சிவபக்தரான சிவகுப்தன், சுதன்மை தம்பதியரின் வயல் அறுவடைக்குத் தயாரானது. சுதன்மை, தன் மகள் அரதனவல்லியக் காவலுக்கு அனுப்பினாள். விளையாட்டுப் பெண்ணான அரதனவல்லி வயலுக்குப் போகமால் அருகிலிருந்த மலர்ச்சோலைக்கு சென்று விட்டாள். மகளுக்கு சுதன்மை தயிர்ச்சோறு கொண்டு சென்றாள்.
அங்கே, அவளது மகள் வடிவில், இக்கோயிலின் அம்பாள் காவல் செய்து கொண்டிருந்தாள். அன்புடன் சுதன்மை கொடுத்த சோறை சாப்பிட்டாள். சுதன்மை வீட்டுக்கு வரவும், அரதனவல்லியும் உள்ளே வந்து, அம்மா! பசிக்கிறது, சோறு போடு என்றாள். அதன் பின் அவளை விசாரிக்க, அம்பாளே மகள் வடிவில் வந்தது புரிந்தது.
நெல் வயலில் காட்சி தந்தவள் என்பதால், இந்த அம்பிகைக்கு நெல்லையம்மன் என்று பெயர் வந்தது. இவளை வழிபட்டால் நம்மைச் சேர்ந்த பொன், பொருள், பெண்குழந்தைகள் என அனைத்திற்கும் காவலாக துணை நிற்பாள்.
கோயில் முன்புறம் சதுரவடிவில் உள்ள தெப்பம் அனைவரையும் கவரும். நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கி.மீ., தூரம் இருக்கிறது.
கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவர் முத்துராமலிங்கதேசிகர். இவரே கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளைச் செய்தவர். இவருக்குப் பின் வந்த சிதம்பரதேசிகரின் காலத்தில், கோவிலூர் புராணத்தை மீனாட்சி சுந்தரனார் எழுதினார்.
திருக்கானப்பேர் என்னும் காளையார்கோவில் பகுதியை வீரபாண்டியன் ஆண்டு வந்தான். இக்கோயிலில் உள்ள காளீசர் அருளால் வாள் ஒன்றை, அந்த மன்னன் பெற்றிருந்தான். அதற்கு கொற்றவாள் என்று பெயர். கொற்றவாளுடன் போர் புரிந்து பகை மன்னர்களை வென்றான். ஒருநாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது சிவன் மன்னனோடு விளையாடல் புரியத் தொடங்கினார். காட்டில் மாயமான் ஒன்று எதிர்ப்பட்டது. துரத்திச் சென்ற பாண்டியனின் கையிலிருந்த வாளைச் சிவன் காணாமல் போகச் செய்தார். வாளைத் தேடி மன்னன் அலைந்தபோது, அங்கு ஒரு பக்தனையும், புலியையும் சிவன் அவன் முன்னால் வரச்செய்தார். புலிக்குப் பயந்த பக்தன், அபயம் அபயம் என்று அலறினார். அவர் மீது இரக்கம் கொண்ட மன்னன், புலியுடன் சண்டையிட்டு தன்னுயிரைக் கொடுக்கவும் முன் வந்தான். அப்போது புலியும், பக்தனும் அந்த இடத்திலிருந்து மறைந்தனர். அங்கிருந்த வன்னிமரத்தடியில் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் தென்பட்டது.
மன்னனின் கொற்றவாள் அதன் முன் இருந்தது. இது சிவனின் திருவிளையாடல் என்பதைப் புரிந்து கொண்ட மன்னன், மனம் மகிழ்ந்து அந்த லிங்கத்தையே மூலவராக்கி, ஒரு கோயில் எழுப்பினான். கொற்றவாளை வழங்கிய சிவன் என்பதால், ராஜகட்க பரமேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. கொற்றவாளீஸ்வரர் என்றும் குறிப்பிடுவர்.
ஓரு முனிவரின் தவத்திற்கு அருள்புரிந்த இந்த சிவனுக்கு திரிபுவனேனஸ்வரர் என்றும் பெயருண்டு.
கோவில் இருப்பிடம் : சிவகங்கையில் இருந்து கோவிலூருக்கு பேருந்து வசதி உள்ளது.