இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்படும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவர். இவர் சோழ நாடு, திருவாரூர், கமலாபுரத்தில் கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகத் தோன்றினார். சிறுவயது முதல் சிவபெருமானின் மீது மிகுந்த அன்பும், பக்தியும்கொண்டு விளங்கினார். சிறந்த சிவபக்தையாக வாழ்ந்தும், வளர்ந்தும் வந்தார். இவரது மிகுந்த பக்தியானது திருவாரூரில் உள்ள தியாகராஜர் மீது இருந்து வந்தது. குழந்தைப் பருவம் முடிந்து திருமணப் பருவத்தை அடைந்த இவர் தன்னைப்போல சிவசிந்தனை கொண்டவரை மணக்க எண்ணினார்.
இவர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில், ஆதி சைவ மரபில் பிறந்த சிவபக்தரான சடையனார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சடையனாரிடம் சிறந்த இல்லாளாக விளங்கினார். சிவபெருமானிடம் குன்றாத சிவ பக்தியுடனும் எவ்விதமான குறைகள் இன்றியும் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இசைஞானியார் கருவுற்றார்.
தனக்கு பிறக்கும் குழந்தை நல்வழியில் வாழ வேண்டும் என்பதற்காக குழந்தையை கருவில் சுமக்கும்போதே சிவ நாமங்கள் மற்றும் சிவ மந்திரங்களைக் கற்பித்தார். இதனால், மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரமூர்த்தி நாயனாரை புத்திரனாகப் பெறும் பாக்கியத்தை இசைஞானியாருக்கு அருளினார். சிவபக்தியில் சிறந்து விளங்கிய இசைஞானி நாயனார் தனது வாழ்நாள் முழுதும் இறைத்தொண்டு செய்தார். இவர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் திருநாவலூரில், விழுப்புரம் மாவட்டத்தில் இறைவனடி சேர்ந்தார். அன்று முதல் இசைஞானியார் சிவபதம் அடைந்த நாளை எல்லா சிவாலயங்களிலும் குருபூஜை நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பெயர் சொல்லும் பிள்ளை என்னும் வாக்கிற்கேற்ப பெற்ற பிள்ளையால் பெயரும், புகழும் அடைந்தவர் இசைஞானியார். சுந்தரமூர்த்தி நாயனாரை மகனாய் பெற்றதாலேயே, தாயான இசைஞானி நாயனாரும், தந்தையான சடையப்ப நாயனாரும் நாயன்மார்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.
சுந்தரமூர்த்தி நாயனார், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.