

அர்ஜூனனின் தேர் ஒரு போர் வாகனம் மட்டுமல்ல , அது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் எவ்வாறு நகர்த்தி செல்வது என்பதை விளக்கக் கூடிய வாழ்வியல் பாடமாகவும் இருக்கிறது. அர்ஜூனனின் தேர், போரின் போது பாதுகாப்பு கவசமாகவும் , பல முறை அவனது உயிரைக் காப்பாற்றியும் இருக்கிறது.
அந்த தேர் உணர்ச்சிகளுக்கும் கடமைகளுக்கும் நடுவில் சிக்கி தவித்துள்ளது. அர்ஜூனனின் தேர் போன்றது தான் மனிதனின் வாழ்க்கையும். நம்மை சுற்றி ஒரு தெய்வீக சக்தி பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
தேரோட்டியும் கடவுளும்:
அர்ஜூனனின் தேரினை இயக்குபவர் உலகத்தை காத்து ரட்சிக்கும் ஸ்ரீ கிருஷ்ணரான மகாவிஷ்ணு. ஒரு தேரினை இயக்க கடிவாளத்தை சரியாக கையாள தெரிந்தவரால் மட்டுமே இயலும். ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஞானத்தின் மூலம் அதிக கவனம் எடுத்து தேரினை இயக்கிக் கொண்டிருந்தார்.
அவரது சிந்தனை போரின்போது அர்ஜூனனை காப்பது மட்டுமின்றி, ஆலோசனைகளைக் கொடுத்து அவரை வெற்றிகரமாக வழி நடத்திக் கொண்டிருந்தது. இது போலவே உலகை காத்து ரட்சிக்கும் கடவுளின் முடிவின் படியே உலகம் இயங்குகிறது. ஏதேனும் ஒரு ரூபத்தில் அவரது ஆலோசனைகள் நம்மை வந்து அடையும். அதை ஏற்றுக் கொண்டால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அர்ஜூனனின் தேரும் வாழ்க்கையும்:
தேர் என்பது உலோகங்கள், மரம் மற்றும் சக்கரத்தினால் செய்யப்பட்ட வாகனம் மட்டுமல்ல, அது மனித வாழ்வை பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகும். உங்களுக்கு தேரினை இயக்குவதற்கு தெரியாவிட்டால், அது தறிக்கிட்டு ஓடி , ஒரு இடத்தில் உங்களை ஆபத்தில் சிக்கிக்கொள்ள வைத்து விடும்.
நமது வாழ்க்கை சரிவர இயங்குவதற்கு நாம் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். தேரானது குதிரையின் இழுவையின் மூலம் உந்தப்பட்டு முன்னோக்கி செல்கிறது. அதுபோலவே உங்களது அறிவும் திறமையும் உங்களை முன்னோக்கி செல்ல உந்துகிறது. சரியான திறமையும் தக்க சமயத்தில் அறிவையும் பயன்படுத்தாவிட்டால் தேர், மேடு பள்ளங்களில் சிக்கிக் கொள்வதை போல, வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்வதற்கு தடங்கலை ஏற்படுத்தும்.
குதிரையும் மனமும்:
தேரில் பூட்டப்பட்டுள்ள குதிரையின் கண்கள் மூடப்பட்டு இருக்கும். அதன் கண்கள் திறக்கப்பட்டால் அது ஓடும் போது தன் இஷ்டத்திற்கு ஓட தொடங்கி விடும். நமது மனதினை கட்டுப்படுத்தினால் தான், முன்னேற்றத்தை நோக்கி தெளிவான பாதையில் செல்ல முடியும். விரிவான பார்வையை விட , ஒரே இடத்தை நோக்கிய தெளிவான பார்வை தான் இலக்கை அடைவதற்கு சிறந்த உந்துதலாக இருக்கும்.
கடிவாளமும் கட்டுப்பாடும்:
கடிவாளம் என்னும் கட்டுப்பாட்டு பொருள் தான் குதிரையையும் தேரோட்டியையும் இணைக்கிறது. கடிவாளம் என்ற ஒன்று இல்லாவிட்டால் குதிரை தேரை விட்டு தனியாக ஓடிவிடும். மனம் பலவீனமாக இருக்கும் போதும் , கட்டுப்பாடற்று இயங்கும் போதும் அதன் பாதை நேராக செல்லாது. மனதிற்கு யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது, என்பது தெரியாது.
கடிவாளம் என்பது ஒரு வழிகாட்டுதல் போல , பல சமயங்களில் பெரியோர்களின் பேச்சு கடுமையாக இருந்தாலும், அவர்கள் உங்களது வாழ்க்கைப் பயணத்தை சீராகக் கொண்டு செல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையிலும் கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால் அது ஒருவரை சீரழித்து விடும்.
தேரோட்டியும் வழிநடத்தலும்:
தேரோட்டியான கிருஷ்ணர் அறிவு, ஆற்றல், ஞானம், பாதுகாப்பு, தந்திரம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார். அர்ஜுனன் மிகச்சிறந்த வீரன் என்பதை விட அவனை இயக்கியது கிருஷ்ணர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கர்ணன், அஸ்வத்தாமன் , பீஷ்மர் , துரோணர் போன்ற வீழ்த்த முடியாத மாபெரும் வீரர்கள் எதிர்ப்புறம் இருந்தாலும் , வெற்றியை நோக்கி பாண்டவர்களை நகர்த்தியது ஸ்ரீ கிருஷ்ணரது அறிவுரைகளும் ஆலோசனைகளும் தான்.
ஒவ்வொருவர் மனதிலும் உள்ள உள்ளார்ந்த ஞானம் தான் அவர்களை வழிநடத்துகிறது. சிந்திப்பதும் செயல்படுவதும், ஆலோசிப்பதும் வாழ்க்கையின் வெற்றிக்கு சாதகமாக இருக்கும். நமது பின்னணி என்பதை விட சரியான நபர்கள் நம்மை சுற்றி இருந்தால் அர்ஜுனனை போல வெற்றி பெறுவது சாத்தியமாகும்.
அர்ஜூனன் மற்றும் நாம்:
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அர்ஜூனன் பிரதிபலிக்கிறான். என்னதான் அறிவும் திறமையும் இருந்தாலும் குழப்பம், தயக்கம் , சலனம் போன்றவை நம்மிடத்தில் இருக்கின்றன. சரியான சந்தர்ப்பத்தில் நமது திறமையை வெளிப்படுத்துவது தான் வெற்றிக்கு சிறந்த வழியாக இருக்கும். கிருஷ்ணனை போல ஒரு சிறந்த நண்பன் உங்களுக்கு கிடைத்துவிட்டால், உங்களது வளர்ச்சி தடைபடாமல் இருக்கும்.