

ராமாயணத்தை அறியாதவர் யாருமில்லை. அது தண்டக வனத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அடர்ந்த இருள் கொண்டது, பயங்கரமானது, காட்டு மிருகங்களின் பயங்கர அலறல் சத்தங்களைக் கொண்டது அந்த வனம். அது அதி பயங்கரமான ராக்ஷஸர்கள் வாழுமிடம். அங்கு ராக்ஷஸியான சூர்ப்பனகை அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். கரன் என்ற ராக்ஷஸனும் கூட அதே போன்ற பயங்கரமான அரக்கன் தான். அந்த வனத்தின் திறந்த வெளிகள் சிலவற்றில் தூய்மையான இறைவனை மையமாகக் கொண்ட வாழ்க்கையை நடத்தும் ரிஷிகள் தங்கள் ஆசிரமங்களைக் கொண்டிருந்தனர்.
இந்த வனத்தில் தான் ராமர், ராமரின் சகோதரர் லக்ஷ்மணர், ராமரின் மனைவி சீதை ஆகியோர் வனவாசம் செய்ய வந்தனர். அகஸ்தியர், சரபங்கர் போன்ற பெரும் முனிவர்களுடன் அவர்கள் சில காலம் கழித்தனர். அவர்கள் அங்கு கடும் துறவியான பெண்மணியான சபரியையும் பார்த்தனர்.
இதன் விளைவாக ராமர் அந்த அரக்கர்களை அழித்தார். அந்த பிரதேசத்தில் ரிஷிகள் ஒரு வித இடையூறுமில்லாமல் தங்கள் ஆன்மீகப் பயிற்சியைச் செய்யவும் சடங்குகளை நடத்திக் கொள்வதற்காகவும் அமைதியை நிலை நாட்டினார்.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இது தான் இந்த இதிஹாஸம் சொல்வது. ஆனால் தண்டக வனம் என்பது உண்மையில் எங்குள்ளது? நீங்கள் எந்த ஒரு வரைபடத்தையோ அல்லது சரித்திர பக்கங்களை புரட்டியோ பார்க்கத் தேவை இல்லை. அது ஒவ்வொரு மனிதனின் இதயமே தான். தீய எண்ணங்கள் தாம் ராக்ஷஸர்கள். நல்ல எண்ணங்கள் தாம் ரிஷிகள். ராமர் புத்தியின் மூலம் பகுத்தறியக் கூடிய விவேகத்தின் அடையாளத் திருவுருவம். சீதையும் லக்ஷ்மணரும் உயரிய நிலை பிரக்ஞையான, சுஜ்ஞானம் மற்றும் ப்ரஜ்ஞானமாகும். ராமர் தீய எண்ணங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நல்ல எண்ணங்களின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்.
ராமர் அயோத்தியின் சக்கரவர்த்தி. அந்தப் பெயர் குறிப்பிடுவது, “கைப்பற்ற முடியாதது”, “எதிரியே இல்லாதது” என்பதாகும். அதாவது ராமர் அங்கு ஸ்தாபிதம் செய்யப்படும் போது தீங்கு விளைவிக்கும் அர்த்தமற்ற உணர்வுகளோ எண்ணங்களோ இதயத்தின் மீது படை எடுக்க முடியாது என்பதே அர்த்தமாகும்.
தியாகராஜர் பாடுகிறார்: “தெலிசி ராம சிந்தன செயவே மனஸா” – ஓ, மனமே முழு மனதுடன் ராமரை, அவர் எதை பிரதிநிதித்வம் செய்கிறாரோ அதை தியானம் செய்”.
மைக்ரோபோன் வழியாக நான் பேசும் போது லவுட் ஸ்பீக்கர் வழியாக நீங்கள் அதைக் கேட்கிறீர்கள். நீங்கள் லவுட் ஸ்பீக்கர் என்ற கருவியில் கேட்கிறீர்கள். ஆனால் நான் தான் பேச்சாளர். அதைப் போலவே உங்கள் நாக்கு வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஆத்மாவே வார்த்தைகளை உருவாக்கி பேச வைக்கிறது.
உரிமையாளரோ காரில் உட்கார்ந்து பயணம் செய்து கொண்டிருக்கிறார். உங்கள் உடல் எனப்படும் காரானது தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கு சக்கரங்களைக் கொண்டுள்ளது. அவை காற்றால் நிரப்பபட்டுள்ளன. உங்கள் பயணத்தை சீராக ஆக்க நம்பிக்கை என்பதே காற்றாகும். அது நான்கு சக்கரங்களிலும் ஒன்று போல இருக்க வேண்டும். காரின் உள்ளே இருக்கும் ஸ்டீயரிங் வீல் வெளியே உள்ள நான்கு சக்கரங்களையும் இயக்குகிறது. சக்கரம் என்பதே மனம் ஆகும். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் நீருமே காருக்கான பெட்ரோல் ஆகும். அதன் ஹாரனே நாக்காகும். இந்தக் காரில் நீங்கள் மேடும் பள்ளமும் உள்ள சம்சாரத்தில் பயணப்படுகிறீர்கள். கடவுளே சக்கரத்தில் உள்ளவர் என்பதை உணருங்கள். அவர் உங்களை சந்தோஷமாக நீங்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிப்பார்.
பயம், கவலை, கிளர்ச்சி எதுவுமின்றி அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவரை சரணாகதி அடையுங்கள். அவரது கருணை உங்களைக் காப்பாற்றும். அவரது ஞானம் உங்களைத் தெளிவித்து அறிவைத் தரும். அவரது சக்தி உங்களது அனைத்துத் தடைகளையும் உடைத்தெறியும். பக்தியின் வெளிப்பாடு நம்பிக்கையும் சரணாகதியும் தான். அவை உங்களுக்கும் மனித குலத்திற்கும் அமைதியையும் சந்தோஷத்தையும் உறுதிப்படுத்தும்.
3-10-1981 அன்று பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய உரை.