வாலி பூஜித்த சிவன்!

வாலி பூஜித்த சிவன்!

“திருக்கோயில்களைக் காண்கிற போதும், இறைவன்-இறைவியை வணங்கிடும்போதும், மனசுக்குள் பூரணமாகத் தியானிக்கும்போதும், பிராகாரங்களை வலம் வரும்போதும் நமக்குக் கிட்டு கின்ற நிம்மதியும் மனநிறைவும் வேறு எதிலுமே கிட்டுவதில்லை. போன மாதம்தான் இத்திருக் கோயிலுக்கு நான் வந்திருந்தேன். மறுமுறை என்னை இந்த மாதமே வா என்று அழைத்து விட்டார் வாலீஸ்வரர். அதிலும் ஆலயத்தின் உட்பிராகாரத்தில் எழுந்தருளியிருக்கும் ஏழரை அடி உயர தண்டாயுத பாணி, என்னை மிகவும் வசீகரித்து விட்டார்!” என சிலிர்ப்புடன் சொல்கிறார், நாம் யதேச்சையாகச் சந்தித்த திருச்சியிலிருந்து வந்திருக்கும் அன்பர் டி.எம்.ஆர். சந்திரசேகரன். சந்தித்த இடம் வாலிகண்டபுரம் வாலீஸ்வரன் கோயில்.

நாற்கரச் சாலையிலிருந்து ஐந்து நிமிட நடைப் பயண தூரத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இறைவி  வாலாம்பிகை. தூரத்திலிருந்து பார்க்கும்போதே அழகிய ஏழு நிலை  ராஜகோபுரம், அப்படியே நம் மனசுக்குள் எழுந்து நிற்கிறது. திருவுருவச் சிலைகள் ஏதுமற்ற, கலை வேலைப்பாடுகளுடனான பீடங்கள் பொருந்திய ராஜகோபுரம். இது,  ‘சகஸ்ர கோபுரம்’ எனக் குறிப்பிடப்படுகிறது. கோபுர உச்சியில் ஒன்பது  கலசங்கள் மிளிர்கின்றன.

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக் கோயில். வாலி பூஜை செய்த இறைவனுக்கு வாலீஸ் வரர் என்றும், ஊருக்கு வாலி கொண்டபுரம் என்றும் பெயர். அதுவே மருவி தற்போது வாலிகண்டபுரம். ஆனாலும், முதலாம் ராஜராஜ சோழன் தனது வெற்றிப் பெயர்களுள் ஒன்றான ‘கேரளாந்தகனை’ நினைவு படுத்தும் விதமாக, இந்த ஊருக்கு கி.பி. 1013-ல் ‘கேரளாந்தகபுரம்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்ததாகக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

 ராஜகோபுரத்தின் முன்பாக இடதுபுறம் நடராஜர் மண்டபம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானின் திருவுருவம். மண்டபத் தூண்களில்  மயக்கும் சிற்பங் கள். கி.பி. 1514இல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம்.  ராஜகோபுரத்துக்கு நேரெதி ராகவும், நடராஜர் மண்டபத்துக்கு தென் எதிராகவும் சிறிய கல் மண்டபத்தில் பாலகணபதி.  ராஜகோபுரத் திருவாயில் தூண்களின் இருபுறமும் எதிர் எதிராக எழிலாக வடிவுருவம் தாங்கி நிற்கின்றனர் இரண்டு எழில் அரசிகள். அவர்களின் மார்புப் பகுதிகளும், கால்களில் ஒரு பகுதியும் ஏதோ ஒரு காலத்தில் உடைத்து எறியப்பட்டுள்ளன. ஒரு நிமிடம், ஏனோ நம் மனமும் உடைந்து போகிறது.

