

விநாயகர் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது இடுப்பிற்கு மேல் கழுத்துவரை தேவ உடம்பு மற்றும் யானைத்தலை. இடுப்புக்கு கீழே மனிதத் தோற்றம். அனைத்து உயிர்களிலும் விநாயகர் இருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.
விநாயகர் வரலாறு:
விநாயகரின் மூன்று கண்களாக சூரியன், சந்திரன், அக்னி ஆகியவைகள் உள்ளன. அவரின் நீளமான காதுகள், பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திக்கு வழி செய்யும். பாசாங்குசம் ஏந்திய கை படைத்தலையும், அங்குசம் ஏந்திய கை அழித்தலையும், மோதகம் ஏந்திய கை அருளையும், தும்பிக்கை மறைத்தலையும் குறிக்கும் வண்ணம் உள்ளது. விநாயகரின் பெரிய வயிறு, அண்ட சராசரங்களை அவர் அடக்கி ஆள்வதையும், பாதங்கள் பக்தர்களைக் காப்பதையும் குறிப்பிடுகின்றன.
தோப்புக்கரணமும், தலைக் குட்டலும் கதை:
முன்னொரு காலத்தில், கஜமுகாசுரன் என்கிற அரக்கனின் எதிரே தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக்கொண்டும், தோப்புக் கரணமும் போட்டனர். தேவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, விநாயகர், கஜமுகாசுரனை அழித்ததும், தேவர்கள் மகிழ்ந்து, தலையில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது ஆகியவைகளை, விநாயகருக்கு பயபக்தியுடன் செய்தார்கள்.
ஒரு சமயம், இந்திரனின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்கிய விநாயகர், காகமாக வடிவெடுத்து, அகத்தியரின் கமண்டல நீரைக் கொட்டினார். கமண்டலத்தில் இருந்த காவிரி நீர் பூமியெங்கும் பாய்ந்தது. அகத்தியர் காகத்தை விரட்டுகையில், விநாயகர், சிறுவனாக மாறி ஓடினார். ஓடிய சிறுவனை பிடித்து அவன் தலையில் குட்டுப்போட அகத்தியர் கையை ஓங்கினார்.
சிறுவன் விநாயகராக காட்சி அளித்ததும், அகத்தியர்,
ஓங்கிய கைகளினால் தனது தலையிலேயே குட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்டார். விநாயகர் அவருக்கு கருணை காட்டி, தன்முன் பக்தியுடன் தலையில் குட்டிக் கொள்பவர்களுக்கு அருள் செய்வதாகக் கூறினார். விநாயகரை பூஜை செய்கையில் மற்றும் அவரைப் பார்க்கையில், தலையில் குட்டிக்கொள்ளும் பழக்கம் பலருக்கும் வழக்கமாகிவிட்டது.
அன்புக்குத் தலை வணங்கிய விநாயகர் கதை:
தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த நந்தனார் என்பவர் ஒரு சிவபக்தர். மேலும், விநாயகரை அன்புடன் துதிப்பவர். இவர் ஒரு சமயம் திருப்புன்கூர் திருத்தலத்தில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்கச் சென்றார். அந்நாட்களில், தாழ்ந்த குலத்தினர், கோவிலின் உள்ளே சென்று தரிசிக்க. அநுமதி கிடையாது.
நந்தனார் வெளியே நின்று சிவபெருமானைத் தரிசனம் செய்கையில், நந்தி தேவர், சிவனை மறைத்தவாறு இருந்ததால், நந்தனாரால் இறைவனைப் பார்த்து தரிசிக்க இயலவில்லை. மிகுந்த வருத்தமுற்ற நந்தனார், " இறைவனே! சற்றே நந்தியை விலகியிருக்கச் சொல்லக்கூடாதா..?" என மனமுருகி வேண்டினார். என்ன ஆச்சரியம்.! நந்தி சற்றே விலக, சிவனை மனங்குளிர தரிசித்த நந்தனார் ஆடிப்பாடினார்.
பிறகு நந்தனார், கோவிலை வலம் வருகையில், ஒரு குட்டையைக் கண்டார். இதை தூர்வாரி, நல்ல பெரிய குளமாகச் செய்தால், பக்தர்கள் பயன் பெறுவார்கள். என்னிடம் அதற்கான வசதி இல்லையே விநாயகரே என மனதில் எண்ணிய விநாடியில், விநாயகர் ஒரு கூலி ஆள் மாதிரி வந்து "வெட்டித் தருகிறேன். கூலி வேண்டுமென்றார்." "என்னால் முடிந்த கூலி, ஐந்து படி நெல்தான்" என நந்தனார் அன்புடன் கூறினார்.
நந்தனாரின் அன்பு வேண்டுகோளுக்குத் தலை வணங்கி சரியென்ற விநாயகர், நந்தனார் கோவிலை வலம் வருமுன், பெரிய குளமாக வெட்டி முடித்து மறைந்துவிட்டார்.
விநாயகரின் லீலைகள் பலவிதம்.
"மூஷிக வாகன மோத ஹஸ்த
சாமர கர்ண விலிம்பித சூத்ர
வாமன ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே!"
என்கிற விநாயகர் துதியைக் கூறி, விநாயகரை அன்புடன் வணங்கி, அவரது அருளை நாமும் பெறுவோம்.
நமது பாரம்பரிய புராண வரலாறுகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் ஆன்மீக ஈடுபாடு அதிகரித்து, வாழ்வின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நேர்மறை ஆற்றல் மனதை வந்தடைகிறது.