அழகு கொஞ்சும் 'காட்டழகர்' கோயில் ரகசியம்... தவளைக்கு சாப விமோசனம்... பலரும் அறியாத அற்புதம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை மடியில், நூபுர கங்கை ஓசையுடன் இயற்கை அழகும் ஆன்மீக அமைதியும் கலந்த, மதுரை கள்ளழகருக்கு இணையான, காட்டழகர் திருக்கோயில்
kattalagar-temple-srivilliputhur
kattalagar-temple-srivilliputhur
Updated on
Deepam
Deepam stripe

பெருமாளின் புனித தலங்கள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மதுரையில் உள்ள கள்ளழகர் கோயில் மட்டுமே. ஆனால், அந்தக் கள்ளழகர் கோயிலைப் போலவே மிகவும் அழகு கொஞ்சும் "காட்டழகர் திருக்கோயில்" எத்தனை பேருக்குத் தெரியும்? இது பலரும் அறியாத ஒரு அற்புத ஸ்தலமாகும்.

அமைவிடம்

இத்திருக்கோயில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின், செண்பகத்தோப்பு மலையில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள மலைப் பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாகும்; இங்கு அரிய வகைச் சாம்பல் அணில்கள் வாழ்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செண்பகத்தோப்பு காட்டுப் பகுதியில், மலையின் மீது இக்கோயில் வீற்றிருக்கிறது.

பயணப் பாதை மற்றும் சிறப்புகள்

  • இயற்கை வழிப் பாதை: இத்திருக்கோவிலுக்குச் செல்லும் பாதையானது இயற்கை அழகு கொஞ்சும் பசுமை நிறைந்த தாவரங்கள், மரங்கள் மற்றும் கரடுமுரடான கற்கள் நிறைந்த பாதையாகக் காணப்படும்.

  • நடைப்பயணம் மட்டுமே: மலை அடிவாரத்தில் இருந்து தோராயமாக 9 முதல் 12 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலை அடைவதற்கு நடைப்பயணம் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

  • தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை: மேல்மலையை அடைந்தவுடன், தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் 247 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • மூலவர் தரிசனம்: படிகளேறி மேலே சென்றவுடன், அங்கு சுந்தரராஜப் பெருமாள், சௌந்தரவள்ளி மற்றும் சுந்தரவள்ளித் தாயாருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

  • நூபுர கங்கை: மதுரை அழகர்கோவிலைப் போலவே, இங்கும் தீராத "நூபுர கங்கை" தீர்த்தம் ஆண்டு முழுவதும் வற்றாமல் விழுந்து கொண்டே இருக்கிறது.

தல வரலாறு

முன்னொரு காலத்தில், மதுரையில் உள்ள அழகர் கோயிலில் சுதப முனிவர் என்பவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவர் அங்குள்ள நூபுர கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த துர்வாச முனிவரைப் கவனிக்கத் தவறிவிட்டார். நீராடி முடித்ததும் நேராக பெருமாளுக்குப் பூஜைகளையும் செய்யத் தொடங்கினார்.

இதனால் பெரும் கோபமடைந்த துர்வாச முனிவர், "தன்னை மதிக்காமல் நீராடிய நீ, நீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு சாதாரண உயிரினமாக (தவளையாக) மாறுவாய்!" என்று சாபமளித்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: குலதெய்வ ரகசியம்: ஊர்க்கோடி அம்மன்!
kattalagar-temple-srivilliputhur

சாப விமோசனம்: தன் தவறை உணர்ந்த சுதப முனிவர், துர்வாச முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு வேண்டினார். இதனால் மனமிரங்கிய துர்வாசர், "நீ நாராயணன் நித்திய வாசம் செய்யும் 'வராக பர்வதம்' (மலை) சென்று தவம் புரிவாயாக! அங்கு கள்ளழகர், 'சுந்தரராஜ பெருமாள்' என்ற நாமத்தில் உனக்குக் காட்சியளித்து சாப விமோசனம் அளிப்பார்" என்று கூறினார்.

அதன்படியே சுதப முனிவரும் இந்தச் செண்பகத்தோப்பு மலையில் உள்ள காட்டழகர் கோயிலின் நூபுர கங்கையில் நீராடி, கடுந்தவம் புரிந்து, சுந்தரராஜ பெருமாளின் நித்திய தரிசனம் பெற்றுத் தன் சாபம் நீங்கப் பெற்றார்.

காட்டழகர் கோயில் (kattazhagar-temple-srivilliputhur) என்பது வெறும் ஆன்மீகப் பயணம் மட்டுமல்ல; இயற்கையோடு கலந்து, மன அமைதியுடன் எம்பெருமானைத் தரிசிக்க நினைப்பவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய உன்னதமான இடமாகும்!

logo
Kalki Online
kalkionline.com