கோபுரத்தின் உட்புறம் வலது பக்கமாக ஈசான்ய மூலையில்  சரவண தீர்த்தம் எனப்படும் திருக்குளம்.  முன்னொரு காலத்தில் ஆண்டுக்கொருமுறை இதில் தெப்பத் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. திருக்குளத் தூணில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம். இங்கு மட்டுமே என்று எண்ணிட வேண்டாம். திருக் கோயிலில் ஆங்காங்கே மண்டபத் தூண்களில் வாலி சார்ந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் பற்பல தூண்களில் வாலி மயமாகவே  காட்சியளிக்கின்றன வெவ்வேறு வகை சிற்பங்கள்.

சற்றே மெலிந்துபோன கொடிமரத்தில் ஏனோ கம்பீரமும் கலையழகும் மிஸ்ஸிங். மண்டபத்தில் திருநந்திதேவர் சதா சர்வகாலமும் வாலீஸ்வரனைக் கண்டுருகும் காரணத்தால் அமைதி தவழ வீற்றிருக் கிறார். இத்திருக்கோயிலில் மூன்று இடங்களில் முறையே மூலஸ்தானத்தின் எதிரே அடுத்தடுத்து பின்தொடரும் வரிசையாக பால நந்தி, வாலிப நந்தி, யவ்வன நந்தி என அமையப்பெற்றுள்ளனர். மகா மண்டபத்தின் உள்ளே மேற்கு நோக்கி பைரவர்.  இடுப்பிலே நாகப்பாம்பை அரைஞாண் கயிறாகவும், மண்டையோடுகளை பூணூலாகவும் அணிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். அஷ்டமி பூஜை இங்கு வெகு சிறப்பு.

அர்த்தமண்டப வாசலையொட்டி வலதுபுறம்  கல்யாண விநாயகர். வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள். உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி. எதிரே பால நந்தி. அதன் தென்புறத்தில் 1008 பாணம் உள்ளடக்கிய ஒரே லிங்கம். கருவறையில் வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியானதால், சற்றே ஒரு பக்கமாக சாய்ந்து காட்சியருளிக் கொண்டிருக்கிறார். இங்கு வந்திருந்து பூஜை செய்வித்துதான், எதிராளியின் பலத்திலிருந்து சரி பாதியினைத் தன் பலத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டு எவரையும் வீழ்த்தும் சக்தியினை வாலி பெற்றதாகப் புராண வரலாறு.

மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி துர்க்கை அம்சத்துடன் அன்னை வாலாம்பிகை. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். கருவறைக்குப் பின்புறமாக மகா மண்டபச் சுற்றில் கை பின்னமான தண்டாயுதபாணியும், பின்னமான தட்சிணாமூர்த்தியும் பதிக்கப்பட்டுள்ளனர். காது மடல் நீண்டு தொங்கும் ஆதி தண்டாயுதபாணி. அடுத்து வடமேற்கு மூலையில் ஆதிகாலத்தில் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கொற்றவை.

“மகா மண்டப பிராகாரச் சுற்றில் தென் திசையில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் ஏழரை அடி உயரத்தில் கையில் வேலுடன் கருணையே வடிவமாகக் காட்சி யளிக்கிறார் தண்டாயுதபாணி. அருணகிரிநாதருக்கு முக்திக்குரிய தலம் எதுவென்று இங்குதான் அருளப்பட்டது. தண்டாயுதபாணியின் திருமுகம் மேற்குப்புறமாக சற்றே சாய்ந்து நளினமும் சாந்தமும் அருளும் நிறைந்து இங்கு காணப்படுவது மிக மிகச் சிறப்பு. வடக்கு திசைநோக்கிய இந்த தண்டாயுதபாணி, எம பயம் நீக்கி நீண்ட ஆயுளைத் தர வல்லவர். பங்குனி உத்திரத் திருவிழா இங்கு மிக முக்கியத் திருவிழா!” எனக் குறிப்பிடுகிறார் திருக்கோயிலின் அர்ச்சகர்களில் ஒருவரான சண்முக சர்மா. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com