

செங்கல்பட்டில் இருந்து பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஒரு அழகிய கிராமம் . இந்த ஊரின் பெயர் பொன் விளைந்த களத்தூர். இதை இப்போது PV களத்தூர் என்று சுருக்கி அழைக்கிறார்கள். இந்த அமைதி கொஞ்சும் ஊரின் இதயமாக இருக்கிறது ஒரு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில். இந்த கோவிலின் உற்சவ மூர்த்தி பற்றி ஒரு வரலாறு உண்டு.
இந்த கோவிலுக்கும் மகாபலிபுரத்தில் உள்ள திருமல்லை கோவிலுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது. அதாவது பொன் விளைந்த களத்தூர் நரசிம்மப் பெருமாள் உற்சவ மூர்த்தி திருமல்லை கோவிலை சார்ந்ததாக இருந்தது. திருமல்லை கோவிலை ஒரு முறை கடல் சூழ்ந்ததால் அங்கிருந்த பல விக்கிரகங்கள் கடலில் மூழ்கின. அப்போது பெருமாளின் வாகனமான கருடர் இந்த நரசிம்மரின் விக்ரகத்தை எடுத்து பறந்து களத்தூரில் வந்து அமர்ந்தார். அந்த இடத்தில் தான் கோவிலும் கட்டப்பட்டதாம்.
இந்த கோவிலை பற்றி இன்னொரு விஷயம் உண்டு. அது என்ன என்று பார்ப்போம். வேதாந்த தேசிகர் ஒரு முறை திருவதிகைக்கு போகும் வழியில் இந்த கோவிலில் இரவில் தங்கினார். அப்போது ஹயக்ரீவருக்கு அமுதுசெய்ய அரிசி தருமாறு ஊர் மக்களை கேட்டார். ஊர் மக்கள் அவர் கேட்டதை தர மறுத்து விட்டனர்.
வேதாந்த தேசிகரும் ஹயக்ரீவருக்கு தீர்த்தம் மட்டும் படைத்து விட்டு உறங்க போனார். அன்று இரவு ஒரு வெள்ளை குதிரை கிராமத்தில் இருந்த எல்லா நெற்பயிர் களையும் துவம்சம் செய்து விட்டது. குதிரை முக ஹயக்ரீவருக்கு அரிசி மறுத்ததன் விளைவாக தான் வெள்ளை குதிரை பயிர்களை நாசம் செய்தது என்று உணர்ந்து ஊர் மக்கள் வேதாந்த தேசிகரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர். அப்போது வேதாந்த தேசிகர் அவர்களை அழைத்து கொண்டு வயல்களை பார்வையிட சென்றார்.
அப்போது வயலில் உதிர்ந்த நெல் மணிகள் எல்லாம் பொன்மணிகளாக மாறி காட்சி அளித்தன. அன்றிலிருந்து களத்தூர் என்று அழைக்கப்பட்ட ஊர் பொன் விளைந்த களத்தூர் என பெயர் பெற்றது.
இந்த ஊரில் லட்சுமி நரசிம்மர் கோவிலை தவிர ஒரு கோதண்ட ராமர் கோவில் இருக்கிறது. கூட்டம் கூச்சல் இல்லாத ஏகாந்தமான இடம் என்று உண்டென்றால் அது இந்த பொன்விளைந்த களத்தூர் லட்சுமி நரசிம்மர் கோவில் தான்.
கோவிலின் உள்ளே பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் அழகிய தோட்டமும் இருக்கிறது. அதன் மத்தியில் கண்ணன் நின்று கொண்டிருக்கிறார். குழல் ஊதிக் கொண்டு. இங்கு போய் வந்ததும் மனபாரமே இறங்கியது போல இருக்கும் என்பது என் அனுபவம். நீங்களும் அவசியம் போய் வாருங்கள்!