நம் வீடுகளில் விளக்கு எரிய வைக்க வேண்டும் என்றால் எண்ணெயை பயன்படுத்துவோம். எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற எரிப்பொருள்கள் இருந்தால் நெருப்பு பற்றி எரியும் என்பது நமக்கு தெரியும். ஆனால் இளநீரை கொண்டு விளக்கு எரிய வைக்க முடியுமா? முடியும். இதை கேட்பதற்கே அதிசயமாக இருக்கிறதல்லவா? இன்றைய பதிவில் இதை பற்றித்தான் விரிவாக பார்க்க உள்ளோம்.
ஸ்ரீ நூரோந்து சுவாமி கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடக மற்றும் தமிழ்நாட்டின் எல்லையிலே அமைந்திருக்கிறது. இந்த இடத்துடன் தொடர்புடைய மடம், சுவாமியின் கல்லறை, சுவாமி வாழ்ந்த இடம் இங்குள்ளது. கன்னடத்தில் ‘நூரோந்து’ என்பதற்கான அர்த்தம் நூறுடன் ஒன்று (100+1) என்பதாகும். நூற்றி ஒன்றாவது (101) சுவாமி என்பதே அவருடைய பெயராகும். இந்த இடத்தில்தான் அவர் சிவபெருமானை வேண்டி தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஒருமுறை நூறு சாமிகள் இவர் யாகம் செய்து கொண்டிருக்கும்போது இங்கே வந்ததாகவும், அவர்கள் பசி என்று இவரிடம் கேட்க இவரிடம் இருந்த களி உருண்டையை 100 பேருக்கும் கொடுத்ததாகவும் அப்போது நீங்களும் சாப்பிடுங்கள் என்று கூறியபோது, இவருக்கும் சேர்த்து ஒரு உருண்டையை அந்த அக்ஷய பாத்திரத்திலிருந்து வர வைத்ததாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இவரை நூரோந்து சுவாமி என்று அழைக்கிறார்கள்.
இந்த கோவிலில் நிகழும் அதிசயம் என்னவென்றால், இளநீரை விளக்கில் ஊற்றி பற்ற வைத்தால் விளக்கு எரிகிறது. இங்கே விளக்கு இளநீரில் எரிவதற்கும் அவரது தவமே காரணம் என்று சொல்கிறார்கள். இது அந்த கோவிலுக்குள் மட்டுமே எரியுமாம் வெளியிலே விளக்கு எரியாது என்று கூறுகிறார்கள்.
இங்கே உள்ள கிராமத்து மடத்தில் நூரோந்து சுவாமிகளின் சமாதி இருக்கிறது. இந்த கோவிலுக்கு செல்ல ஹோசூர்-தென்கனிகோட்டா-அன்செட்டி வழியாக செல்ல வேண்டும். காட்டுப்பாதையில் செல்ல வேண்டியிருப்பதால், காலையிலேயே சென்று விட்டு வருவது போல திட்டம் போட்டுக்கொள்வது நல்லது.
கோவிலுக்கு வரும் பக்தர்களே இளநீரை எடுத்து வரலாம். இங்கிருக்கும் பூசாரி அதை உடைத்து பெரிய தம்ளரில் இளநீரை ஊற்றி விட்டு பக்தர்களை அதன் மீது கை வைத்து வேண்ட சொல்கிறார். பிறகு விளக்கில் ஏற்கனவே இருக்கும் இளநீரை எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி விட்டு புதிதாக கொண்டு சென்ற இளநீரை ஊற்றி விளக்கை பற்ற வைத்தால், விளக்கும் எரிகிறது. இதன் அறிவியல் ரீதியான காரணம் என்னவென்று விளக்க முடியவில்லை. ஆனால் விளக்கு உண்மையிலேயே எரிகிறது என்பது ஆச்சர்யமான உண்மை.
எனவே இந்த நிகழ்வைக் காணவேண்டும் என்றால் நீங்களும் இவ்விடத்திற்கு ஒருமுறை சென்று இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்.