

அந்த குறும்கப்பல் வடமேற்கு இந்தியப் பெருங்கடலில் மணிக்கு முப்பது நாட்டிகல் மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
கப்பலின் மேற்தளத்தில் மிர்ஹான் நின்றிருந்தார். வயது அறுபது. ஆறடி உயரம். மலையாள முஸ்லிம்களின் பிரத்தியேக சிவந்த தோற்றம். வாசனைப் பொருள் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர். மிர்ஹானின் மீது ஏலக்காய் மற்றும் கிராம்பு நறுமணம் வீசும். அழகிய பல்வரிசை. சிரித்தால் முழு ஈறுகளும் தெரியும். யூசுப் நபி கண்கள். ஆன்மிகத் தேடல் அதிகம். சூபித்துவத்தை பின்பற்றுபவர்.
தந்தையைத் தேடி மகன் அட்னன் சமி மேல்தளத்திற்கு வந்தான். வயது இருபது. இளங்கலை கடல் உயிரியல் படித்தவன். பொதுக் கல்விக்கு இடையே மார்க்கக் கல்வி பயின்று ஆலிம் பட்டமும் பெற்றவன்.
“அஸ்ஸலாமு அலைக்கும் அத்தா!”
“வஅலைக்கும் ஸலாம்!”
“என்ன மேற்தளத்தில் தனியாக நிற்கிறீர்கள்?”
“கடந்த நான்கு வருடங்களாக உலகின் ஒவ்வொரு தீவாகவும் தேடி வருகிறோம்... தேடினதை சந்திக்க முடியவில்லையே?”
“இல்லாதததை தேடுகிறோமோ?”