ஆன்மீகத்தில் தானம் கொடுக்கும் பழக்கம் ஊக்கப்படுத்தப்படுகிறது. தீராத கஷ்டங்கள் மற்றும் சிக்கல்களில் இருந்து குடும்பங்கள் விடுதலை பெறவும், தீராக் கடன் பிரச்சனையிலிருந்து மீளவும் தானம் கொடுக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் விசேஷமாக கருதப்படும் பசு தானம் செய்யும் முறைகள், கட்டுப்பாடுகள், நன்மைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பசுவின் கொம்பில் பிரம்மாவும் விஷ்ணுவும் வசிப்பதாக நம்பப்படுவதால் பசு தானம் ஆன்மீகத்தில் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. தலையில் மகாதேவனும், நெற்றியில் கௌரியும், நாசியில் கார்த்திகேயனும், கண்களில் சூரியன்-சந்திரன், காதில் அஷ்வினி குமாரன், பற்களில் வாசுதேவனும், நாக்கில் வருணன், தொண்டையில் இந்திரன், முடியில் சூரிய கதிர்கள், குளம்புகளில் கந்தர்வன், வயிற்றில் பூமி, 4 மடிகளில் 4 கடல்கள், கோமியத்தில் கங்கையும், சாணத்தில் யமுனையும் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே பசு தானத்தை மிக உயர்ந்த தானமாக அனைவரும் கருதுகிறார்கள்.
பசு தானத்தின் போது கவனிக்க வேண்டியவை:
தானம் செய்ய வேண்டிய பசு கன்றுடன் கூடியதாக இருப்பதோடு, பசுவை சரியாக பராமரிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் மட்டுமே இந்த தானத்தை செய்ய வேண்டும். குறிப்பாக முதல் கன்றாக இருப்பதோடு பசுவின் கொம்பு, கால் குளம்பு போன்றவை உடையாமலும் நோய் நொடி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருக்கும் பசுவையே தானம் செய்ய வேண்டும்.
பசு தானம் எப்போது செய்யலாம்?
சித்திரை மாதத்தில் வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து பசுவை தானம் செய்வது சிறந்தது. கைலாசத்தில் சிவ கணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பலனை இந்த நாளில் பசு தானம் செய்பவர்கள் பெறுகிறார்கள். கிருஷ்ணருக்கு பிரியமான பசுவை தானம் செய்வதால் கிருஷ்ணரும் திருப்தி கொள்வதோடு அவருடைய ஆசியும் பூரணமாக கிடைக்கும். தாம் இறக்கப் போகிறோம் என எவர் ஒருவர் தெரிந்து கொள்கிறாரோ அவர் பசு தானத்தை செய்தால் எம பயம் விலகும்.
கோ தானம் செய்யும் முறை:
காலையில் குளித்து முடித்து சூரியனை வணங்கி தங்களது பிரார்த்தனையை சொல்லி பசுவை தானம் செய்பவர்கள் தானமாக வழங்கலாம். அப்போது பசு மாட்டிற்கு ஒரு வருடத்திற்கான தீவனத்தையும் சேர்த்தே தானம் வழங்க வேண்டும்.
தனி நபர்களுக்கு பசுவை தானம் கொடுக்க விரும்பாதவர்கள் கோவில்களுக்கு கொடுக்கலாம். கோவில்களுக்கு தருவதால் பசுவை பராமரிப்பதற்கான நிதியையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். பால் கறவை அல்லாத பசு, வயதான பசு, கன்று இல்லாத பசுக்களை எக்காரணம் கொண்டும் தானமாக கொடுக்கக் கூடாது.
பாவம் தீர்ந்து வம்சம் தழைக்கும்:
சுப காரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், வம்சம் தழைக்கவும், பாவங்கள் விலகவும் பசுவை தானம் கொடுக்கலாம். அறியாமல் செய்யும் அனைத்து பாவங்களும் ஒருவர் கோ தானம் செய்வதால் விலகும். மேலும், அவர் மோட்சத்துக்கு செல்வதோடு தன்னுடைய ஏழு தலைமுறைனர் மோட்சத்திற்கு போக வழிவகையை கோ தானம் ஏற்படுத்திவிடும்.
கடன் பிரச்சனை தீர்ந்து நிதி பற்றாக்குறை சீராகி புண்ணியம் கிடைப்பதோடு, பசு தானம் செய்பவர் தன்னுடைய முன்னோர்களையும் மோட்சத்திற்கு அனுப்புவதாகவே கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் பசு தானத்தை ஒரு முறையாவது வாழ்வில் செய்ய வேண்டும் என்பதை கடமையாக கொள்ளுங்கள்.