துறவி ஒருவர் அந்த நாட்டுக்கு புதிதாக வந்திருந்தார். தலைநகர் வீதியில் அவர் கண்ணில்பட்டது ஒரு பொற்காசு. அதை எடுத்து கையில் வைத்து கொண்டார். எதையும் சேர்த்து வைக்கிற பழக்கம் இல்லை அவருக்கு. இறைவன் கருணையால் மக்கள் கொடுப்பார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டவர். அதனால் இந்த பொற்காசு அவருக்கு அநாவசியமாகபட்டது.
யாரிடமாவது கொடுக்கலாம் என முடிவெடுத்து சுற்று முற்றும் வீதியில் பார்க்க மக்கள் பர பரப்பாக வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டில் உள்ளோரும் மகிழ்வாக பேசிக் கொண்டு இருந்தனர். அந்தக் காசை பெறும் அளவுக்கு நிறைவு இல்லாத பேராசை மனிதர்கள் கண்ணில் படவில்லை.
மாலையில் சோர்வாக ஒரு சத்திரத்தில் தங்கினார் துறவி.
மறுநாள் காலை பூஜை செய்துகொண்டிருந்தபோது, வீதி வழியாக மன்னன் தனது படைகளோடு போய்க் கொண்டிருந்தான். துறவி வந்திருப்பதை அறிந்த மன்னன், அவரை வணங்கி விட்டு "என் தேசத்தை பெரும் பேரரசாக மாற்றும் ஆசையோடு பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செய்கிறேன்... போரில் நான் ஜெயிக்க வேண்டும் என்று ஆசீர்வதியுங்கள்" என்றான்.
துறவி சிரித்தார். தன் கையில் இருந்த பொற் காசை அவன் கையில் கொடுத்தார்.
மன்னர், இதை எதற்காக எனக்கு தருகிறீர்கள்? இதன் அர்த்தம் என்ன? என்று கேட்டான்.
உடனே, துறவி "நேற்று இந்தக் காசு எனக்கு கிடைத்தது. வாழ்வில் நிறைவில்லாத ஒரு மனிதருக்கு இதை கொடுக்க உன் தலைநகர் வீதிகளில் திரிந்தபோது அப்படி ஒரு மனிதர் என் கண்களில் படவில்லை. மக்கள் எல்லோரும் நிறைவோடு வாழ்கிறார்கள்.
உன்னையும் நேற்று முழுக்க உயர்வாக நினைத்தேன். ஆனால் நீயோ உன் தேசத்தின் எல்லைகளில் நிறைவில்லாமல் அண்டை தேசத்தின் மீது போர் தொடுக்கிறாய். உன் நாட்டில் இருக்கும் ஒரே பேராசைக்காரன் நீ தான். அதனால்தான் உனக்கு அந்தக் காசை கொடுத்தேன்' என்றார் துறவி.
மன்னன் தன் தவறை உணர்ந்து 'எனக்கு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி' என சொல்லி விட்டு படைகளோடு தன் அரண்மனைக்கு திரும்பினான்.
புதிய இலக்குகளை தேடலில் தவறில்லை. ஆனால் அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தொலைக்காமல், இருப்பதில் நிறைவு காணத் தெரிந்தால் உடலும் மனமும் உற்சாகம் பெறும் என்றார் துறவி.