பெரியகுளம்-தேனி மெயின் ரோட்டில் கைலாசபட்டியில் இருந்து கைலாசநாதர் கோயில் நுழைவு ஆர்ச் வழியாக இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையடிவாரத்தை அடையலாம். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அடிவாரத்தில் வெள்ளை விநாயகர், சந்திர லிங்கம் அமைந்துள்ளது.
கைலாசபட்டி என்ற கிராமத்தின் அருகில் மலைமேல் அமைந்துள்ளது இந்த கைலாசநாதர் கோவில். இது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முந்தய கோவிலென்றும், மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்றும், சோழ மன்னரால் கட்டப்பட்டது என்றும் செவிவழி செய்தி உள்ளது. இக்கோவில் தென்கயிலாயம் எனவும் அழைக்கப்படுகிறது.
அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி, கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியானமலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.
இங்குள்ள வெள்ளை விநாயகர், குடைவரை கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்தபடியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள், நோய்கள் விலகி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரக குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
கிரிவலம் மலையைச் சுற்றிலும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கிரிவலப் பாதையின் எண் திசைகளிலும், இந்திரலிங்கம், அக்னி லிங்கம், இமயலிங்கம், நிருருதிலிங்கம், வாயுலிங்கம், வருணலிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று அஷ்டதிக்கு லிங்கங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றிலும், ஓமச்செடிகளும், மூலிகைகளும் நிறைந்துள்ளதினால், உடல் நோய்கள் நீங்கி வருகின்றன.
இம்மலையில் பல சித்தர்கள் உலா வந்துள்ளனர். அவர்களில் சட்டமுனி சித்தர், மௌனகுருசாமி சித்தர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்தக் கோயிலில் திரிசக்கர தரிசனம், சதுர்க்கர தரிசனம், ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், கனி அபிஷேகம், மகா சிவராத்திரி, சோமவார பூஜை, கார்த்திகை பூஜைகள், பிரதோஷங்கள் போன்றவைகள் நடைபெறுகின்றன.
ஸ்தலவிருட்சம் அத்தி மரம். இங்கு பவுர்னமி தோறும் சட்டநாத முனி (பதினெட்டு சித்தர்களில் ஒருவர்) வந்து கைலாசநாதரை வணங்குவதாகவும், ஸ்தல விருட்சகத்தின் அடியில் தவம் செய்வதாகவும் கருதபடுகிறது. இங்கு சப்தகன்னியர்கள் வந்து நீராடி கைலாசநாதரை வணங்குவதாக சொல்லப்படுகிறது.
ஈசன் வடகயிலாயம் வந்து வணங்க இயலாதவர்கள் எம்மை இங்கே காணலாம், இங்கு எம்மை வணங்கினாலும் வடகயிலாயம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும் எனவும் அருளினார்.
திருவண்ணாமலைக்கு அடுத்து பெரிய அளவில் கிரிவலம் நடைபெறும் திருத்தலம் இது. கயிலாயத்தையும், திருவண்ணாமலை திருத்தலத்தையும் தரிசித்து வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.
இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 அடி உயர மலை மேல் அமைந்துள்ளது.