

பார்வதீஸ்வரர் கோவில் :
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பேருந்து நிலையத்தின் அருகில் கோவில்பத்து என்று அழைக்கப்படும் இடத்தில் திருத்தெளிச்சேரி - பார்வதீஸ்வரர் கோவில் உள்ளது.
ஐந்து நிலை ராஜ கோபுரம் :
இந்த ஆலயம் தேவார பாடல் சிறப்பு பெற்றது. மேற்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால், முன் மண்டபத்தில் ஸ்தம்ப விநாயகருடன் கொடி மரமும், பலி பீடமும் அமர்ந்த நிலையிலேயே நந்தி பெருமானும் காட்சி தருகின்றனர்.
உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த தனி கருவறையில் சிவபெருமான் 'பார்வதீஸ்வரர்' என்ற நாமம் தாங்கி காட்சி தருகிறார்.
தெற்கு நோக்கிய கருவறையில் அம்பிகை 'சுயம்வர தபஸ்வினி ' என்ற பெயரில் நின்ற கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறாள்.
இங்கு அம்பாள் தவமிருந்து இறைவனை பூஜித்த தலமாதலால் இங்கே அம்மைக்கு இத்திருப்பெயர் வந்தது.
சுவாமியும் 'பார்வதீஸ்வரர்' எனப் போற்றப்படுகிறார்.
சுவாமி சன்னதியை பார்த்தபடி எதிரில் வடபுறம் ஐந்து கர பெருமான் கணபதி அருள்பாலிக்கிறார். தென்புறம் நின்ற திருக்கோலத்தில் வள்ளி - தெய்வானை சமேத முருகன் காட்சி தருகிறார் .
இதை அடுத்து யானைகள் துதிக்கும் கஜலட்சுமி அருள்கிறார்.
அம்பாள் சன்னதியின் பக்கத்தில் தென் திசை நோக்கியபடி சிவகாமியம்மை உடன் இருக்க தில்லை நடராஜர் தனி சன்னதியில் ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார்.
மேற்கு பார்த்த கோவில் ஆதலால் துர்க்கை அம்மனும், அதை அடுத்து கோமுகமும் அதன் மேலே நான்முகனும், காட்சி தருகின்றனர். சண்டிகேஸ்வரர் சற்று தள்ளி தனியே வீற்றிருப்பது மாறுபாடான காட்சியாகும்.
வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களும், மேற்கு நோக்கிய கால பைரவரும் காட்சி தருகின்றனர்.
சனீஸ்வரர் இங்கே காகத்தின் மேல் வலது காலை மடித்து வைத்து இடது காலை தொங்க விட்டபடி அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சியாக உள்ளது.
சனீஸ்வரருக்குரிய திருநள்ளாறு கோவிலோடு இணைந்த கோவில் இது என்பதால், இங்குள்ள சனீஸ்வரருக்கு சிறப்பு உள்ளதாகவும், சனீஸ்வரருக்கு உற்சவ மூர்த்தி உள்ளது எனவும் கூறுகின்றனர்.
ஏர் ஏந்திய சிவன் :
மேற்குநோக்கிய தனிச் சன்னதியில் ஏர் ஏந்திய சிவன், சுவாமி, அம்பாள் என ஐம்பொன் திருமேனிகள் கண்ணை கவரும் காட்சியாக உள்ளது.
சுவாமி தன் கையில் ஏர் கலப்பையை ஏந்தியுள்ளது தான் மிக சிறப்பு.
சிவபெருமான் ஒரு ஆனி மாத நன்னாளில் இவ்வூரில் உள்ள நிலத்தை உழுது விதை தெளித்து முன்னோடியாக விவசாயியாக காட்சி தந்தார் என்கிறது தல புராணம். அதனால் தான் இவ்வூர் 'தெளிச்சேரி' என்று பெயர் பெற்றது.
இறைவன் கடலூர் மாவட்டம் திருத்தினை நகரிலும், திருவாரூர் மாவட்டம் திருநாட்டியத்தான் குடியிலும், கோவை மாவட்டம் பேரூரிலும் விவசாயியாக அம்பிகையுடன் வயலில் வேலை செய்த செய்திகள் என தல புராணம் கூறுகிறது.
இங்கு தட்சிணாமூர்த்தி சிங்கங்கள் தாங்கி நிற்கும் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துள்ளார். எனவே, இவர் அரசனைப் போல அள்ளித் தருவார் என்பது நம்பிக்கை. தெற்கு சுவரோரம் 63 நாயன்மார்களும் வரிசையாக வீற்றிருப்பது அற்புதமான காட்சி ஆகும்.
சூரியன் வந்து பூஜிப்பது :
இந்த சிவாலயத்தில் பங்குனி மாதம் 13ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை ஏழு நாட்கள் தினமும் மாலை 5:30 மணி அளவில் சூரிய கதிர்கள் லிங்கத்தை தழுவி அவரை பூஜிப்பது காணத்கிடைக்காத அரிய காட்சியாகும். இதனால் இறைவன் 'பாஸ்கரேஸ்வரர்' எனவும் அழைக்கப்படுகிறார்.
ஞானசம்பந்தர் பாடிய முதல் பதிகம் :
இங்கு சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையார், பிறந்த புனித பூமியினைக் கால்களால் மிதிக்கக்கூடாது என்று அஞ்சி மண்ணை தொட்டு வணங்கி விட்டு நகரின் வடபுறம் உள்ள திருத்தெளிச்சேரியிலேயே ஞானசம்பந்தர் நின்று கொண்டாராம்.
இங்கு சம்பந்தர் பூஞ்சோலைகள் சூழ்ந்த இக்கோவிலில் நுழைந்து முக்கண் சிவபெருமானை பணிந்து இத்தலத்தைப் பற்றி 11 தேவாரப் பாக்களைப் பாடி பொழிந்தார்.
விழாக்கள் :
இந்த ஆலயத்தில் சிவராத்திரி, நவராத்திரி உட்பட அனைத்து விழாக்களும் நடத்தப்படுகின்றன.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 9 வரையிலும் நடை திறந்திருக்கும்.