அரசியல் தலைவர்களின் நம்பிக்கைக்குரிய வெற்றித் தலம்!

thiruchendur murugan temple Prasadam
thiruchendur murugan temple
Published on
Deepam strip
Deepam strip

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இது சூரபத்மனை வதம் செய்து வெற்றி பெற்ற தலம் என்பதால், இங்கு வீற்றிருக்கும் 'ஜெயந்தி நாதர்' வெற்றியைத் தருபவர் என்று போற்றப்படகிறார். அரசியல் தலைவர்கள் மற்றும் பக்தர்கள் தங்களின் தீவினைகள் நீங்கவும், தேர்தலில் வெற்றி பெறவும், குறைகள் தீரவும் திருச்செந்தூர் வந்து முருகனை வழிபடுவதை பெரும் நம்பிக்கையாகக் கொண்டுள்ளனர்.

சூரனை வென்றதால் இந்தத் தலம் 'திருஜெயந்திபுரம்' என அழைக்கப்பட்டு, பின்னர் 'திருச்செந்தூர்' என மருவியது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் வெற்றியை உறுதி செய்ய இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது.

ஆலய அமைப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்பு

திருச்செந்தூர் கோவிலில் (thiruchendur murugan temple) பாலசுப்ரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். வீரபாகு தேவர் இங்கு காவல் தெய்வமாக உள்ளார்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டில், டச்சு நாட்டு கடல் கொள்ளையர்கள் திருச்செந்தூர் கோவிலில் கொள்ளையடித்தனர். அங்கிருந்த கற்சிலைகளை உடைத்ததோடு, தெற்கு நோக்கி வீற்றிருந்த ஐம்பொன் திருவுருவமாகிய ஆறுமுக நயினாரை கப்பலில் தூக்கிச் சென்றனர். கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில், பெரும் புயலும் இடியுடன் கூடிய மழையும் பெய்தது. கடல் கொந்தளிப்பால் கப்பல் தத்தளித்ததைக் கண்டு பயந்த கொள்ளையர்கள், சண்முகப் பெருமானின் சிலையைக் கடலில் தூக்கிப் போட்டனர். அடுத்த கணமே புயல் ஓய்ந்தது.

இதனைத் தொடர்ந்து, முருக பக்தரான வடமலையப்ப பிள்ளையின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தான் கடலில் இருக்கும் இடத்தைக் கூறி தன்னை மீட்குமாறு பணித்தார். அதன்படி, வடமலையப்ப பிள்ளை கடலில் இருந்து சண்முகர் விக்ரகத்தைக் கண்டெடுத்து, மீண்டும் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.

லூசிங்டன் துரையும் முருகனின் வியர்வையும்

சுமார் 190 ஆண்டுகளுக்கு முன்பு, திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேய ஆட்சியராக எஸ்.ஆர். லூசிங்டன் இருந்தார். 1803-ஆம் ஆண்டு திருவிழாவின் போது அவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு தீப தூப உபசாரங்கள் செய்து, கவரிமான் விசிறி கொண்டு வீசுவதைக் கண்ட அவர், "வீதி உலா வந்து களைத்துப் போன முருகனுக்கு என்ன வியர்க்கவா செய்கிறது?" என ஏளனமாக வினவினார்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அர்ச்சகர் உற்சவ மூர்த்தியின் ஆபரணங்களைக் களைந்துவிட்டுப் புதிய பருத்தி ஆடையைச் சாத்தினார். ஆச்சரியப்படும் விதமாக, அந்த ஆடை முழுவதும் வியர்வையால் நனைந்தது! இதைக் கண்டு மெய்சிலிர்த்த லூசிங்டன், தனது பிழையை உணர்ந்து முருகனை வழிபட்டார். அதன் பின் விலைமதிப்பற்ற வெள்ளிப் பாத்திரங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாகச் செலுத்தினார்.

மகிமை நிறைந்த இலை விபூதி பிரசாதம்

திருச்செந்தூர் கோவிலில் பன்னீர் இலைகளில் வைத்து வழங்கப்படும் 'இலை விபூதி' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவில் திருப்பணியின் போது பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப் பணமில்லாத சூழலில், முருகப்பெருமான் சாதுக்களின் கனவில் தோன்றி, பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குமாறு கூறினார். பணியாளர்கள் அந்த விபூதிப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் அவரவர் உழைப்பிற்கேற்ற ஊதியம் (பொற்காசுகள்) இருந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த இலை விபூதியை உட்கொண்டால் காசநோய், கை கால் வலிப்பு, கபம் மற்றும் குஷ்டம் போன்ற நோய்கள் குணமாவதாக நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
நரசிம்மர் கோயிலில் ஆடு கோழி நேர்த்திக்கடன்! மலைவாழ் வேடுவ குலத்தினர் செலுத்தும் விநோதம்!
thiruchendur murugan temple Prasadam

தனித்துவமான வழிபாட்டு முறைகள்

  • கண் மலர்கள்: ஆறுமுகப் பெருமானின் வலக்கண் சூரியன்; இடக்கண் சந்திரன். அதனால் அவர் வலப்புறம் உள்ள வள்ளியம்மை கையில் சூரியனைக் கண்டு மலரும் 'தாமரை' மலரும், இடப்புறம் உள்ள தெய்வானை கையில் சந்திரனைக் கண்டு மகிழும் 'குமுதம்' மலரும் காணப்படுகின்றன.

  • ஆடை அலங்காரம்: மூலவர் சுப்பிரமணியருக்குத் தூய வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்குப் பச்சை நிற ஆடைகளும் அணிவிக்கப்படுகின்றன.

  • பஞ்சலிங்கங்கள்: மூலவருக்குப் பின்புறம் உள்ள சுரங்க அறையில் முருகன் பூஜித்த 'பஞ்சலிங்கங்களைக்' காணலாம்.

  • நிவேதனம்: மூலவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்கு உப்பு, புளி, காரம் இல்லாத உணவுகளே (சர்க்கரை பொங்கல், சுத்த அன்னம்) படைக்கப்படுகின்றன. இல்லறக் கோலத்தில் இருக்கும் சண்முகருக்கு பால் பாயாசம், புளியோதரை உட்பட ஆறு வகை நிவேதனங்கள் படைக்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலம், இன்றும் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நம்பிக்கைக்குரிய வெற்றித் தலமாகத் திகழ்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com