

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஊரான திருப்பனந்தாளுக்கு மிக அருகிலுள்ள கிராமம் குறிச்சி. இங்குள்ள ஸ்ரீ கல்யாண கோதண்ட ராமர் சுவாமி திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நாயக்கர் காலத்தில் கட்டுமானம் என்று சொல்லப்படுகிறது.
மூலவர் ஸ்ரீ கோதண்ட ராமர்
தாயார் சீதாபிராட்டி மற்றும் லட்சுமணனுடன் காட்சி தருகிறார். இவரை வணங்க குடும்ப ஒற்றுமை, நல்ல வாழ்க்கை, கல்யாண யோகம் போன்றவை கிடைக்கும் என்று பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். இங்கு சப்தமி திதி மற்றும் புனர்பூச நட்சத்திரம் இணையும் நாட்களில் கொக்குகள் ராம நாமம் ஜெபிப்பதாக நம்பப்படுகிறது.
முனிவர்கள் இத்தலத்தில் கோதண்ட ராமரை வழிபடும் பொழுது அருகில் இருந்த மந்தாரை மலர்கள் கொக்குகளாக மாறி முனிவர்களுடன் இணைந்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த குறிச்சி கோதண்டராமர் கோவில் மந்தாரை கொக்குகளின் தெய்வீக வழிபாட்டிற்காக ஆன்மீக பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது.
இக்கோவிலில் உள்ள தங்க மந்தாரை மரத்தில், அதன் மலர்கள் பூக்கும் பொழுது இயற்கையாகவே கொக்குகள் போன்ற வடிவில் காட்சி தருகின்றன. இந்த மலர்களின் இதழ்கள் மற்றும் காம்புப் பகுதிகள் இணைந்து, ஒரு கொக்கு அமர்ந்து இருப்பது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. இது இறைவனை கொக்குகள் வந்து வழிபடுவது போன்ற ஒரு தெய்வீக உணர்வை தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
'ஊர்மெச்ச வாழ வேண்டும்' என்கின்ற ஆசை உள்ளவர்கள் வர வேண்டிய திருத்தலம் இது. குறிச்சி கோதண்டராமர் கோவிலில் இன்றளவும் சப்தமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் இணைந்து அமையும் தினங்களில் 7 தங்க மந்தாரை கொக்குகளும் முனிவர் கூட்டத்துடன் இணைந்து இந்த கோவிலில் ராமநாம ஜெபம் செய்வதாக ஐதீகம்.
குறிச்சி கல்யாண கோதண்டராமர் கோவிலின் அர்த்தமண்டப கூரைகள் பதினெட்டாம் நூற்றாண்டின் சுவரோவியங்களால் வரையப்பட்டுள்ளன. மராட்டிய காலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் ராமாயணம் மற்றும் பிற புனித இதிகாசங்களின் காட்சிகளை சித்தரிக்கும் மூலிகை சாயங்களைப் பயன்படுத்தி வரைந்ததாக கூறப்படுகிறது. இக்கோவில் மிகவும் தனித்துவமானது. இராமாயணக் கதை கூரைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.