

குருவாயூர் கோவிலில் ஒரு பெரிய உருளியில் குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனை செய்யலாம். இதன் பின்னால் ஒரு கதை உண்டு.
முன்காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தார். அவளுக்கு குருவாயூரப்பன் இஷ்ட தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூரில் இருந்து மிகத் தொலைவில் இருந்தது. அழைத்துச் செல்வார் யாருமில்லை, பணவசதியும் கிடையாது. ஆனால் அவளுக்கு கண்ணனைக் காண ஆசை இருந்தது. அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றும் ஆசை.
அவள் வீட்டில் குந்துமணி மரம் இருந்தது. அவற்றை சேகரித்து அலம்பித் துடைத்து ஒரு பை நிறைய சேர்த்தாள். ஒரு நாள் கண்ணனைத் காண பயணம் புறப்பட்டாள். வசதி இல்லாததால் நடந்தே சென்றாள். நடுநடுவே இளைப்பாறிக் கொள்வாள். சிரமமாக இருந்தாலும் பயணத்தைத் தொடர்ந்தாள். ஒரு மண்டலக்காலம் பயணம் செய்து குருவாயூரை அடைந்தாள்.
அவள் சென்ற நாள் மாத முதல்நாள். ஏதோ விசேஷம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வோரு மாதத்தின் முதல் நாளன்று அந்த ஊர் அரசன் அவன் பக்தியை வெளிப்படுத்த கோவிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அரசன் வருவதால் வழியை விலக்கிக் கொண்டிருந்தனர். இந்த வயதான பெண் தன்பையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டார். அவள் பை கீழே விழுந்து குண்டுமணிகள் சிதறின. கிழவியின் கண்ணில் கண்ணீர் பெருகியது. அந்த சமயம் கோவிலுக்கு சமர்பிக்கக் கொண்டுவந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்து, கோவில் பொருட்களை நாசம் செய்தது. யாராலும் யானையை அடக்க முடியவில்லை.
கலங்கிய மன்னரும் மற்றவர்களும் குருவாயூரப்பனிடமே பிரசன்னம் கேட்டனர். அப்போது கர்ப்பக் கிரகத்திலிருந்து "நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள் அவள் கொண்டுவந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும்" என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் குண்டுமணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்ணிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டனர். அவளை சகல மரியாதைகளுடன் சன்னதிக்கு அழைத்துச் சென்றனர்.
அவள் ஆசையுடன் குண்டுமணிகளை சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோவிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.
பகவான் வஸ்துக்களில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. தூய்மையான உள்ளத்தோடு தரப்படும் பக்தியைத் தான் பார்க்கின்றான்.