ஒரேப் பாடலில் மூன்று தெய்வங்களை அடையாளப்படுத்திய காளமேகப்புலவர்!

Kalamega Pulavar
Kalamega Pulavar
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on
deepam strip
deepam strip

காளமேகப் புலவர் இயற்றிய சிலேடைப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. ஒரேப் பாடலில் மூன்று தெய்வங்களுக்குப் பொருந்தும் வகையில் கூட ஒரு பாடலைத் தந்திருக்கிறார்.

விநாயகர், முருகன், பரமசிவன் என்று மூன்று தெய்வங்களுக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் அவர் பாடிய பாடல் இது;

“சென்னிமுக மாறுளதாற் சேர்கரமுன் நாலுகையால்

இந்நிலத்திற் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்

கண்ணுறுதலானுங் கணபதியுஞ் செவ்வேளும்

எண்ணரனு நேராவரே”

இப்பாடலில்,

‘விநாயகர்’ பற்றி எப்படிச் சொல்கிறார்?

சென்னிமுகம் மாறுளது - தலையும் முகமும் இயற்கைக்கு மாறுபட்டு யானைத் தலையும் முகமுமாக விளங்குகின்றன.

சேர்கரம் முன் நாலுகை - அவர் பெற்றிருக்கும் ஐந்தாவது கரமாகிய துதிக்கை முன்னால் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. (நாலுதல் - அசைதல்)

இந்நிலத்தில் கோடு ஒன்று இருத்தல் - இந்த உலகில் அவர் மகாபாரதம் எழுத, ஒடித்ததால் ஒற்றைக் கொம்புடன் விளங்குகிறார். (கோடு - கொம்பு)

மன்னு குளக்கண் உறுதல் - அவருக்கு உகந்த நிவேதனமாக வெல்லக்கட்டி (குளக்கண்) விளங்குகிறது. மேலும் வெல்லத்தில் (குளக்கண்) அவரே எழுந்தருளி வெல்லப் பிள்ளையாராகவும் வடிவம் எடுக்கிறார்.

இதேப் பாடல் ‘முருகன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?

சென்னிமுகம் ஆறு உளது - திருமுடியும் முகமும் ஆறு உள்ளன.

சேர்கரம் முந்நாலுகை - திருக்கரங்கள் முந்நான்கு - பன்னிரெண்டு அமைந்துள்ளன.

இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு மலை அவரது இருப்பிடமாக அமைகிறது. திருச்செங்கோடு போன்ற மலைத்தலங்கள் முருகனுக்கு உகந்தவை. (கோடு - மலை)

மன்னு குளக்கண் உறுதல் - இங்கு குளம் என்பது பொய்கையைக் குறிக்கும். அதாவது, முருகன் சரவணப் பொய்கையில் தோன்றியவன்.

இதேப் பாடல் விநாயகர், முருகன் ஆகியோரின் தந்தையான ‘பரமசிவன்’ குறித்தும் சொல்கிறது. எப்படி?

சென்னிமுகம் ஆறு உளது - தலையில் கங்கை என்ற ஆறு இருக்கிறது.

முன்சேர் கரம் நாலுகை - முன் புறத்தே உள்ள ஒளி சேர்ந்த நான்கு கரங்களைப் பெற்றுள்ளவர்.

இதையும் படியுங்கள்:
ஆடம்பர விருந்தை புறக்கணித்து, அவல் கஞ்சியை ருசித்த ஸ்ரீகிருஷ்ணர்!
Kalamega Pulavar

இந்நிலத்தில் கோடொன்று இருக்கை - இந்தப் பூமியில் ஒரு சிறந்த மலையான கயிலாயமே அவரது இருப்பிடம்.

மன்னு குளக்கண் உறுதல்- பொருந்திய நெற்றிக்கண்ணைப் பெற்றிருக்கிறார்.

ஒரு பாடலில் மூன்று தெய்வங்களை அடையாளப்படுத்திய காளமேகப் புலவரின் தமிழ்த்திறன் உண்மையில் வியப்புக்குரியது.

logo
Kalki Online
kalkionline.com