பூக்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்திவிடுகிறது. பூக்கள் கொண்டு வழிபடுவது சந்தோஷத்தை தருவதுடன் வாழ்வில் வளத்தையும் தருகிறது.
நாம் வழிபடும் தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களை கொண்டு பூஜித்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த சரியான பூக்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது ஆழமான பக்திக்கும், கடவுளின் நம்பிக்கைக்கும், கடவுள் அருள் கிடைக்கவும் வழி வகுக்கிறது.
மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும்போது மலரை முழுவதுமே அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாக கிள்ளி அர்ச்சனை செய்ய கூடாது..ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தினமும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு தினமும் ப்ரஷ்ஷான மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும்.
நிலத்தில் உதிர்ந்த பூக்களை எடுக்க கூடாது. நன்றாக ப்ரஷ்ஷாக இருக்கும் பூக்களை மட்டுமே பறிக்க வேண்டும். வாடிய தூசி படிந்த மலர்களை பறிக்க கூடாது. மலராத பூக்களையும் பறிக்க கூடாது. நன்றாக மலர்ந்த அன்று மலர்ந்த மலர்களை அன்றே இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு முறை சமர்பித்த மலர்களை மீண்டும் பயன்படுத்த கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மீண்டும் பயன்படுத்தலாம்.
பூக்களை பறித்த பிறகு சுத்தமாக நீரில் கழுவிய பிறகே சமர்ப்பிக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட பூக்கள், பூச்சிகளால் அரிக்கப்பட்ட பூக்கள் போன்றவற்றை படைக்க கூடாது. துளசி இலைகளை சங்கராந்தி மாலை நேரத்தில், தவசி அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக் கிழமை மற்றும் மாலை நேரம் போன்ற நேரங்களில் பறிக்க கூடாது.
வாடிப்போன, அழுகிப்போன,பூச்சிகள் கடித்த பூக்களை பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. எந்த தெய்வ வழிபாட்டிலும் துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்தது, தகாதவர்கள் தொட்டது மற்றும் நுகரப்பட்டது, ஈரத்துணி யில் சுற்றி வைத்தது, காய்ந்ததும், கீழே விழுந்தது ஆகிய பூக்களை அர்ச்சனைக்கு பயன்படுத்தக் கூடாது.
பூக்களின் மொட்டுகளை சமர்பிக்க கூடாது. ஆனால் சம்பங்கி பூ மற்றும் தாமரை மொட்டுகளை மட்டும் படைக்கலாம் திருடியோ அல்லது தானம் வாங்கியோ பூக்களை படைக்க கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
தாமரை, நீலோத்பவம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை அன்றே பயன்படுத்த வேண்டும் என்கிற விதி இல்லை. தாமரை 5 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும். வில்வ இலைகள் கிடைக்காத சமயத்தில் ஏற்கனவே கடவுளுக்கு படைக்கப்பட்ட வில்வ இலைகளை கழுவி மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.
கோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.
சிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும். இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும். . மேலும் தாமரை, சாம்பா, ரோஜா, மல்லிகை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம் , துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.
சிவபெருமான் : தும்பை ,கொன்றை போன்ற வெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது. மகிழம் பூ, நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம், செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.
துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணு கராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகளையும் பூஜைக்கு பயன்படுத்தலாம். முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும் இவை சிவ பூஜைக்கு உகந்தவை.
விஷ்ணு : இவருக்கு தாமரை மலர் தான் மிகவும் பிடித்தது. பிங்க் நிற தாமரை, குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள், போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். துளசி இலைகளை எண்ணிக்கையில் சமர்ப்பிக் கலாம்.விஷ்ணுவை அட்சதையால் அர்ச்சிக்கக் கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தில் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வர்ச்சனை செய்யலாம்.
அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் மஞ்சள் நிற மலர்கள் கொண்டு அர்ச்சிக்கலாம்.