சாபத்தால் சாய்ந்து நிற்கும் சிவன் கோயில்!

சாபத்தால் சாய்ந்து நிற்கும் சிவன் கோயில்!

ந்தியாவின் வாரணாசி நகரத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கா நதியையும் அதன் கரையில் உள்ள கோயில்களையும் தரிசிக்க வருகை தருகின்றனர். கங்கைக் கரையில் உள்ள ரத்னேஷ்வர் சிவன் கோயில் இங்குள்ள மற்ற கோயில்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. உலகப் புகழ் பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அது சுமார் 4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால், வாரணாசியில் உள்ள இந்த கோயில் சுமார் 9 டிகிரி சரிந்துள்ளது. அதோடு, இந்தக் கோயில் ஆண்டுதோறும் மேலும் சாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர். இந்தக் கோயில் இப்படி சாய்வதற்கு ஒரு சாபம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உயரம் 74 மீட்டர். இது பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரத்தை விட 20 மீட்டர் அதிகம். ஆனால், இதைப் பற்றி நம் ஊர் மக்களுக்கு அதிகம் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இந்தக் கோயில் சாய்ந்து வருவதற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ராணி அஹல்யாபாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களைக் கட்டும்போது, ​​அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னாபாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார். பெரிய தொகையை கொடுத்த அந்தப் பணிப்பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரை கோயிலுக்கு வைத்ததை கேள்விப்பட்ட அஹல்யா இந்த கோயிலுக்கு சாபம் கொடுத்ததால்தான் நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல், ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோயில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு, அம்மாவின் கடனை அடைத்துவிட்டதாகப் பெருமையுடன் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அவன் உதடுகளிலிருந்து வெளிப்பட்டவுடன், அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதைக் காட்ட கோயில் ஒரு பக்கம் சாய்ந்து விட்டதாக இன்னொரு கதை கூறப்படுகிறது.

ஆனாலும் அறிவியலின்படி, நதியின் கரையில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் நிலப்பரப்பு ஸ்திரத்தன்மை குறைந்த இடம். நீரோடும் பாதையால் நில அரிப்பு ஏற்பட்டு தளம் பலவீனம் அடைவதால்தான் நாளுக்கு நாள் இந்தக் கோயில் ஒரு பக்கம் சாய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கோயில் வருடத்தின் பாதி நாட்கள் நதியில் மூழ்கியே காணப்படுகிறது.

ஒரு சில நாட்கள் இந்தக் கோயிலின் கோபுர உச்சி வரை கூட தண்ணீர் இருக்கிறது. இதனால் இந்தக் கோயிலுக்கு வருடத்தின் சில நாட்களில் மட்டுமே பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தக் கோயில் கருவறையில் ஒன்றல்ல பல சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனாலேயே இந்தக் கோயில், சிவனின் சிறிய நீதிமன்றம் என்று அழைக்கப்படுகிறது. கோயில் ஒரு பக்கம் சாய்ந்து இருப்பதால் இந்தக் கோயிலின் கருவறையில் யாரும் நேராக நிற்க முடியாது. சற்று சாய்ந்து பேலன்ஸ் பண்ணிதான் வழிபாடு செய்ய வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com