

தமிழில் சங்க இலக்கியத்தில் தன் மனைவி கூடவே உடலுடன் விண்ணுலகம் ஏகிய அதிசயப் புலவரின் உண்மை வரலாறு இடம் பெறுகிறது. அந்தப் புலவரின் பெயர் பாலை கௌதமனார்.
பாலை இன்றைய பாலக்காட்டைக் குறிக்கிறது. கௌதமனார் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.
பதிற்றுப்பத்து என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பத்துப்பேரைப் பற்றிப் பத்துப் புலவர்கள், பத்து பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு நூலாகும். முதல் பத்தும் இறுதிப் பத்தும் நமக்கு இன்று கிடைக்கவில்லை.
இதில் மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கௌதமனார், அதில் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் பற்றி பாடியுள்ளார். இவரது பாடல் ஒன்று புறநானூற்றிலும் உள்ளது. (பாடல் எண் 366).
இவர் பாடிய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த சேர மன்னன் அவருக்குப் பரிசளிக்க விரும்பினான். உங்களுக்கு என்ன வேண்டும்? வேண்டியதைக் கேளுங்கள் என்றான் சேரன்.
உடனே கௌதமனார், “யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட மன்னன் பார்ப்பனர்களில் பெரியவர் யார் என்று கேட்டறிந்து அவரை வைத்து வேள்வியைச் செய்தான்.
ஒன்பது வேள்விகள் நடக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாலைக் கௌதமனாரும் அவர் மனைவியும் பத்தாவது வேள்விக்குப் பின் காணவில்லை.
அவர்கள் உடலுடன் வேள்வியின் பயனாக சுவர்க்கம் புகுந்தனர்.
இதைப் பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடும் போது, “இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடினார் பத்துப்பாட்டு.
பாடிப் பெற்ற பரிசில்:
“நீர் வேண்டியது கொண்மின்’ என,
‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்’ என பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு,
ஒன்பது பெருவேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர்.”
என்ற குறிப்பைக் காண்கிறோம்.
உடலுடன் விண்ணுலகம் செல்வது பற்றிய பல குறிப்புகளை தமிழ் இலக்கியத்தில் காணலாம்.
பத்துப்பாட்டில் இரண்டாம் பத்தான பொருநராற்றுப் படையை இயற்றிய முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர்
“தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது
அதன் பயம் எய்திய அளவை மான” (வரிகள் 91, 92)
என்று குறிப்பிடுகிறார்.
இதன் பொருள்: தவம் செய்யும் பெருமக்கள் தம் உடலை விட்டு உயிர் விலகுவதற்கு முன்பே தவத்தின் பயனை எய்துவர்.
கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் கடிமணப் படலத்தில் முதல் செய்யுளிலேயே ஜனகனது நகரை வர்ணிக்கும் கம்பர் “நடுவிலே காணப்பட்டவர்கள் எல்லோரும் உடம்போடு சுவர்க்க ராஜதானியான அமராவதி நகரத்தை அடைந்தவர்கள் ஒத்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
இடம்படு புகழ்ச்சனகர் கோனினிது பேண எனத் தொடங்கும் பாடலில் நான்காவது வரி: “உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார்.” (கடிமணப் படலம், பாடல் எண் 1) என்பதைக் காணலாம்.
அடுத்து அயோத்தியா காண்டத்தில் மந்திரப் படலத்தில் 75ம் பாடலில் “உறையும் விண்ணகம் உடலோடும் எய்தினர் ஒத்தார்” என்று தசரதன் கூறிய சொற்களைக் கேட்ட அனைவரும் உடலுடன் சுவர்க்கம் சென்றது போல இருந்தனர்” என்று வருகிறது.
அடுத்து சுந்தர காண்டத்தில் உருக்காட்டு படலத்தில் சீதை அனுமனை வாழ்த்தும் போது, உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் என்று தொடங்கும் பாடலில் நான்காம் அடியில்,
“இம்மையே மறுமை தானும் நல்கினை, இசையோடு”.
என்ற வரியும் இந்த உலக வாழ்விலேயே மறுமை செல்லும் பயனைத் தந்தாய்’ என்ற பொருளைத் தருகிறது. (சுந்தர காண்டம் உருக்காட்டு படலம் பாடல் எண் 71).
ஆக பண்டைய காலத்தில் தவம் புரிந்தோர் இப்படி உடலுடன் சுவர்க்கம் சென்றனர் என்பதை அறிகிறோம்.
நவீன காலத்தில் வள்ளலார் பெருமான் உடலுடன் மறைந்ததைக் குறிப்பிடலாம். அதிசய பூமி பாரதம் என்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?