

கதை 1: துறவி தந்த பரிசு!
மகான் ஒருவர் காட்டு வழியே நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஒரு கயவன் அத்துறவி மீது கல்லை வீசி எறிந்தான். அது அவரது நெற்றியில் பட்டு, ரத்தம் கொட்டத் துவங்கியது. வலியை பொறுத்துக் கொண்ட துறவி, கயவனை அருகில் அழைத்து, தன்னிடமிருந்து பழங்களை அவனுக்கு உண்ணக் கொடுத்தார்.
அதிர்ச்சி அடைந்த கயவன், "உமக்கு துன்பம் விளைவித்த எனக்கு உணவு தருகிறீர்களே..?" எனக் கேட்டான்.
அதற்கு அத்துறவி, "ஓரறிவு படைத்த மாமரம் கூட தன் மீது கல் எறிபவனுக்கு பழங்களை பரிசாகத் தருகிறது. ஆறறிவு உடையவனாகிய நான் எனக்கு துன்பம் விளைவித்தவனுக்குப் பரிசு தர வேண்டாமா..!" என்று கேட்டார்.
கயவன் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
கதை 2: விலைமதிப்பற்ற செல்வம்!
ஒருவன் மகான் ஒருவரை தரிசித்து, "சுவாமி, கடவுள் என் மீது கருணையே காட்டவில்லை.. மற்றவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த அவர், எனக்குத்தான் செல்வம் எதுவும் கொடுக்கவில்லை..." என்று புலம்பினான்.
அதைக் கேட்ட மகான், "உன்னுடைய ஒரு கண்ணை விற்று விடு.. உனக்கு 10,000 பொற்காசுகள் கிடைக்கச் செய்கிறேன்" என்றார்.
பதறிப்போன அவன் அதற்கு மறுப்பு தெரிவித்தான்.
அடுத்து அவனுடைய கை, கால், மூக்கு, நாக்கு என ஒவ்வொரு உறுப்பாக கூறி ஒவ்வொன்றுக்கும் 10,000 பொற்காசுகளைத் தருவதாகக் கூறினார்.
அவனும் எந்த உறுப்பையும் தரத் தயாராக இல்லை.
"ஆக உன்னிடம் ஒரு லட்சம் பொற்காசுகள் பெறுமானமுள்ள பொருள்கள் கைவசமே உள்ளன. அப்படி இருக்க நீ ஏன் உன்னை ஏழை என்கிறாய்..? செல்வச் சுரங்கமான உடலைக் கடவுள் உனக்கு கொடுத்திருக்கிறார்.. அதைப் பணியில் ஈடுபடுத்தி, உழைத்து, சம்பாதித்து சந்தோஷமாக இரு..!" என்று கூறினார்.
அவன் தன் தவறை உணர்ந்தான். உழைப்பே உயர்வு தரும் என்பதையும் உணர்ந்தான்.