குதிரை மேல் வரும் காவல் தெய்வம்! ஊர் மக்களை காக்கும் தேரடி கருப்பர் கோவில்கள்!

கருப்பசாமியின் மனைவி கருப்பாயி, மகன் கண்டன், அண்ணன் முத்தண்ண கருப்பசாமி, தம்பி இளைய கருப்பு மற்றும் தங்கை ராக்காயி.
karuppasamy temple
karuppasamy temple
Published on
deepam strip
deepam strip

திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் காந்திமதி அம்பிகை கோவிலின் காவல் தெய்வமாக திகழும் பழமையான தலம் அருள்மிகு தேரடி கருப்பசாமி கோவிலாகும். சித்திரை திருவிழாவில் தேர் வீதி உலா வரும் பொழுது அசம்பாவிதங்கள் இன்றி காக்கும் பொறுப்பை இந்த கருப்பரே ஏற்பதாக நம்பப்படுகிறது. காவல் தெய்வமான இவர், பெண் தெய்வங்களின் காவலராகவும் வணங்கப்படுகிறார்.

நேர்த்திக் கடன்:

திருநெல்வேலியில் தேரடி கருப்பர் காவல் தெய்வமாக அறியப்படுகிறார். மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக அப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறார்‌. கருப்பசாமி நின்ற கோலம், அமர்ந்த கோலம் மற்றும் குதிரை மீதேறி வரும் கோலங்களில் காட்சி அளிப்பது வழக்கம். இவருக்கு பொங்கல் வைத்து, கிடா வெட்டி, கத்தி, அரிவாள் போன்றவற்றை சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

மதுரை மீனாட்சி கோவில் தேரடி கருப்பர்:

கோவில் நகரமாம் மதுரை மக்களுக்கு மீனாட்சியம்மன் எப்படி கண்கண்ட தெய்வமோ, அந்த அளவிற்கு அவர்களின் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிப்பவர் தேரடி கருப்பசாமி. மதுரை கீழமாசி வீதியில், சித்திரை திருவிழாவில் முக்கியத்துவம் பெறும் இரண்டு தேர்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். தேரடியில் கம்பீரமாக காவலுக்கு நின்று இந்த தேரடி கருப்பர் அருள்பாலித்துக் கொண்டிருப்பார். திருச்சி வயலூர், கரூர் வெங்கமேடு போன்ற இடங்களிலும் புகழ்பெற்ற தேரடி கருப்பண்ணசாமி கோவில்கள் உள்ளன.

தோற்றம்:

வால்மீகி தர்பையைக் கிள்ளி போட்டு அதற்கு உயிர் கொடுக்க, அதுவே கருப்பண்ண சாமியானது என்பது ராமாயணத் தகவல். வீரபத்திரருக்கும் சண்டிக்கும் பிறந்த குழந்தை கருப்பசாமி என்றும் சொல்லப்படுவதுண்டு. கம்பீரமான உருவம், தலைப்பாகை, இடையில் கச்சை, மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை மற்றும் கையில் அரிவாளுடன் கோவில் கொண்டிருக்கும் இவர் பெரும்பாலும் கையில் சுக்குமாந்தடியுடன் அருள்புரிவதைக் காணலாம்.

கருப்பசாமியின் மனைவி கருப்பாயி, மகன் கண்டன், அண்ணன் முத்தண்ண கருப்பசாமி, தம்பி இளைய கருப்பு மற்றும் தங்கை ராக்காயி.

தூண்டி கருப்பசாமி கோவில்:

புதுக்கோட்டையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டத்தில் உள்ள வளநாடு மற்றும் பாலக்குறிச்சிக்கு நடுவே அமைந்துள்ள கோவில் தான் தூண்டி கருப்புசாமி கோவில். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக மக்களால் வழிபடப்படுகிறார். குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் தங்கள் சேலையின் முந்தானையை கிழித்து அதில் தூளி கட்டி குழந்தை வரம் கேட்டு வேண்டிக் கொள்கிறார்கள். இக்கோவிலில் நீதி கேட்டு காசு வெட்டிப்போட்டு வேண்டிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது. இக்கோவிலின் வாசலில் இருந்து கருப்பசாமியின் கருவறை வரை செல்லும் பாதையில் இரு பக்கமும் லட்சக்கணக்கான வேல்களால் கோட்டை தடுப்பு சுவர் போல அழகாக கருவறைக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது. இக்கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்களை தரிசிக்க அனுமதிக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: எண்ணெய்க்கு பதில் ரத்தம்! பக்தி முற்றிய நிலையில் கலிய நாயனார் செய்த காரியம்!
karuppasamy temple

பதினெட்டாம்படி கருப்பர்:

சபரிமலை ஐயனுக்கு துணையாக திகழும் கருப்பசாமி இவர். சபரிமலையில் 18ஆம் படியின் அருகே வலப்புறத்தில் பதினெட்டாம்படி கருப்பராக வீற்றிருக்கிறார். முந்திரி நைவேத்தியமும், கற்பூர ஆரத்தியும் இவருக்கு விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசிக்க செல்பவர்கள் கன்னிமூல கணபதியை வழிபட்டு, வாவர் மற்றும் கருப்பசாமியிடம் அனுமதி பெற்றே 18-ஆம் படிகளில் ஏறுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com