Guru Bhakthi
Guru Bhakthi

குரு பக்தி!

Published on

ரு நாள் நம்பிள்ளை தம்முடைய சீடர்களுடன் திருவெள்ளறை கண்ணபிரானை வழிபட்டு ஸ்ரீரங்கத்துக்குத் திரும்ப ஓடத்தில் காவேரியை கடந்துகொண்டிருந்தார். மாலை நேரம். தண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. ஓடம் அதிக கனத்தால் நீரில் தத்தளித்தது. ஓடக்காரன், “யாராவது ஒருவர் நீரில் குதித்து நீந்திச் சென்றால்தான் மற்றவர்கள் பிழைத்துக் கரை சேர முடியும்” என்றான்.

ஒருவரும் தண்ணீரில் குதிக்க முன்வரவில்லை. அந்தச் சீடர் குழாத்தில் இருந்த ஒரு பெண்மணி நம் பிள்ளையிடம் மிகுந்த பக்தியும், சிரத்தையும் பூண்டவர். நம்பிள்ளை உயிர் பிழைத்தால் உலகோரை உய்விப்பாரென்று கருதி,  தாமே காவேரியில் குதித்துவிட்டாள். அதனால் ஓடம் சிறிதும் கேடின்றி கரை சேர்ந்தது. ஆனால், நம்பிள்ளை, ‘அந்தப் பெண் பிள்ளை என்ன ஆனாளோ’ என்று எண்ணிக்கொண்டேயிருந்தார்.

ஆற்றில் குதித்த அப்பெண்ணை ஆறு ஒரு கோரை மேட்டில் ஒதுக்கியது. அவளும் கோரைகளைப் பற்றிக்கொண்டு மேலேறி மேட்டில் நின்றாள். அங்கிருந்தபடியே நம்பிள்ளையை நோக்கி, “ஸ்வாமி அடியாள் இதோ இருக்கிறேன். கவலைவேண்டாம்” என்று கூவிச் சொன்னாள். நம்பிள்ளை  ஓடக்காரனிடம் அவளை அழைத்து வரும்படி வேண்டினார்.

இதையும் படியுங்கள்:
எளிதில் விவசாய பயிர் காப்பீடு செய்யும் வழிகள்!
Guru Bhakthi

நம்பிள்ளை அருகில் வந்த அப்பெண் அவரை வணங்கி, “தாங்கள் அடியாளுடைய ஆத்மாவைக் கரை ஏற்றியதுபோல, அடியாளின் உடலையும் கோரை மேடாக வந்து காப்பாற்றினீர்கள்” என்று சொன்னாள்.

அவளுடைய நம்பிக்கையையும் குரு பக்தியையும் கண்டு மகிழ்ந்த நம்பிள்ளை, “உன்னுடைய நம்பிக்கை இவ்வளவு உறுதியாக இருக்கும்பொழுது, அது கோரை மேடாக ஆகாதோ!’ எனக்கூறிப் பாராட்டினார்.

- எஸ்.ஆதினமிளகி.

logo
Kalki Online
kalkionline.com