

மரத்தை மடியில் வைத்து கொஞ்ச முடியும். நம்புவதற்கு கஷ்டமாக உள்ளதா? மேலே படியுங்கள். குட்டி குட்டி பொன்சாய் மரங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா.? ஜப்பானில் பொன்சாய் மரங்களில்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.
சீனாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், ஜப்பானில் தான் இந்த வாமன விருட்சங்களுக்கு அதிக ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கிறது.
பொன்சாய் என்றால் ஜப்பானிய மொழியில் தட்டில் வளர்க்கப்படுவது என்று அர்த்தம்.
பொன்சாய் மரங்கள் மரபணு ரீதியாக இயற்கையாகவே தோன்றியவை அல்ல. செடி பருவத்திலிருந்தே பார்த்து பார்த்து கிளைகளையும் வேர்களையும் ட்ரிம் செய்து வயர்களை வைத்து குறிப்பிட்ட தோற்றத்தில் ஷேப் செய்து வளர்க்கிறார்கள். மற்ற மரங்களை இவ்வாறு வளர்க்க முடியாது என்பதை மறக்க கூடாது.
இந்த பொன்சாய் (Bonsai trees) மரங்கள் அடங்கிய ஒரு தோப்பையே வீட்டில் வைத்திருக்கும் பணக்காரர்கள் ஜப்பானில் உண்டு.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போது, புல் பூண்டு கூட தப்ப முடியவில்லை. ஆனால், பொன்சாய் மரங்களை அணுகுண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்போது அமெரிக்காவில் இந்த மரத்தை அமைதி விருக்ஷமாக கொண்டாடுகிறார்கள்.
சிறியதாக இருந்தாலும் பொன்சாய் வளர்ப்பது என்பது மலிவான ஹாபி கிடையாது. ஜூனிபர் என்ற வகையை சேர்ந்த ஒரு பொன்சாய் 1 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டு உலகிலேயே அதிக விலைக்கு போன ஒரு தாவரமாக பேர் வாங்கியது.
குட்டியாக இருந்தும் பொன்சாய் மரங்கள் வீட்டுக்குள் அடைபட்டு இருக்கும் இன்டோர் தாவரமாக இருக்க விரும்புவதில்லை. அவை மற்ற தாவரங்களை போல சூரிய வெளிச்சம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றை அனுபவிக்க விரும்புகின்றன. இதை கராத்தே கிட் மரம் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்.
பொன்சாயும் தண்ணி போடும் தாவரம் தான். ஆனால், இது அளவுக்கு அதிகமாக குடிக்க விரும்பாது. ஆகவே, அளவுக்கு அதிகமாக தண்ணீர் விடக்கூடாது. இதன் வேர்கள் எப்போதும் ஈரமாக இருக்கும் படி பார்த்துக் கொண்டால் போதும். எப்போதும் இதன் இலைகளையும் கிளைகளையும் ட்ரிம் செய்து வைத்திருந்தால் மட்டுமே இந்த பொன்சாய் மரங்களின் குட்டி தோற்றத்தை பாதுகாக்க முடியும். அப்படி செய்யாமல் விட்டால் இவை பெரிதாக வளர்ந்து விடும். நம் நாட்டிலும் பொன்சாய் மரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதன் விலையை கேட்டால் தலை சுற்றி விடும். பல ஆயிரங்கள் செலவாகும். தயாரா?