ஒரேப் பாடலில் மூன்று தெய்வங்களை அடையாளப்படுத்திய காளமேகப்புலவர்!

Kalamega Pulavar
Kalamega Pulavar
Published on
deepam strip
deepam strip

காளமேகப் புலவர் இயற்றிய சிலேடைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஒரேப் பாடலில் மூன்று தெய்வங்களுக்குப் பொருந்தும் வகையில் கூட ஒரு பாடலைத் தந்திருக்கிறார்.

விநாயகர், முருகன், பரமசிவன் என்று மூன்று தெய்வங்களுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் அவர் பாடிய பாடல் இது;

“சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் நாலுகையால்

இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்

கண்ணுறுதலானுங் கணபதியுஞ் செவ்வேளும்

எண்ணரனு நேராவரே”

இப்பாடலில்,

‘விநாயகர்’ பற்றி எப்படிச் சொல்கிறார்?

சென்னிமுகம் மாறுளது - தலையும் முகமும் இயற்கைக்கு மாறுபட்டு யானைத் தலையும் முகமுமாக விளங்குகின்றன.

சேர்கரம் முன் நாலுகை - அவர் பெற்றிருக்கும் ஐந்தாவது கரமாகிய துதிக்கை முன்னால் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. (நாலுதல் - அசைதல்)

இந்நிலத்தில் கோடு ஒன்று இருத்தல் - இந்த உலகில் அவர் மகாபாரதம் எழுத, ஒடித்ததால் ஒற்றைக் கொம்புடன் விளங்குகிறார். (கோடு - கொம்பு)

மன்னு குளக்கண் உறுதல் - அவருக்கு உகந்த நிவேதனமாக வெல்லக்கட்டி (குளக்கண்) விளங்குகிறது. மேலும் வெல்லத்தில் (குளக்கண்) அவரே எழுந்தருளி வெல்லப் பிள்ளையாராகவும் வடிவம் எடுக்கிறார்.

இதேப் பாடல் ‘முருகன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?

சென்னிமுகம் ஆறு உளது - திருமுடியும் முகமும் ஆறு உள்ளன.

சேர்கரம் முந்நாலுகை - திருக்கரங்கள் முந்நான்கு - பன்னிரெண்டு அமைந்துள்ளன.

இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு மலை அவரது இருப்பிடமாக அமைகிறது. திருச்செங்கோடு போன்ற மலைத்தலங்கள் முருகனுக்கு உகந்தவை. (கோடு - மலை)

மன்னு குளக்கண் உறுதல் - இங்கு குளம் என்பது பொய்கையைக் குறிக்கும். அதாவது, முருகன் சரவணப் பொய்கையில் தோன்றியவன்.

இதேப் பாடல் விநாயகர், முருகன் ஆகியோரின் தந்தையான ‘பரமசிவன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?

சென்னிமுகம் ஆறு உளது - தலையில் கங்கை என்ற ஆறு இருக்கிறது.

முன்சேர் கரம் நாலுகை - முன் புறத்தே உள்ள ஒளி சேர்ந்த நான்கு கரங்களைப் பெற்றுள்ளவர்.

இதையும் படியுங்கள்:
ஆடம்பர விருந்தை புறக்கணித்து, அவல் கஞ்சியை ருசித்த ஸ்ரீகிருஷ்ணர்!
Kalamega Pulavar

இந்நிலத்தில் கோடொன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு சிறந்த மலையான கயிலாயமே அவரது இருப்பிடம்.

மன்னு குளக்கண் உறுதல்- பொருந்திய நெற்றிக்கண்ணைப் பெற்றிருக்கிறார்.

ஒரு பாடலில் மூன்று தெய்வங்களை அடையாளப்படுத்திய காளமேகப் புலவரின் தமிழ்த்திறன் உண்மையில் வியப்புக்குரியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com