட்ட சிவலிங்கம் இன்றும் கோவிலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லிங்கத்திற்கு ‘தேவி லிங்கம்’ என்று பெயர். இந்த லிங்கம் சாந்தாகாரம் என்ற மருந்தின் கலவைவை கொண்டு தயாரிக்கப்படிருக்கிறது. எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் கிடையாது. சாம்பிராணி, தைலம் மட்டுமே பூசப்படுகிறது.

முருகன் தான் தவம் செய்ய சிறந்த இடம் சத்தியகிரி என்பதை உணர்ந்து கையிலாயத்திலிருந்து புறப்பட்டு சத்தியகிரியை அடைந்தார். இங்கு குறிப்பிட்ட காலம் வரை இருந்த பிறகு ஒரு தைப்பூச நாளன்று சிவப்பெருமான் பார்வதிதேவியுடன் முருகப் பெருமானுக்கு காட்சியளித்தார். முருகப்பெருமானுக்கு சிவன் தைப்பூச நாளன்று காட்சி தந்ததால் இன்றைக்கும் தைப்பூசம் இங்கே வெகுவிமர்சியாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூர் முருகன் கோயில்: அறியவேண்டிய அரிய தகவல்கள்!
Rare facts about Thiruparam kundram

பங்குனி உத்திரத்தில்தான் முருகன் தெய்வானையை மணந்துக்கொண்டார். அந்த திருமணம் நடந்ததும் இதே திருப்பரங்குன்றத்தில்தான். இக்கோவிலில் பிரகாரம் கிடையாது. மலையை சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல வேண்டும். கருவறைக்கென்று தனி விமானம் கிடையாது மலையே விமானமாக கருதப்படுகிறது. இந்த கருவறையில் இருக்கும் விக்கிரகங்கள் கடுகு, சக்கரை, மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டிருப்பதால் சுவாமியை தவிர மற்ற விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்வதில்லை.

முருகப்பெருமானுக்கும், மற்ற விக்ரகங்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. சரவணப் பொய்கை, லக்ஷ்மி தீர்த்தம், சந்நியாசி கிணறு, காசி சுனை, சத்திய கூவம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. தோல் வியாதி உள்ளவர்கள் லக்ஷ்மி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்வது அவர்களை குணமாக்கும் என்பது ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com