நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற சித்தர் பாடல் உணர்த்தும் பொருள் என்ன ?

நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற சித்தர் பாடல் உணர்த்தும் பொருள் என்ன ?

சித்தர்களின் பாடல்கள்‌ மேலோட்டமாக , ஏதோ விளையாட்டுத்தனமானவைப் போல் தோன்றும். அது மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு பொருளையும், ஆழ்ந்து ஆராயும் போது மற்ற பொருளையும் கொடுக்கும். அவ்வாறு ஆழ்ந்து ஆராய்ந்து அதன் பொருளை அறிய ஞானிகளால் மட்டுமே முடியும்.

எவ்வாறு ஜாங்கிரி சாப்பிடும் ஒருவனால், பாதுஷாவின் சுவையை அறிவது கடினமோ, எவ்வாறு காபி சாப்பிடுபவன் பாதுஷாவின் சுவையை எளிதில் அறிவானோ, அவ்வாறே சித்தர்களின் பாடல்களின் பொருளை அறிய அதனை விட மெல்லிய மனம் அதிர்வில் மனதை வைக்க வேண்டும்.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

து கடுவளி சித்தர் எழுதிய பாடல். இது மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது, நந்தவனத்தில் இருந்த ஆண்டி ஒரு பைத்தியக்காரன் போல நமக்கு தோன்றும். குயவனை நான்கு, ஆறு மாதமாக வேண்டி கேட்டு பெற்ற தோண்டியை கூத்தாடி உடைத்து விட்டான் என்று தோன்றும்.

ஆனால் ஆழ்ந்து நோக்கும் போது, இது மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கிய பாடல். இங்கு

நந்தவனம் = உலகு

ஆண்டி= ஆன்மா

நால் ஆறு மாதம்= 4+6 பத்து மாதங்கள் தாயின் வயிற்றிலிருந்த கருவறை

குயவன் = இறைவன்

தோண்டி= மனிதப் பிறவி

அதாவது ஆன்மாவானது, பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து, இறைவனின் கருணையினால் மனிதப் பிறவி எடுக்கிறது.

ஆனால், வேண்டி பெற்ற இந்த மனிதப் பிறவியின் அருமை தெரியாமல், ஆன்மாவானது உலக இன்பங்களில் சிக்கிக் கொண்டு, உலக இன்பங்களில் மூழ்கி மனிதப்பிறவியை முடித்து விடுகிறது.

மனிதப் பிறவி என்பது மிகவும் அரிதான ஒருபிறவி. பல்வேறு பிறவிகளை கடந்த மனிதன், மனிதப் பிறவியை அடைந்து உள்ளான். இதைத்தான் ஔவையார் பின் வருமாறு கூறுகிறார்கள்.

அரிது அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்

ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான் செய்தல் அரிது

தானமும் தவமும் தான் செய்ததாயினும்

வானவர் நாடி வழி பிறந்திடுமே!

இத்தகைய மதிப்பு வாய்ந்த மனிதப் பிறவியை மனிதன் கூத்தாடி கூத்தாடி அதாவது ஐம்புலன்களின் புலன் மயக்கத்தில் சிக்கிக்கொண்டு மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து இறைவனை அடையாமல் மறுபடி-மறுபடி பிறவி எடுக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார் கடுவளி சித்தர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com