கருட பகவான் பிறந்த தினம்தான் கருட பஞ்சமி என்று கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கருட பஞ்சமி விரதம் இருந்தால் கருடனைப்போல தாய்ப்பாசம் மிகுந்த வீரமிக்க புத்திரர்கள் பிறப்பார்கள் என்பது பெண்களிடம் காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை கருட பஞ்சமி அன்று ஆதிசேஷன் சிலைகளையும் வைத்து பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
புற்றுமண் எடுப்பதும் புற்றுக்கு பூசை செய்வதும் நடக்கிறது கருடனும் நாகமும் ஜென்ம விரோதிகள். அப்படி இருக்க அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் பூஜையா? வழிபடா? என்று சந்தேகம் வருகிறது அல்லவா இதற்கு காரணம் என்னவென்று பார்ப்போமா!
பிரம்ம தேவனின் மகன் காச்யப முனிவர். அவருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவி கத்ரு. இரண்டாம் மனைவி வினதை இவர்கள் இருவரும் சகோதரிகள். தட்ச பிரஜாபதியின் பெண்கள். கத்ரு வினதையை அடிமைபோல நடத்தி வந்தாள். இந்த கத்ருவின் பிள்ளைகளே நாகர்கள். வினதையின் பிள்ளைகள் கருடன்கள். பெரியம்மா கத்ருவின் விருப்பத்தை நிறைவேற்றவும், தனது தாயை அடிமை தளையில் இருந்து விடுவிக்கவும், கருடன் அமுத கலசத்தை எடுக்க செல்கிறார். அதை தடுக்கும் இந்திரனுடன் போரிடுகிறார். ஒரு கட்டத்தில் இந்திரனுக்கு உதவி செய்ய பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனும் வருகிறார். கருடன் ஆவேசமாக திருமாலுடனும் போரிடும் சந்தர்ப்பம் உருவாகிறது. இதனால்தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்.
கருடனின் தாயன்பும் பாசமும் வீரமும் திருமாலை பெரிதும் கவர்ந்து விடுகின்றன. ஆகவேதான் அவர் கருடனை தனது வாகனமாக இருக்குமாறு பணிக்கிறார். அவனும் பகவானை தாங்கும் ஒப்பற்ற பேற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறான். அவனது பணிவையும் வீரத்தையும் கண்டே பக்தர்கள் கருடனை பெரிய திருவடி என்று புகழ்ந்து பாடுகின்றனர். இந்த வகையில் கருடனுக்கு இத்தனை நன்மைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த நாகத்தையும் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.
பட்சி என்று சொல்லப்படும் பறவை இனங்களில் கருடன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால்தான், கருடனை பட்சிகளின் ராஜா என்பார்கள். அப்படி, பறவைகளின் தலைவனாகத் திகழ்வது கருட பட்சி. அதனால்தான் கருட பட்சிக்கு உரிய நாளில் வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
நாகனும் சாதாரண ஆள் அல்ல. பெருமாளைத் தாங்கும் ஆதிசேஷனாக இருக்கிறார். பரந்தாமன் பாற்கடலில் அவன் மீது தானே பள்ளிகொண்டு இருக்கிறார். ஆகவே கருட பஞ்சமி தினத்தன்று ஆதிசேசனையும் வழிபடுவது மரபாக இருக்கிறது. கருடனின் உடலில் ஆபரணங்களாக இருப்பவை அஷ்ட நாகங்களே என்று புராணங்கள் கூறுகின்றன. ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாகபஞ்சமி விரதம் தொடங்குகிறது.