உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாபூர் மாவட்டத்தில் கோமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நைமிசாரண்யம் விஷ்ணு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு புனித இந்து கோயிலாகும். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்த தலத்தில் இறைவனை, பக்தர்கள் அனைவரும் காடுகளின் வடிவமாக வணங்குகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எட்டு சுயம் வ்யக்த ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலத்திற்கு செல்லும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
இங்கு மூலவராக தேவராஜரும், துணைவியாக புண்டரீக வள்ளியும் உள்ளனர். இத்தலத்திற்கு 'நைமிசாரண்யம்' என்ற பெயர் வந்ததற்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. நேமி' என்பதற்கு சக்கரவளையம் என்று பொருள். 'ஆரண்யம்' என்றால் காடு. நேமி சார்ந்த ஆரண்யம் என்பதே 'நைமிசாரண்யம்' என்று பொருள் கொள்ளலாம். 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்ர வேள்வியை செய்ய வேண்டும் என்று தவ வலிமையில் சிறந்த முனிவர்கள் விரும்பினர். சௌகனர் தலைமையில் முனிவர்கள் அனைவரும் தகுந்த இடத்தை தேர்வு செய்து தருமாறு பிரம்மனிடம் வேண்டினர். உடனே பிரம்மதேவன், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக செய்து, பூமியை நோக்கி உருட்டி விட்டார். அது எங்கு விழுகிறதோ, அந்த இடமே தவம் மேற்கொள்ள சிறந்த இடமாக இருக்கும் என்று முனிவர்களிடம் தெரிவித்தார் அது விழுந்தஇடத்தில் தவம் செய்யுங்கள் என்றார். அதுவே நைமிசாரண்யம் பகுதி என்கிறது தல வரலாறு.
வேள்வியின் இறுதியில் அந்த யாகக் குண்டத்தில் இருந்து எழுந்தருளிய மகாவிஷ்ணு அவிர் பாகத்தைப் பெற்று முனிவர்களுக்கு அருள்புரிந்தார் இங்குள்ள மக்களும் திருமாலை ஆரண்ய (காடு) வடிவில் வழிபடுகின்றனர்.
இங்குள்ள கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்கர தீர்த்தத்தில் நீராட வேண்டும். அமாவாசை அன்று சக்கர தீர்த்தத்தில் நீராடினால், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். ஏனெனில் இந்த சக்கர தீர்த்தம், ஈரேழு உலகங்களிலும் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியதெனச் சொல்லப்படுகிறது.
ஜகத் ஜனனியின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும் லலிதா தேவி கோயில் இங்குள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாகும். இது நைமிசாரண்யத்தில் உள்ள பிரதான கோயில் தேவியின் இதயம் விழுந்த இடமாகச் சொல்லப்படுகிறது.
வியாஸ் காடி என்றழைக்கப்படும் இங்குள்ள ஆசிரமித்தில்தான் மகரிஷி வேதவியாசர் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், கீதை, மகாபாரதம் மற்றும் ஸ்ரீ சத்யநாராயண விரத கதை ஆகியவற்றை இயற்றினாரெனக் கூறுகிறார்கள்.
ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய ராமர், அதன்பின் அஸ்வமேத யாகம் செய்த இடம் இது என்றும் சொல்லப்படுகிறது. .
ஹனுமான் கர்ஹி நைமிசாரண்யத்தில் உள்ள ஒரு வரலாற்று புனித தலமாகும், இது ஒரு வளமான புராண முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
அஹிராவணனை வென்ற பின்னர் பாதாள லோகத்திலிருந்து ஹனுமான் தோன்றியதை சித்தரிக்கிறது. ராமரையும் லட்சுமணனையும் தன் இரு தோல்களில் சுமந்தபடி ஹனுமான் காட்சி தருகிறார்.
நைமிசாரண்யம் என்னும் இந்த தலத்திலிருந்துதான் சூத முனிவர் என்பவர், மகாபாரதம் உள்ளிட்ட பல்வேறு இதிகாசங்களை, சவுனகா் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோர் இங்கே வருகை புரிந்துள்ளனர். ஆதிசங்கரர் இங்கே வந்து தியானம் செய்துள்ளார்
கலியுகத்தில் முக்தி பெற கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு சிறந்த இடமாக நைமிசாராயணம் அறியப்படுகிறது. அந்தப் புனித தலத்திற்கு சென்று இறைவனை வழிபடுவதால் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி, செல்வம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம். மேலும் இது ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையை அடையவும் உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது.