நந்தி வாயிலிருந்நது நீர்...
நந்தி வாயிலிருந்நது நீர்...

நந்தி மேலே - சிவன் கீழே - மல்லேஸ்வரத்தில் இருக்கும் சிவன் கோவிலில் ஆச்சரியம்!

கோவிலுள்ளே நுழைந்ததும் நேர் எதிர்புறம்  நந்தியம்பெருமான் தெரிவார். ஆனால் அவருக்கும் நமக்கும் இடையிலே கீழே ஒரு சதுர வடிவில் குளம். நாலா பக்கமும் சீராக ஏழெட்டு படிகள். சுற்றியும் கல்மண்டபம். நுழைவாயிலும் அதன் எதிற்புறம் இருக்கும் நந்தி சந்நிதியும் குளத்தைச்சுற்றி மேல் தளத்தில் அமைந்துள்ளது. நந்திக்கு நேர் கீழே குளக்கரையொட்டி சிவலிங்கம்.  நந்தி வாயிலிருந்நது நீர் சிறு தாரையாக வந்து கொண்டேயிருக்கிறது. அவர் எதிரேயுள்ள பெரிய துவாரம் வழியாக ஜலம் கீழ்தளத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது அபிஷேக தீர்த்தமாக விழுகிறது. 

நாம் நந்தி தேவரை தரிசித்துவிட்டு படிகள் வழியே கீழிறங்கி சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.

இந்தக் கோவில் 400 ஆண்டுகள் பழைமையானது என்று சிலரும் இல்லை  7000ஆண்டுகள் ஆனது என்று சிலரும் கூறுகிறார்கள். எப்படியிருந்தாலும் மண் மூடியிருந்த பழைமையான இக்கோவில் கண்டெடுக்கப்பட்டது என்னவோ 1997ல்தான். வீடு கட்ட நிலத்தைத் தோண்டுகையில் நந்திமுகம் தெரியவே  தொல்லியல் துறைக்குத் தெரியப்படுத்தி, தோண்டிய பொழுது  மண்டபமும், சமநிலையை விட அடித்தளத்தில் சிவலிங்கமும், குளமுமாக சேதமில்லாமல் தென்பட்டது. சுத்தம் செய்தபோது, நந்தி வாயிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டேயிருப்பதும் கீழே சிவன் தலையில் தொடர்ந்து விழுவதைக் கண்டும் வியப்புற்றனர்.

எந்த ஆராய்ச்சியாளரும், இந்த நீர் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  குளத்தில் விழும் நீர் அருகில் ஒரு கிணற்றை அடையும்படி அமைக்கப் பட்டிருந்ததாகவும், ஆக்கிரமிப்பில் அவ்வழித்தடம் மூடியுள்ளதாகவும் தகவல். நந்தியின் வாய் வழியே கீழே நேரே விழும் ஜலத்தை  தாரா பாத்திரம் அமைத்து அதன் வழியே விழுமாறு தற்பொழுது செய்துள்ளனர்

இந்தக் கோவிலில் நந்தி தெற்கு நோக்கி இருப்பதும் ஒரு சிறப்பு. கோபுரம் கிடையாது. கல் தூண்களோடு அமைந்த மண்டபம் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை - உதவி தொகை!
நந்தி வாயிலிருந்நது நீர்...

பிரதான சிவபெருமான் சந்நிதியைத் தவிர விநாயகர் மற்றும் நவக்ரஹ சந்நிதி. நீண்ட துதிக்கையுடன்  அழகான பிள்ளையார்.  நவக்ரங்களும்  அறுகோணபீடத்தில் மிக அழகுடன் நின்று அருள்பாலிக்கின்றனர்

ஸ்ரீதக்ஷிணமுக நந்தி தீர்த்த கல்யாண க்ஷேத்திரம் என்று வழங்கப்படும் இக்கோவில் தீர்த்தம் ஆரோக்யத்திற்கு நல்லது என்ற நம்பிக்கையில் பலரும் பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு வீட்டிற்க்கு எடுத்துச் செல்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com