

"அது அந்தக் காலம்! அது அந்தக் காலம்!
அடிக்கடி புலம்புவதேன் அப்பத்தா?"
"அப்பத்தா சொல்லுதேன். கேட்டுக்கோ பேராண்டி!
அன்பால் அனைவரையும்
அனுசரித்துச் செல்லவும்,
ஆதரவுடன் இருகரம் நீட்டவும்,
இன்முகத்துடன் பழகவும்,
ஈதலைக் கற்றுக் கொடுக்கவும்
வழி வகுத்தது அந்தக் காலம்!
உதவி செய்ய முன்வந்து
ஊருக்கும், நாட்டுக்கும் உழைக்கவும்,
எதிலும் துணிவுடன் செயலாற்றி,
ஏற்றத்தாழ்வின்றி இணைய வைத்தது அந்தக் காலம்!
ஐயமின்றிப் பிறர்க்குத் தொண்டாற்றவும்,
ஒற்றுமையாய் ஓட்டு வீட்டில் குடும்பத்தினருடன் உறவாடவும்,
ஔடதமென மனிதநேயத்துடன் பழகவும், நற்பணிகளை ஆற்றவும் கற்றுக்
கொடுத்தது அந்தக் காலம்!
பெரியோர்க்கு மதிப்பும், மரியாதையும் அளித்து,
பிறர் குறையில் நிறைகாணவும்,
உற்றார் உறவினருடன் கூடி வாழ்ந்தும்,
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ,
அறிவுறுத்தியது அந்தக் காலம்!
விளையாட்டுத் திடல்கள்
விலை மணலாகாமல் தடுத்து,
விளையாட்டுகளில் இளைய சமுதாயம் உற்சாகத்துடன்
பங்கேற்று விளையாடச் செய்து,
உடலும், மனமும் வலிமை பெற
உதவியது அந்தக் காலம்!
சுற்றுப்புறச் சூழலைச்
சுகாதாரப் பசுமையாக்கி,
மாசு மறுவற்ற காற்றை உற்பத்தி செய்து,
வழிப்போக்கர்கள் வழியில்
இளைப்பாற உதவும்
மரங்களைப் பாதுகாத்தது
அந்தக் காலம்!
இயற்கை உணவினைக் கடவுளாக வணங்கவும்,
சுத்தம்-சுகாதாரம் கடைபிடிக்கவும்,
கலாச்சாரம், மொழி, பண்பாடு போன்ற
புரிதல்களைப் புரிய வைத்தது
அந்தக் காலம்!
குறைகளிலும் நிறைவைக் கண்டது
அந்தக் காலம்!
நிறைவுகளில் வெறுமையைக் காண்பது
இந்தக் காலம்!
புரிந்ததா பேராண்டி?"
"அருமை அப்பத்தா! அருமை! அது அந்தக் காலம்! அருமையான, பொன்னான காலம்!"