காளஹஸ்திக்கு இணையான ராகு கேது ஸ்தலம்! நாகங்களே சாப விமோசனம் பெற்ற அதிசய கோயில்! ராகு கேது தோஷ நிவர்த்தி ஆலயம்!

காளஹஸ்திக்கு இணையான ராகு கேது ஸ்தலம்! 
நாகங்களே சாப விமோசனம் பெற்ற அதிசய கோயில்! 
ராகு கேது தோஷ நிவர்த்தி ஆலயம்!
Published on

மிழகத்தில் ராகு கேது தோஷ பரிகார ஸ்தலங்களில் முதன்மையானது திருப்பாம்புரம் கோயில். நாகதோஷ நிவர்த்திக்கு காளஹஸ்தியை விட ஆற்றல் வாய்ந்த தலமாக இது விளங்குகிறது. இந்த தலம் ஆதிசேஷன் ராகு கேது மற்றும் அஷ்டமா நாகங்கள் சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற இடமாகும்.

கோயில் அமைப்பு:

சோழ நாட்டு திருத்தலங்களில் தேவார பாடல் பெற்ற தலங்களில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் கோயில் முக்கியமானது. ஆதிசேஷன் தனது தோஷம் நீங்க இங்கு வழிபட்டதால் இத்தலம் பாம்பு + புரம் = திருப்பாம்புரம் என்றானது. அப்பர், சம்பந்தர், சுந்தரராகிய மூவரால் பாடல் பெற்றது.

இத்தல இறைவன் சன்னிதி மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. மகா மண்டபத்தில் தென்புறம் சோமாஸ்கந்தருக்கு தனி இடம் உள்ளது. இம்மண்டபத்தில் நடராஜர் நடனம் புரிகிறார் .இங்குள்ள முருகன் கையில் வேல் தாங்கி இடது காலால் மயிலை மிதித்தவாறு வள்ளி தெய்வானை உடன் காட்சி தருகிறார்.

கருவறையில் பாம்புரேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்து அருளியுள்ளார். ஆதிசேஷன் ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழுந்தருளி உள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழி உள்ளது. இறைவன் சன்னதிக்கு இடது புறமாக அம்மன் வண்டு சேர் குழலியின் சன்னிதி அமைந்துள்ளது.

அம்மை ஒரு கையில் தாமரையும் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும் கொண்டு வரத ஹஸ்தம் அபய ஹஸ்தம் விளங்க தோற்றம் அளிக்கிறார்.

ராகுவும் கேதுவும் ஈசனை நெஞ்சில் நிறுத்தி ஏக சரீரமாகி அருள் பெற்றதாக புராண வரலாறு. ராகுவும் கேதுவும் கோயிலில் ஈசான மூலையில் தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளனர். சிவனுக்கும் அம்பாளுக்கும் ராகு காலத்தில் அர்ச்சனை அபிஷேகம் செய்து வணங்கு பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக ஐதீகம். மேலும் நினைத்த காரியம் நிறைவேறும்.

தலபுராணம்: 1

முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களின் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சம பலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயு நிறுத்தி விட, உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார். இதனால்  கோபமுற்ற சிவபெருமான் வாயு பகவானையும் ஆதிசேஷனையும் பேய் உருவம் போகும்படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். சிவபெருமான், வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கில் பூஜை செய்து வரவும், ஆதிசேஷனை திருப்பாம்புரத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரும்படியும் உத்தரவிட்டார். அதன்படி ஆதிசேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாபம் விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

தலபுராணம் 2:

கைலாயத்தில் ஒரு முறை விநாயகர், சிவபெருமானை வழிபடும்போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம்கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன் நாக இனம் முழுவதும் தேவ சக்தியை இழக்கும்படி செய்தார். அதனால் உலகை தாங்கும் ஆதிசேஷனும் ராகு கேது மற்றும் நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன. நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இறங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என்று அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்கோடகன், சங்க பாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆலமர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.

மகா சிவராத்திரி என்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாவது ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும்  நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.

பரிகாரம்:

திசேஷன் உடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் இந்த கோயிலில் உள்ளது. இது ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கோயிலில் மல்லிகை மற்றும் தாழம்பூவின் மணம் வீசுவதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள். பாம்புகள் இங்கு உலாவும். ஆனால் பாம்பு யாரையும் இங்கே தீண்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இருந்து அதாவது ஒரே உடலாக இருந்து சிவனை நெஞ்சில் வைத்து வழிபட்டதால் இது மிகச்சிறந்த ராகு கேது பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள அஷ்ட நாக சன்னதியோடு சேர்த்து ஏழு சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் சர்ப்ப தோஷம் முற்றிலுமாக நீங்குகிறது.

ராகு கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் கோயிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி விளக்கேற்ற வேண்டும். சாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். ராகு கேது சன்னதியில் அமர்ந்து பூவும் குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் அந்த பூ மற்றும் குங்குமத்தை ஒரு  மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோயில் உண்டியலில் போட வேண்டும்.

அமைவிடம் :

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அமைந்துள்ளது திருப்பாம்புரம். திருவாரூர் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி சாலையில் திருநாகேஸ்வரம் திருநீலக்குடி வழியாக பயணித்தால் திருப்பாம்புரத்தை அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com