முகத்துக்கு முகம் மாறும் ருத்ராட்ச மகிமை!

முகத்துக்கு முகம் மாறும் ருத்ராட்ச மகிமை!

ருத்ராட்சம் என்பது சிவபெருமான் முதல் சித்தர்கள் வரை அணியக்கூடிய ஒரு மிக அற்புதமான, சக்தி வாய்ந்த பொருளாகப் பார்க்கப்படுகின்றது. சிவபெருமான் தன்னை பொன்னாபரணங்களால் அலங்கரிக்காமல் ருத்ராட்சம் கொண்டு அலங்கரித்துள்ளார் என்றால் அதன் மகத்துவம் அதிகமாகத்தானே இருக்கும். ருத்ராட்சம் சிவபெருமானின் கண் எனப் போற்றப்படுகின்றது. ருத்ரனான சிவனின் அருளை நாம் பெறுவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது. ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால்தான் வரும் எனக் கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் எனக் கூறுகின்றோம். ஐந்து கோடுகள் கொண்டவை ஐம்முக ருத்ராட்சம் என்றம், ஆறு கோடுகள் கொண்டிருந்தால் அது ஆறு முக ருத்ராட்சம் எனவும் கூறப்படுகின்றது. ருத்ராட்சத்தில் மொத்தம் 1 முதல் 21 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

மிகவும் அரிதாகக் கிடைப்பது ஒரு முக ருத்ராட்சம் (ஏக முக ருத்ராட்சம்). மோட்சம் தரக்கூடிய அளவு சக்தி வாய்ந்தது இது. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.

சிவன்-சக்தி இருவரும் இணைந்த ருத்ராட்சமாகப் பார்க்கப்படுவது இரு முக ருத்ராட்சம். பாவத்தை நீக்கவல்ல இந்த ருத்ராட்சம், ஆண் - பெண் என இருவர் தம்பதியராக ஒருநிலை அடைவதைப் போல, ஒருநிலைத் தன்மை அடைய மிகவும் உகந்தது.

மும்முக ருத்ராட்சத்தை ஆளும் கோளாக செவ்வாய் பகவான் உள்ளார். தீயானது அனைத்தையும் தன்னில் வாங்கிக்கொண்டு, தூய்மையாக இருப்பது போல மும்முக ருத்ராட்சத்தை அணியும் நபருக்கு வாழ்வில் இருக்கும் அனைத்து தவறுகளிலிருந்து விலகி துய்மை நிலையை அடைவார்.

நான்கு முக ருத்ராட்சத்தை ஆளக்கூடியவர் புதன் பகவான். இது பிரம்ம தேவரை குறிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை அணிபவர் ஆக்க சக்தியைப் பெறுவார். தன்னுள் இருக்கும் புத்தி கூர்மை, திறமை, சாதுர்யத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலை இருக்கும். இதனை தங்களின் வலது கையில் கட்டினால் மிக சிறப்பானது. எந்தப் போட்டியாளரோ, எதிரியோ அவர் முன் நிற்க முடியது.

ஐம்முக ருத்ராட்சத்தை குரு பகவான் ஆளக்கூடியவர். மங்களத்தின் இருப்பிடமாக இது பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும்.

ஆறு முக ருத்ராட்சத்தை சுக்ர பகவான் ஆளக்கூடியவர். அறிவு மேம்படவும், தலைமைப் பண்பைப் பெறவும் இதை அணியலாம். இது ஒருவரின் பிறப்பு உறுப்பை ஆள்வதால், நாம் இச்சைக்கு ஆளாகாமல் பேரின்பத்தைப் பெற வழி தேடுவோம்.

ஏழு முக ருத்ராட்சத்தை சனி பகவான் ஆளக்கூடியவர். இது தேவி திருமகளையும், சப்த கன்னியர் மற்றும் ஆதிசேஷனை குறிக்கும் அம்சம். யோக சக்தியை தரக்கூடிய இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் எந்த ஒரு நிதி சிக்கலிலிருந்தும் வெளிவரலாம்.

எட்டு முக ருத்ராட்சத்தை ராகு பகவான் ஆளக்கூடியவர். இதனை அணிவோருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அஷ்ட கணபதி, அஷ்ட லட்சுமி உள்ளிட்டோரின் அம்சமாக இது பார்க்கப்படுவதால் செல்வ வளம் கூடும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தை கேது பகவான் ஆளக்கூடியவர். இது சக்தியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனே சக்தி கூடும். செயல் திறன் அதிகரிக்கும். இது பில்லி சூனியத்தை நீக்கும் ஆற்றல் மிக்கது.

மகாவிஷ்ணுவின் அம்சமாக பத்து முக ருத்ராட்சம் பார்க்கப்படுகிறது. இது கோள்களினால் ஏற்படும் தீவினைகளிலிருந்து காக்கின்றது. இதை அணிபவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும்.

அனுமனின் அம்சமாக 11 முக ருத்ராட்சம் பார்க்கப்படுகின்றது. இதை அணிவதால் நேர்மையான பாதையை கடைப்பிடிப்பதோடு, எதிர்த்து வரும் தீய சக்திகளிலிருந்து கக்க வல்லது. அதோடு இது துணிவையும், வெற்றியையும் தர வல்லது.

12 முதல் 21 முகங்கள் வரை ருத்ராட்சங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கின்றன. மொத்தம் 38 வகை ருத்ராட்சங்கள் இந்த பூமியில் தோன்றியது. தற்போது அவற்றில் 1, 11, 7, 8, 9 முக ருத்ராட்சங்கள் அபூர்வமாகக் கிடைக்கின்றன. மிக அதிக விலை கொண்டதாகவும் இவை உள்ளன. இரண்டு ருத்ராட்சங்கள் இணைந்து இருக்கும் கெளரி சங்கர் ருத்ராட்சத்தை அணிவதன் மூலம், அம்மையப்பனை சேர்ந்து இருக்கக் கூடிய பலனைத் தரும்.

தற்போது பல முகங்கள் கொண்ட ருத்ராட்ச வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் 5 முகம், 6 முகம் கொண்ட ருத்ராட்சமே அதிகளவில் கிடைக்கின்றன. இதனால் அவற்றை வாங்கி அணிந்து ஈசனின் அருள் பெறலாம். 5 அல்லது 6 முக ருத்ராட்சம் அணிய யாருக்கும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com