சர்வ நலன் சேர்க்கும் அனுமன் ஜயந்தி வழிபாடு!

சர்வ நலன் சேர்க்கும் அனுமன் ஜயந்தி வழிபாடு!

னி பகவானை வெற்றிகொண்ட வீர ஆஞ்சனேயரை அனுமன் ஜயந்தி நாளில் வணங்கினால் சனி தோஷங்களிலிருந்து பாதுகாப்பினைப் பெறலாம். நாளை அனுமன் ஜயந்தி தினம். சகல ஆனந்தங்களையும் அள்ளித் தருபவர் ஆஞ்சனேயர் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவனையும் திருமாலையும் ஒன்றிணைக்கும் தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சனேயர். எனவே, இவரை வணங்கி அளவில்லாத ஆனந்தத்தினைப் பெறலாம்.

அன்று விரதம் இருப்பவர்கள் மாலையில் அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வசதி இருந்தால் வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமன் உணவுப் பிரியர் என்பதால் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

ஆஞ்சனேயருக்கு வெண்ணை சாத்தினால் துன்பங்கள் எல்லாம் சூரியனைக் கண்டு உருகும் வெண்ணை போல உருகி விடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். துளசி மாலை சாத்தினால் பாவங்களில் இருந்து நிவர்த்தியும், வடை மாலை சாத்தினால் வழக்குகளில் வெற்றியும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை சாத்தினால் தடைகள் நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். ஆஞ்சனேயருக்கு ஸ்ரீராம ஜயம் எழுதி மாலை போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும்.

சனி பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும். தீய சக்திகள், காத்து கருப்பு, செய்வினை, மனநோய், சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சனேயரை பிரார்த்தனை செய்யலாம். வாஸ்து கோளாறு உள்ள வீட்டின் வாசல் படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீராமஜயம் என்னும் புனிதமான ராம நாமத்தை ஒருமுறை மனதில் சிந்தித்தாலே எண்ணற்ற நற்பலன்கள் உண்டாகும் என்பர். ஆஞ்சனேயர் பிறந்த நாளில் ராம நாமம் எழுதினால் விரைவில் பலகோடி செல்வ வளங்கள் உண்டாகும் என்பது சர்வ நிச்சயம். செல்லம் பெருக, கடன் தீர, உத்தியோகம், தொழில், வியாபாரம், பணப் பிரச்னை, திருமணம், குழந்தை பாக்கியம், நோய் விலக, சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, நவக்கிரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க, மன பயம் நீங்க, திக்கு வாய் பிரச்னை தீர, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலித்துவம் என எதிலும் வெற்றி பெற, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம், கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக ஸ்ரீராமஜயம் எழுதலாம்.

அனுமனை, ’சொல்லின் செல்வன்’ என சிறப்பித்துக் கூறுவர். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும். அனுமன் ஜயந்தி நாளில் அருகில் இருக்கும் ராமர் கோயில் அல்லது ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com