அற்புதங்கள் நிறைந்த காலபைரவர் க்ஷேத்திரம் ராமகிரி!

காலபைரவர் க்ஷேத்திரம் ...
காலபைரவர் க்ஷேத்திரம் ...

ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள் பாலித்தவர் ஸ்ரீ காலபைரவர்தான். அதனால்தான் இத்தலத்தை காலபைரவர் க்ஷேத்திரம் என்று அழைக்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 

இங்குள்ள காலபைரவர் சந்தான பிராப்தி பைரவர் என அழைக்கப்படுகிறார். கால பைரவர்தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தியாவார். இங்கு சிவபெருமான் சன்னதிக்கு நேராக ஆஞ்சநேயரும், நந்தியும் காட்சி தருகிறார்கள். ஈசனின் பெயர் வாலீஸ்வரர். அம்பிகையின் திருநாமம் மரகதாம்பிகை. தல விருட்சம் அரச மரமாகும். இங்கு சிவபெருமானுக்கு முன்பாக ஆஞ்சநேயர் இருப்பதால் பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.

கோயிலுக்கு வெளியில் உள்ள தீர்த்த குளத்தில் நந்தி சிலையின் வாயிலிருந்து தண்ணீர் தீர்த்த குளத்துக்குள் விழுந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் நந்தி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது காலபைரவர் தனது மனைவி ஸ்ரீ காளிகாதேவியுடனும், எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்தியேகமான கர்ப்பகிரகத்தில் அருள்புரிகிறார். 

கையில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம் ஆகியவற்றை வலது நான்கு கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் ஆகியவற்றை இடது நான்கு கரங்களிலும் கொண்டு காட்சி தருகிறார். கோரைப் பற்கள் உடைய முகத்துடனும், சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுடியுடன் தென்திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். பாம்பினை பூணூலாகவும், அரைஞாண் கொடியாகவும் அணிந்துள்ளவர்.

இரும்பு கிண்ணத்தில் நல்லெண்ணெய்விட்டு தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட சனி பகவானின் தாக்கம் இருக்காது என்பதால் இங்கு காலபைரவர் சன்னிதி முன்பு விளக்கேற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 அவதாரங்களில் ஒன்றான காலபைரவரே மோட்சத்திற்கு அதிபதியாவார். அதனால்தான் காசி தலத்திற்கு காலபைரவர் அதிபதியாக உள்ளார். மோட்ச தீபம் என்பது பைரவருக்கு உரியது.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
காலபைரவர் க்ஷேத்திரம் ...

இவரை வணங்கிட கால நேரம் எதுவும் கிடையாது. காலையில் வழிபட நோய்கள் விலகும். பகலில் வழிபட விரும்பியது கிட்டும். இரவில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி முக்தி நிலையும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பைரவருக்கு சாம்பிராணி தைல அபிஷேகமும், செவ்வரளி போன்ற சிவப்பு மலர்களால் அர்ச்சிப்பதும், மாதுளம் பழம் மற்றும் கதம்ப சாதம் நெய்வேத்தியமாக செய்வது மிகவும் விசேஷம்.

தை மாத செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலனைத் தரும். அதேபோல் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். அத்துடன் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமியும் இணைந்து வரும் நாட்களில் விரதம் இருப்பது மிகச் சிறப்பான பலனை தரும். பல்லவர்களால் 9ஆம் நூற்றாண்டில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகவும் பிற்கால சோழர்களும், விஜயநகர மன்னர்களும் திருப்பணிகள் செய்ததாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com