

தைப்பூசத்தன்று முருக பக்தர்கள் காவடி எடுத்து பழனி மலை முருகனை வழிபட வருவார்கள். காவடி எடுப்பதற்கு காரணமாக இருந்த காவடி வந்த வரலாறு முதலில் பார்ப்போம்.
அகஸ்திய முனிவரின் சீடராக இருந்தவன் இடும்பன். எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கி விடுவான். ஒரு சமயம் இடும்பன் முனிவரின் வழிபாட்டிற்காக கயிலை மலைக்குச் சென்று, அங்குள்ள கந்தமலையில் சிவ சக்தி சொரூபமாக இருக்கும் சிவகிரி சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும் ஒரு நீண்ட மூங்கில் இரு பக்கமும் துலாபாரம் போல கட்டி தன்னுடைய தோளில் வைத்து தூக்கி வந்தான். அப்போது அவனுக்குள் நம்மை விட மிகுந்த பலசாலி யாரும் இல்லை என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால் பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான்.