திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கடையம் பகுதியில் அமைந்திருக்கிறது நித்தியகல்யாணி வில்வவனநாதர் ஆலயம். இக்கோயிலில் சிவன் வில்வவன நாதராகவும் பார்வதி நித்தியகல்யாணி அம்பாளாகவும் அருள்பாலிக்கின்றனர்.
ஒரு காலத்தில் நித்தியகல்யாணி தாயார் கிழக்கு பார்த்த முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அம்மன் மிகுந்த ஆக்ரோஷமாக காணப்பட்டதாகவும் இதனால் காலை வேலையில் மட்டுமே அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
பின்பு நம்பூதிரிகள் வரவழைக்கப்பட்டு அம்மனை தெற்கு பார்த்த முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அதன் பின்பு எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றும் வரலாறு கூறுகிறது.
சுப்ரமணியர் வள்ளி தெய்வானை உடனும், தட்சிணாமூர்த்தி 18 சித்தர்களும் மகாலட்சுமி, கஜலட்சுமி பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். தசரதன் மன்னர் வேட்டைக்கு சென்றிருந்தபோது சரவணன் என்ற இளைஞர் கண் தெரியாத பெற்றோர்களை தனது தோளில் சுமந்து கொண்டு காட்டு வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த வேலையில் நித்தியகல்யாணி வில்வன நாதர் கோயில் அருகே வரும்போது அங்கு ஒரு சுனை ஓடுவதைக் கண்டு நீர் அருந்த சென்றார் அந்த இளைஞர். அச்சமயம் தசரத மன்னர் மிருகம் தண்ணீர் அருந்துவதாக எண்ணி அம்பு எய்த தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த இளைஞன் மீது அம்பு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதனை அறிந்து அவனது பெற்றோர் தசரதனை நோக்கி வயதான காலத்தில் புத்திர சோகத்தினால் மாண்டு போவாய் என்று சாபம் கொடுத்தனர். இதனைக் கேட்டு மனம் நொந்து போன மன்னர் இக்கோயிலுக்கு வந்து வில்வவன நாதரை மனமுருகி வேண்டி வழிபட்டதாக கூறப்படுகிறது.
இதனை பறைசாற்றும் விதமாக இன்றும் இக்கோயிலில் சுனை தீர்த்தமும் காணப்படுகிறது. இக்கோயிலை சுற்றி எப்பொழுதும் அமைதியாகவே காணப்படுகிறது. இக்கோயிலில் தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. மரத்தில் உள்ள வில்வ காயை உடைத்து பார்த்தால் சிவன் அமர்ந்திருப்பது போன்று காணப்படும்.
திருமண வழிபாடு மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து சுனையில் நீராடி குழந்தை வரம் வேண்டினால் அவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் கூறுகின்றனர். சித்திரை மாதத்தில் பெரும் திருவிழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆவணி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் தெப்ப திருவிழாவும், ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணமும், கந்தசஷ்டி, சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் திருவாதிரை அன்று ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலுக்குச் செல்ல திருநெல்வேலி பேருந்து நிலையத்திலிருந்து கடையம் செல்ல நகர பேருந்து வசதி உள்ளது.