
தானம் கொடுப்பது புண்ணியம் என முன்னோர்கள் கூறுவது வழக்கம். தானமளிப்பவர்கள் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. தானமளிப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் செயலாகும்.
மகா பாரதத்தில் கர்ணன், தான் எண்ணெய் குளியலில் ஈடுபட்டிருக்கையில், பிட்ஷை கேட்டு வந்தவருக்கு எண்ணெய் வைத்திருந்த தங்கக் கிண்ணத்தை இடது கையால் எடுத்துக் கொடுத்தான். காரணம், இடது புறமிருந்த கிண்ணத்தை வலது கையால் எடுப்பதற்குள் மனசு மாறிவிடக்கூடாதென்பதே ஆகும். சாகும் தறுவாயிலும் கூட தானமளித்தான். தானமளிப்பது ஏழேழு ஜன்மத்திற்கும் பலனை அளிக்கும்.
ஆறறிவு படைத்தவர்களுக்கு மட்டுமல்ல; வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, தண்ணீர் கொடுப்பதுவும் கூட ஒருவகை தானம் எனக்கூறலாம். செல்வம் இருப்பதற்கேற்ப தானம் செய்யவேண்டும். அன்னதானம், ஆடை தானம், பொருள் தானம், ரத்த தானமென பலவகை தானங்கள் உள்ளன.
தானமளிப்பவரைத் தடுப்பது பாவம். அவ்வாறு தடுத்தால் தண்டனை நிச்சயம் உண்டு! என்பதற்கு ஒரு புராணக் கதையினை உதாரணமாக கூறலாம். அந்தக்கதை!
மஹாபலிச் சக்கரவர்த்தியை அனைவருக்கும் தெரியும்.
அசுவமேத யாகங்களைச் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது, மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் வந்து மஹாபலியிடம் தானம் கேட்கிறார்.
தானமளிக்க முழு மகிழ்ச்சியுடன் மஹாபலி தயாராகிறார். வாமனர் கேட்டதை அளிக்க, தண்ணீரை தாரை வார்க்கையில், குரு சுக்ராச்சாரியார், அதைத் தடுக்கையில் ஒரு வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயிலிருந்து நீர் வராதவாறு அடைத்துக் கொள்கிறார்.
அப்பொழுது வாமனர், ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியாரின் ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார். பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர, அவரை மன்னித்து, பிறருக்கு தானமளிப்பதில் வள்ளலான மஹா பலிச்சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்கிறார் மகாவிஷ்ணு.
இதை “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்” என்று பழமொழியாக சொல்வதுண்டு.
இதில் தட்டான் எனும் சொல் மஹாபலிச் சக்கரவர்த்தியை குறிக்கிறது. அதாவது - தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் என்பது பொருள்.
சட்டை போட்டால், என்றால், தடை போடுவது எனப்பொருள்.
குட்டைப்பையன் எனும் சொல் வாமன அவதாரத்தைக் குறிக்கிறது.
தானம் கொடுப்பதை, சுக்ராச்சாரியார் தடுக்கையில் (சட்டை போட்டால்), குட்டைப் பையனாகிய வாமனர், அவரின் ஒரு கண்ணை குத்தி விடுகிறார்.
நீதி - தானம் அளிப்பவர்களைத் தடுக்காதீர்கள்.