Choleswarar Temple Mini kashi in erode
Choleswarar Temple

நந்தி பகவானுக்கு அழகு அபிஷேகம்... காண கண் 'கோடி' வேண்டும்!

ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியும், சோழர் காலத்துக் கட்டடக்கலை நுணுக்கங்களும் கொண்ட அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு நகருக்கு மிக அருகில் பள்ளிபாளையத்தில் அமைந்துள்ளது.
Published on
deepam strip
deepam strip

ரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், புண்ணிய நதியான காவிரியின் கிழக்குக் கரையில் ஆன்மிகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில். சுமார் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியும், சோழர் காலத்துக் கட்டடக்கலை நுணுக்கங்களும் கொண்ட இக்கோயில், ஈரோடு நகருக்கு மிக அருகில் பள்ளிபாளையத்தில் அமைந்துள்ளது.

வரலாற்றுப் பின்னணியும் தல வரலாறும்:

இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதால் 'சோழீஸ்வரர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் சுவாரசியமான ஒரு கதை உண்டு.

ஒரு சமயம் இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் (கருணாகர சோழன் என நம்பப்படுகிறது), காவிரிக்கரை ஓரம் வேட்டைக்கு வந்தபோது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகுந்த தெய்வீக அதிர்வை உணர்ந்தார். அந்த இடத்தில் ஆய்வு செய்தபோது ஒரு 'சுயம்பு லிங்கம்' இருப்பதைக் கண்டார். அந்த லிங்கத்திற்கு அங்கேயே ஒரு கோயிலை எழுப்ப மன்னன் ஆணையிட்டார். காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கிலிருந்து காக்க, கோயில் சற்று மேடான பகுதியில் அமைக்கப்பட்டது.

மற்றொரு வரலாற்றுச் செய்தியாக, கரிகால் சோழன் காவிரிக்குக் கரை அமைத்தபோது, ஆற்றின் இருபுறமும் சிவ ஸ்தலங்களை எழுப்பியதன் ஒரு பகுதியாக இக்கோயிலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

'பள்ளிபாளையம்' என்ற பெயரும் இக்கோயிலோடு தொடர்புடையது. சமணத் துறவிகள் தங்கியிருந்த 'பள்ளி'களும், மன்னர்களின் படைகள் தங்கியிருந்த 'பாளையங்களும் இணைந்து இப்பகுதி ஆன்மிக மற்றும் நிர்வாக மையமாகத் திகழ்ந்தது.

ஆலய அமைப்பு:

திராவிடக் கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ள இக்கோயில், நுழைந்ததுமே ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் மூலவர் சோழீஸ்வரர், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மன அமைதியையும், வாழ்வின் தடைகளை நீக்கும் வலிமையையும் தருகிறார். இவரை வணங்குவது காசியில் விஸ்வநாதரை வணங்குவதற்கு இணையானது என்பது ஐதீகம். தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் அம்பிகை சொர்ணாம்பிகை, பக்தர்களுக்கு மங்கல வாழ்வையும் செல்வத்தையும் அருளும் தாயாகப் போற்றப்படுகிறார்.

கருவறையைச் சுற்றிலும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை சன்னதிகள் உள்ளன. விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

ராகு - கேது பரிகாரத் தலம்:

இங்குள்ள நவக்கிரக சன்னதி மிகவும் சக்தி வாய்ந்தது. ராகு-கேது தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு நாக சிலைகளைத் தானமாக வழங்கியோ அல்லது பாலாபிஷேகம் செய்தோ வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 'நாக பிரதிஷ்டை' செய்வதை முக்கிய நேர்த்திக்கடனாகக் கொண்டுள்ளனர்.

கால பைரவர் வழிபாடு:

இக்கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதி மிகவும் விசேஷமானது. தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கு நடைபெறும் சிறப்பு யாகங்கள் மற்றும் மிளகு தீப வழிபாடு, கடன் தொல்லைகள் மற்றும் எதிரிகள் பயத்தை நீக்கும் வல்லமை கொண்டது.

மற்ற சிவாலயங்களைப் போலவே இங்கும் பிரதோஷ பூஜைகள் கோலாகலமாக நடைபெறும். நந்தி பகவானுக்குச் செய்யப்படும் அபிஷேகங்களைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளுவர். ஆடிப் பெருக்கு அன்று காவிரி ஆற்றில் நீராடி, புனித நீரை எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

இதையும் படியுங்கள்:
யானையை நடுங்க வைத்த சிறு கோழி! ‘கோழியூர்’ ஆண்ட ‘கோழியோன்’ கட்டிய கோயில்!
Choleswarar Temple Mini kashi in erode

ஆன்மிக இணைப்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கும், ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கும் இடைப்பட்ட ஒரு முக்கியப் புள்ளியாக இக்கோயில் கருதப்படுகிறது. முற்காலத்தில் திருச்செங்கோடு செல்லும் பக்தர்கள் காவிரிக் கரையில் உள்ள இந்தச் சோழீஸ்வரரை(Choleswarar Temple) வணங்கிச் செல்வதையே மரபாகக் கொண்டிருந்தனர். கோயிலில் உள்ள கல்வெட்டுகள், அக்கால மன்னர்கள் இக்கோயிலுக்கு வழங்கிய நிலங்கள் மற்றும் தானங்கள் பற்றி விளக்குகின்றன. ஈரோடு மற்றும் நாமக்கல் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க இக்கோயிலைத் தேடி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com