தருமதேவனுக்கு அருளிய ஸ்ரீசந்திரசூடேஸ்வரர்!

தருமதேவனுக்கு அருளிய ஸ்ரீசந்திரசூடேஸ்வரர்!

சிவாலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் சமயம், சிவபெருமான் பல்வேறு வாகனங்களில் வலம் வந்தாலும், அவர் அதிகம் விரும்புவது ரிஷப வாகனத்தைத்தான். அடியார்களுக்கு எல்லாம் அருளும் சிவபெருமானை, எருதுவாக மாறி தாங்கலாமே என்ற எண்ணம், தருமதேவன், நான்முகம், திருமால் ஆகியோருக்கு ஏற்பட்டது. அதன் விளைவாக காளை வாகனமாக மாறி, ஈசனை தாங்கும் பேறினைப் பெற்றனர். முதலில் தருமதேவனே காளையாக மாறி, சிவனை சுமக்கும் பேறு பெற்றார். எவரும் செய்திராத செயலைச் செய்ததால், தருமதேவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காரணம், நான்முகனும், திருமாலும் காளை வடிவம் எடுத்து சிவபெருமானைச் சுமந்தனர். அதனால் தருமதேவன் மகிழ்ச்சியை இழந்தார்.

அதனால் இறைவனுக்கு மீண்டும் ஒரு சேவையை செய்ய விரும்பிய தருமதேவன், சிவனை நோக்கி தவம் இருந்தார். அந்தத் தவத்தின் பலனாக சிவபெருமானின் அருளால் குன்றாக மாறி, அவரைத் தாங்கும் பேறினைப் பெற்றார். அந்தக் குன்றின் பெயர், ‘எருதுமலை.’ குன்றின் மேல் குடிகொண்ட இறைவன் பெயர் சந்திரசூடேஸ்வரர். இந்தக் குன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ளது. இத்தல இறைவன், ‘செவிடநாயனார், செவிடையாண்டவர்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் அருளும் உத்ஸவ மூர்த்தி, உமையவள் மற்றும் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்தராக காட்சி தருகிறார். அம்பிகையின் திருநாமம் மரகதாம்பிகை. பச்சையம்மன், பர்வதம்மன் என்ற வேறு பெயர்களும் உள்ளன. தல விருட்சம் வில்வம், தீர்த்தம் மரகதசரோவம் எனப்படும் பச்சைக் குளம்.

தமிழ்நாட்டில் மலை மீது அமைந்த சிவாலயங்களில் இந்த சந்திரசூடேஸ்வரர் கோயிலும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் இறைவன், சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் வரலாறு குறித்து ஒரு தொண்மக் கதை வழக்கில் உள்ளது.

முன்னொரு காலத்தில் தருமதேவன், சிவனை நோக்கி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கடுந்தவம் புரிந்தார். தவத்தின் பயனாக தனக்குக் காட்சியளித்த இறைவனிடம், தன்னை வாகனமாக ஏற்றுக்கொள்ளும்படி தருமதேவன் வேண்டுகோள் வைத்தார். அதன்படியே தருமதேவனை தனது காளை வாகனமாக மாற்றிக் கொண்டார் ஈசன். இதனால் மகிழ்ந்த தருமதேவன் இந்த இடத்தில் தன்னுடைய வடிவில் ஒரு மலையை உருவாக்கி, அதில் உமையுடன் எழுந்தருள வேண்டும் என சிவனைப் பணிந்தார். சிவபெருமானும், ரிஷப வடிவில் ‘விருஷபாசலம்’ என்னும் மலையை உருவாக்கி, அங்கு தங்கினார்.

தான் தங்கியிருக்கும் இடத்துக்கு தேவியை அழைத்துவர ஒரு திருவிளையாடலை புரிந்தார் ஈசன். ஒளி வீசும் உடும்பு வடிவம் கொண்டு கயிலை மலையின் உத்தியான வனத்தில் இருந்த பார்வதி தேவியின் அருகே வந்தார். அந்த அதிசய உடும்பைக் கண்ட பார்வதி, அதைப் பிடிக்க தோழிகளுடன் சென்றார். உடும்பு அவர்களின் கைகளில் அகப்படாமல் காடு, மலைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவி அந்த உடும்பின் வாலை பிடிக்க, அவரது உடல் பச்சை நிறமானது. பார்வதியுடன் வந்த தோழிகளை தாகம் வாட்டியது. அவர்கள் பார்வதி தேவியை வேண்ட, உடனே பார்வதி தேவி ஒரு குளத்தை உருவாக்கினாள். அதில் தனது தோழிகளுடன் இறங்கி நீராடினாள். அப்போது அந்தக் குளமே பச்சை நிறமாக மாறியது.

பார்வதி தேவி நீராடியபோது அவளது கண்களை விட்டு மறைந்த உடும்பு, அருகில் உள்ள மலை மீது ஏறிச்சென்றது. இதைக்கண்ட தேவி, அதைப் பின்தொடர்ந்து அந்த மலை மீது ஏறினாள். மலை உச்சியில் இருந்த செண்பக மரத்தில் அந்த உடும்பு ஏறியது. அப்போது அங்கு தவமிருந்த முத்கலன் என்ற முனிவர் உடும்பைப் பார்த்தார். அவர் சற்றுத் தொலைவில் இருந்த இன்னொரு முனிவரான உச்சாயணனை கூவி அழைத்தார். அவர்கள் இருவரும் உடும்பைப் பிடிக்க முயன்றபோது, அது மறைந்தது. அதனால் பார்வதி திகைத்தாள். அந்த பொன்னிற உடும்பு மறைந்ததற்கு, முனிவர்கள் இருவர்தான் காரணம் என்று நினைத்த பார்வதிதேவி, அவர்கள் மீது கோபம் கொண்டாள். அதனால் உடும்பைக் கண்டு கூவியவரை ஊமையாகும்படியும், சத்தம் கேட்டு ஓடிவந்தவரை செவிடாகும்படியும், அவர்கள் இருவரும் வேடுவ குலத்தில் பிறக்கும்படியும் சாபமிட்டாள். அதைக் கேட்டு முனிவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பார்வதி தேவியிடம் தங்கள் தவறை மன்னிக்கும்படி வேண்டினர்.

கோபம் தணிந்த பார்வதி தேவியும் சிவ பக்தர்களை சபித்ததை எண்ணி வருந்தினார். பின்னர் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தாள். அப்போது ஈசன் அங்கு தோன்றி, ‘தருமதேவனுக்கு அளித்த வாக்கின்படி, சில காலம் இங்கு தங்கி இருக்கவே நான் உடும்பு வடிவில் வந்தேன். தேவியும் என்னோடு இங்கு தங்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் திருவிளையாடலை நடத்தினேன். நீங்கள் சாபம் பெற்றாலும், வேடுவ குலத்தில் பிறந்து வேட்டையாடிவரும் போது, உடும்பாக என்னைக் காணும்போது சாப விமோசனம் பெறுவீர்கள்’ என்று முனிவர்களுக்கு அருளினார்.

அதன்படி, வேடுவர்களாகப் பிறந்த அந்த இரு முனிவர்களும் அதே மலை மீது உடும்பைக் கண்டு சாபத்தில் இருந்து மீண்டனர். பின்னர் அவர்கள் ஈசனுக்காக அங்கு ஒரு ஆலயத்தை எழுப்பியதாக வரலாறு.

அமைவிடம்: கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 49 கி.மீ. தொலைவிலும், ஓசூரில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது சனசந்திரம் என்ற கிராமம். இங்குள்ள மலை மீதுதான் சந்திரசூடேஸ்வரர் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com