குளிர்கால பிள்ளையார் சதுர்த்தியா? என்ன? இதன் விபரம் தெரிந்துகொள்ளலாமே!
மராத்திய ஹிந்து சந்திர நாட்காட்டியின்படி (Lunar Calander), மாசி மாதத்தில், சுக்ல பக்ஷ நிலவின் வளர்பிறை கட்டத்தின் நான்காவது நாளன்று பிள்ளையாரின் பிறந்தநாள் வருகிறது. இது மாஹி கணபதி; குளிர்கால பிள்ளையார் சதுர்த்தி; தீல் குந்த் சதுர்த்தி; தீல்குந்த் செளத், வரத் சதுர்த்தியென பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது.
விநாயகர் தனது தாயார் பார்வதி தேவிக்காக காவல் இருந்து, தலையைத் தியாகம் செய்து, தும்பிக்கை முகத்தோனாக ஆகிய நாளே, அவரது பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறதெனக் கூறப்படுகிறது.
மராட்டிய மாநில கொண்டாட்ட விபரங்கள்
விநாயக சதுர்த்தி விழாவைப் போலவே, மாஹி கணபதிக்கும் விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அநேகர் வாங்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
விநாயகர் பக்தர்கள், அரைத்த எள்ளை உபயோகித்து குளித்தபிறகு பூஜைகள் செய்வது வழக்கம். விநாயகரை வைப்பதற்காகவே அழகான மண்டபம் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
விநாயகரின் உருவச் சிலைக்கு அருகே மஞ்சள் அல்லது காவிப்பொடியில் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, சந்தனம் - குங்குமம் இட்டு, மலர்களினால் அர்ச்சிப்பார்கள். கணபதி ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களைக் கூறி தீபாரதனை செய்து, எள்ளினால் செய்த உணவுப் பதார்த்தங்களை நிவேதனம் செய்வார்கள்.
பிள்ளையார் ஊர்வலம்
இந்நன்னாளில், மராட்டிய மாநிலத்திலுள்ள சிஞ்சீவாட்லிருந்து, பிள்ளையார் சிலையை பல்லக்கில் வைத்து புகழ்பெற்ற மோர்காவ் விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக வருவது வழக்கம். சிஞ்சிவாட் மங்கள மூர்த்தி கோயிலில் இருந்து புறப்படும் பல்லக்கு யாத்திரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பது வழக்கம். பக்தர்கள் கால்நடையாக பின்தொடர வரும் பல்லக்கு யாத்திரை, இரண்டு நாட்கள் எடுக்கும்.
புனேயிலிருந்து 65 கி.மீ. தூரத்திலிருக்கும் மோர்காவ் கிராமத்திலுள்ள
ஸ்ரீ மயூரேஷ்வர் கோயிலில் வீற்றிருக்கும் கணபதியான
அஷ்ட விநாயகர்களில் முதல்வராவார்.
கோவாவில் கொண்டாட்டம்
கோவாவிலும், இது போக்டா கணேஷ் உத்சவம் மற்றும் மாஹிகணபதியென அழைக்கப்படுகிறது. அநேகர் இதனைக் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக, கோவா வாஸ்கோடகாமா பகுதியில் மிகவும் சிறப்பாக ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவில், குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களென அனைவரும் கூடுகின்றனர். வீடுகளுக்கு அழைத்து விருந்து படைப்பது வழக்கம்.
கணேஷ் ஜெயந்தி (மாஹி கணபதி) கொண்டாட்டத்திற்கு பிறகு, சிலைகள் மஞ்சள் மற்றும் காவிபொடிகளில் செய்த பிள்ளையார்களை நான்காவது நாள் ஆறு அல்லது கடலில் கரைக்கின்றனர்.