நாகத்தின் மீது நடனமாடும் நடராஜர்!

Mattruraivaradeswarar Temple, Tiruvasi
Mattruraivaradeswarar Temple, Tiruvasi
Published on

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பாடல் பெற்ற தலம். தற்போது திருவாசி எனப்படுகிறது. அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோவில். இது சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது.

சமீவனேஸ்வரர் என்ற ஈசனுக்கு 'மாற்றுரைவரதீஸ்வரர்' என்ற திருநாமம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? சுந்தரர் திருத்தல யாத்திரை செல்லும் போது தனது அடியார்களுக்கு குறைவிலாது உணவு வழங்குவது வழக்கம். இதற்காக  செல்லும் இடங்களில் ஈசனிடம் பொன் பெறுவது வழக்கம். அப்படி திருவாசி தலத்தில் பொன்  பெற்ற போது அதன் தரத்தை அறிந்து கொள்ள வேண்டினார். ஈசனே மாற்று உருவில் வந்து பொன்னின் தரத்தை உரைத்துச் சொன்னாராம். அதனால் 'மாற்று உரை வரதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

கருவறையில் ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்புலிங்கமாக அருள்கிறார். ராஜ கோபுரத்தின் கீழ் அதிகார நந்தி, மனைவியுடன் எழுந்தருளியுள்ளார். நவக்கிரக சந்நிதியில் சூரியன் தன் மனைவியருடன் காட்சி தருகிறார். மற்ற கிரகங்கள் எல்லாம் அவரைப் பார்த்தபடி இருப்பது எங்குமே இல்லாத சிறப்பு.

தல வரலாறு:

கொல்லிமழவன் என்னும் மன்னன் மகளைத் தாக்கிய நோயை மடக்கி, ஒரு பாம்பாக மாற்றி அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகிறார் என்பது இங்கு மட்டும் காணக்கூடிய சிறப்பு.

இதையும் படியுங்கள்:
சிவனின் அருளை எளிதில் பெறுவதற்கான வழிகள்!
Mattruraivaradeswarar Temple, Tiruvasi

வைகாசி மாதம் பெளர்ணமி தொடங்கி 11 நாட்கள் முத்துப் பல்லக்கு விழா இங்கு விசேஷமான விழா ஆகும். சோமவாரம் திங்களில் 7 விளக்குகளில் இலுப்ப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் பொருளாதாரம் மேம்படும். 5 வெள்ளிக் கிழமைகளில் இங்குள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் திருமணம் விரையில் நடக்கும். தீராத வயிற்று வலி, நோயுற்றவர்கள் இங்கு 9 வாரம் தொடர்ந்து வந்து விளக்கு போட பலன் கிடைக்கும். பால் குடிக்காமல் அழும் குழந்தைகளுக்கு 'பாலாரிஷ்டம்' என்ற தோஷம் நீங்க காலை 7 மணி முதல் 12 மணிக்குள் இங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் செய்து குழந்தை பெயரில் அர்ச்சனை செய்து, அபிஷேக தீர்த்தத்தை குழந்தை மீது தெளித்தால் பாலாரிஷ்டம் தீரும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள தேவி அன்னப்பறவையாக உருவெடுத்து வந்து 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றார் என தலவரலாறு கூறுகிறது.

நாமும் சென்று வழிபட்டு அருள் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com